Wednesday, June 8, 2016

தீர்க்கதரிசி - சட்டத்தைப் பற்றி

சட்டத்தைப் பற்றி
பிறகு ஒரு வக்கில்
சட்டத்தைப் பற்றி
சொல்லுங்கள் ஆசானே என்றதும்
அவர் பதில் சொன்னார்:

குழந்தைகள் கடல் மணல் பரப்பில்
மணல்வீட்டைக் கட்டியும் கலைத்தும்
சிரித்து விளையாடுவது போல்
சட்டம் இயற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறீர்
சட்டத்தை உடைப்பதில் மிகமிக  மகிழ்ச்சி அடைகிறீர் ஆனால்
மணல்வீடு கட்ட மணலை அள்ளித் தருகிறது கடல்
கலைக்கும் போது உங்களோடு சிரிக்கிறது
எப்போதுமே கடல் அப்பாவிகளுடன் சேர்ந்தே சிரிக்கும் - ஆனால்
வாழ்க்கை கடலாக இல்லாதவருக்கு என்னவாகும்?

மனிதனால் இயற்றப்படும் சட்டம் மணல்வீடுகள் அல்ல - ஆனால்
வாழ்க்கை கடினப்பாறையாக இருப்பவருக்கு
தன் விருப்பத்தை செதுக்கிக் கொள்ளும் கல்லுளியே சட்டம்.

நடனரை வெறுக்கும் முடவர்களை என்னென்பது?
காட்டில் இருக்கும் கலைமானையும் புள்ளிமானையும்
கைவிடப்பட்டு சுற்றி அலையும் அபலைகள் என்று
நுகத்தடியை நேசிக்கும் எருது நினைத்தால் என்னென்பது?

தன் தோலை உரிக்க முடியாத கிழப்பாம்பு
எல்லோரையும் அம்மணம் என்றும்
வெட்கம் இல்லாதவர் என்றும்
சொல்வதை என்னென்பது?

திருமண விருந்துக்கு விரைவில் வந்து மூக்குமுட்ட தின்று
திரும்பிப் போகக் களைத்து போனவன்
விருந்துகள் எல்லாம் கட்டுமீறல் என்றும்
விருந்தோம்பிகள் சட்டமீறர் என்றும்
விழுந்துப் புலம்புவதை என்னென்பது?

சூரியனுக்கு முதுகு காட்டி
சூரியவொளியில் நிற்கும் மூடர்களை
என்னென்று சொல்வது? – அவர்கள்
நிழலை மட்டும் பார்க்கிறார்கள் அவர்களுக்கு
நிழல்தான் சட்டம்
சூரியன் வெறும் நிழல் பரப்பி அல்லாமல்
வேறு என்ன அவர்களுக்கு?

கீழே குனிந்து பூமியின் மீதுள்ள நிழலைத்
தொடுவதுதானே சட்டத்தை மதிப்பதென்பது? - ஆனால்
சூரியனைப் பார்த்து நடக்கும்போது
பூமியில் படியும்  நிழலுருவம்
உங்களைத் தாங்கி நிற்குமல்லவா?

காற்றோடு பயணிக்கும் போது காற்றுமானி எதற்கு வழிகாட்ட?
மனிதனின் சிறைக் கதவை உடைக்காமல் நுகத்தடியை உடைத்தால்
எந்த மனிதச் சட்டம் உங்களைக் கட்டுப்படுத்தும்?

யார் இடும்  இரும்புச் சங்கிலியாலும் 
தடுமாறாமல் நடனமாடினால்
எந்த சட்டம் உங்களை அச்சமூட்டும்?

உடுப்புகளை கிழித்துக் கொண்டாலும்
யாருடைய பாதையிலும்  எறியாமல் போன உங்களை
எந்த விசாரனைக்கு யாரால் அழைக்க முடியும்?

ஆர்பலேஸ் மக்களே,
பறைமுரசின் தோலை காய்ச்சாமல் இளக்க முடியும்
யாழின் தந்திக் கம்பிகளை தளர்த்த முடியும் - ஆனால்

யாரால் வானம்பாடியை பாடாதிருக்க ஆணையிட முடியும்?

No comments: