Friday, December 2, 2016

பாரதிதாசன் என்னும் பாவலன்

பாரதிதாசன் என்னும் பாவலன் - பாடலினால்
பகுத்தறிவு  பரப்பிய தமிழ்க் காவலன்
பாரதிர குரலெழுப்பி பாடியவன் - தமிழர்
பைந்தமிழ்ப்  பகைவரைப் பற்றிச் சாடியவன்

தமிழ்நாட்டை ஆண்டவர்  மூவேந்தர் - தமிழர்தம்
தன்மானம் காக்கமனம் கொண்டவர் பாவேந்தர்
அமிழ்தென்றார் தமிழை கவிஞர் -  அதையுண்டால்
அழியோம் என்றறைந்த அழகுதமிழ் அறிஞர் 

தலைவணங்கா குணங்கொண்ட தீரர்  – ஆயினும் 
தமிழென்றால் தாள்தொடும் தன்மைபூண் டவீரர்
சிலைவணக்கம் இழிவென்ற நாத்திகர் – செந்தமிழே
சிறந்த தெய்வமென தொழுதிட்ட ஆத்திகர்

குடும்ப விளக்கென்னும் காவியம் – இன்பம்
குழைத்த வண்ணச் சொல்கருத் தோவியம்
இடும்பை அகற்றும் மருந்தாக – தந்தார் 
இனிதே உண்ணுதற்கு இல்லறத்தார் விருந்தாக 

வேண்டிய மக்களாட்சி வெற்றிபெற  - சமத்துவ  
வேட்கையால் சாதிமத சமுதாயம் முற்றுபெற  
பாண்டியன் பரிசு படைத்தார்   புரட்சிக்கவி
புதியதோரு லகம்செய்ய  பழமையை உடைத்தார்    

திராவிடர் திருப்பாடல் தொகுத்தார் – புரட்சித்
திருமணம் நடத்திட நன்முறை வகுத்தார்
திராவிடர் வாழவே வளமுடன் – தமிழியக்கம்
தீட்டினார் இன்பம் சூழவே நலமுடன்  

இயற்றியவர்: அருள்பேரொளி (சண். அருள் பிரகாசம்) 

Tuesday, October 18, 2016

அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது - பல்லடம் உழவர் மாநாட்டில்

அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
குலக்கல்வி திட்டத்தினால் குலைந்து போன ராஜாஜி அவர்களின் ஆட்சிக்குப் பிறகு காமராஜர் முதல்வராக பொறுபேற்ற சமயம். குடியாத்தம் தேர்தலில் குணாளா குலக்கொழுந்தே என்று போற்றப்பட்டு பச்சைத்தமிழன் காமராஜரை திகவும் திமுகவும் சேர்ந்தே ஆதரித்த காலகட்டம். 1 9 5 4 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி கோவை மாவட்ட உழவர் மாநாடு பல்லடத்தில் நடந்தது.. அந்த மாநாட்டிற்கு அப்போதைய முதல்வர் திரு காமராஜர் அழைக்கப்பட்டு வருவதாகவும் இருந்தது.
ஆனால் முதல்வர் கடைசி நேரத்தில் வராமல் வாழ்த்து தந்தி அனுப்பினார்.
அந்த தந்தியில் “மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டும். உழவர்கள் நாட்டு முன்னேற்திற்கு உழைக்க மாநாடு பயன்பட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று வாழ்த்துச் செய்தி தெரிவிக்கிறது.
அந்த மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் கலந்துகொண்டு உரை ஆற்றுகையில்
“இன்று உழவுத் தொழில் நம் நாட்டைப் பொறுத்தவரையில், இலாபகரமானதாக இல்லை. இதற்குக் காரணம் என்ன? உழவுத் தொழில் இன்னமும் மெருகேறாத ஒரு தொழிலாக இங்கு இருப்பானேன்?
இந்த நாட்டில் ஒரு ஏக்கர் நிலத்தில் கிடைக்கும் உற்பத்திப் பொருள், வேறு பல நாடுகளில் இதே அளவு நிலத்தில் கிடைக்கும் உற்பத்திப் பொருள்களைக் காட்டிலும் பல மடங்கு குறைவாக இருக்கிறது – இதற்குக் காரணம் என்ன?"
"இந்த நாட்டு உழவர் பெருமக்கள் சரியாக உழைப்பதில்லையா? என்றால், அப்படி அல்ல, வேற்று நாட்டவர்களைக் காட்டிலும், இந்த நாட்டவர்தான் கடுமையாக உழைக்கிறார்கள், அதிலும், கோவை மாவட்டம் போன்ற இடங்களில் நிலத்தை உழுது பயிரிட்டுப் பலனடைவது என்பது, கல்லிலிருந்து நார் உரிப்பதைப் போன்றதாகும்! பருக்கைக் கற்களும், முற்புதர்களும், கரம்புக் காடுகளும் நிறைந்த இந்த மாவட்டத்தில், உழவரின் உழைப்பு அளவிட முடியாதது! அப்படியெல்லாம் உழைத்தும் நல்ல வருமானமும் வளமும், பலனும் இல்லாமற் போவானேன்?
வேறு பல மேலை நாடுகளில், உழவுத் தொழிலுடன் அவர்கள் விஞ்ஞானத்தையும் கலந்துகொண்டு வேலை செய்கிறார்கள், அதனால் அவர்கள் குறைவாக உழைத்தாலும், நம்மைக் காட்டிலும் அதிகமாகப் பலன் பெறுகிறார்கள்".
"நாம் விஞ்ஞான அறிவைப் பெருக்கிக் கொண்டு, உழவுத் தொழிலையும் அந்த விஞ்ஞானத்துடன் செய்தால்தான் குறைந்த உழைப்பில் நிறையப் பலன்பெற முடியும்" என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார் ..
இன்றல்ல 62 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கண்ட திமுக என்னும் அரசியல் இயக்கம் தேர்தல் அரங்கில் இறங்குவதற்கு முன்பே இந்த நாட்டு மக்களின் உண்மை நிலை உணர்ந்து ஆற்றிய உரை இது..
மேலும் அவர் அந்த மாநாட்டில் பேசும் போது
“உழவுத் தொழில் முன்னேறி, நல்ல பலன் தரும் – இலாபம் தரும் தொழிலாக மாற முதலாவதாக, அந்தத் தொழில் தற்கால விஞ்ஞான அறிவுடன் செய்யப்பட வேண்டும், இரண்டாவதாக, இன்று, உழவர் பெருமக்களுக்கு உழவுத் தொழிலில் அக்கறை இல்லை, இந்த அக்கறை அவர்களுக்கு வருமாறு செய்ய வேண்டும். இந்த இரண்டும் செய்தால்தான் உழவுத் தொழில் ஈடேற முடியும், நாடு முன்னேற்றத்தைக் காண முடியும்.
உழவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை இனியும் மூடி மறைத்துப் பயனில்லை. உழவுத் தொழிலிலிருந்த அக்கறை இப்போது குறைந்து விட்டது. நான் இப்படிச் சொல்லும்போது, உழவர்கள் எல்லோரும் ஏதோ உழைக்காத சோம்பேறிகளாக மாறிவிட்டார்கள் என நான் கூறுவதாக எண்ணிவிட வேண்டாம். எப்படி அவர்களுக்கு அக்கறை குறையாமலிருக்க முடியும்?"
"ஒரு சிறு வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருப்பவர் கூட, தங்களிலும் சற்று உயர்ந்த வாழ்வு பெற்றிருப்பதைப் பார்க்கிறார்கள், தங்களைக் காட்டிலும் குறைந்த அளவு உழைக்கும் பலர், பல வழியிலும் சற்று வசதியான வாழ்வு பெற்றிருப்பதைக் கண்டு புழுங்குகிறார்கள், அதாவது, உழவுத் தொழில், வாழ்வுக்குப் பாதுகாப்புடைய தொழிலாக இல்லை, உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் போதுமான வாழ்க்கை வசதிகள் தரப்படவில்லை – இதை எண்ணும்போது, உழவர்களுக்கு, தங்கள் தொழில்மீது வெறுப்பேற்படுவது இயற்கைதானே!"
"இரண்டாவதாக, உழவர்கள் ஆண்டு முழுவதும் உழைக்கிறார்கள், உழுது பண்படுத்தி, பரம்படித்து, விதைத்து, நீர் பாய்ச்சி, களை எடுத்து, காவல் புரிந்து, பயிர் வளர்க்கிறார்கள் இவர்கள் உழைப்பால் உயர்கிறது நெற்கதிர், பார்க்கிறார்கள் – பெருமூச்சு விடாமலா இருக்க முடியும்?"
"இனி அவர்களுக்குத் தொழிலில் அக்கறை வளர இரண்டு நல்ல காரியங்களைச் செய்தாக வேண்டும் – ஒன்று, வேறு பல தொழில்களில் கிடைக்கும் பாதுகாப்பு இந்தத் தொழிலுக்கும் கிடைக்கத் திட்டம் தீட்டியாக வேண்டும், இரண்டாவதாக, உழுகிறவர்களுக்கு நிலம் தரப்பட வேண்டும்”
கேட்டீர்களா அண்ணாவின் அறிவுமிக்க அறவுரையை. இதுவரை இந்த இந்தியத் திருநாட்டில் உழவுத் தொழிலுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயப் பொருள்கள் விலை நிர்ணயம் விவசாயிகளிடம் இல்லை. அன்றைக்கு தொடங்கிய அக்கறையின்மை உச்சத்திற்கு போய்விட்டது..
உழுபவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும் என்றார். சோசிலிசம் பேசிய காமராஜரின் காங்கிரசு ஆட்சி நிலசீர்திருத்தத்தை எப்படி செயல் படுத்தியது.? நிலப்பிரபுக்கள் பாதிக்காமல் உழுபவனும் உவகை கொள்ளும்படியான இரண்டும் கெட்டான் நிலைக்கு தள்ளியது மட்டுமல்லாமல் இருசாரருக்கம் – நிலப்பிரபுவிற்கும் உழவர்க்ளுக்கும் – மோதல் ஏற்படுகிற வகையில் பிரச்சனைகளை ஒத்திப் போட்டு இருவரையும் மோதவிட்டு ஓட்டு வேட்டையாடுவதிலேதான் அன்றைய காங்கிரஸ் அரசு கவனமாயிருந்தது என்பதெல்லாம் வரலாறு...
அண்ணா அவர்கள் அந்த மாநாட்டில் மேலும் பேசும்போது
“நிலங்களை விவசாயிகளுக்குப் பிரித்துத் தந்தால் மட்டும் போதாது, பிரித்துத் தரப்படுகிற நிலங்களைக் கூட்டுப் பண்ணை முறையில் பயிரிட்டால்தான் எல்லா விவசாயிகளும் நல்ல பலன் காண முடியும், அந்த வகையில், சிறு சிறு நிலப்பரப்பைச் சொந்தமாக உடைய விவசாயிகளைக் கூட்டுப் பண்ணை முறையில் ஒன்று கூட்டி அந்தப் பண்ணை நிர்வாகத்தை வேண்டுமானால் அனுபவம் பெற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சம்பளம் கொடுத்துப் பார்க்கச் சொல்லலாம். அதன்மூலம், இந்த விவசாயத் தொழிலில் அவர் பெற்றிருக்கிற நிபுணத்துவத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நிலங்களை உழவர்களுக்குப் பிரித்துத் தந்துவிடுவதாலேயே வறுமை போயிவிடுமென்பதல்ல, நிலம் பிரித்துத் தரப்படும் மென்பதின் மூலம் உழவர்களுக்கு, தொழிலில் அக்கரை வளரும்.
அந்த அக்கரையுடன், விஞ்ஞான அறிவும் தரப்பட்டால் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும், அப்போதுதான் வறுமை ஒழியும்!
இவற்றைச் செய்ய, ஒரு நல்ல அக்கறை கொண்ட சர்க்கார் வேண்டும், இங்குள்ள காமராசர் சர்க்காருக்கு, அக்கறை கூட இந்த விஷயத்தில் இருக்கலாம், ஆனால், அதிகாரமில்லாத சர்க்காராக இருக்கிறது.
நேருவின் தலைமையில் உள்ள சர்க்காரோ, அதிகாரமிருந்தாலும், தென்னாட்டவர் மீது அக்கறை இல்லாத சர்க்காராக இருக்கிறது” என்று குறிப்பிட்டுவிட்டு சொல்கிறார்
“நம் பிரச்சனைகளை நாமே கவனித்துக் கொள்ள நமக்கு எல்லா அதிகாரங்களும் உள்ள ஒரு நல்ல அக்கறை கொண்ட சர்க்கார் வேண்டும்” என்பதைத் தெளிவாக விளக்கி, “அந்த அதிகாரம் படைத்த – அக்கறை கொண்ட சர்க்காரை அமைப்பதே தி.மு.கழகத்தின் இலட்சியம்” என்பதையும் தெளிவுபடுத்தினார்.
அப்படி அவர் அப்போது பேசியதின் மெய்பொருள் என்ன என்பது அன்றைய திமுகழகத்தின் கொள்கை என்னவாக இருந்தது என்பது தெரிந்தவர்களுக்கு புரியும். 1 9 6 3 க்கு பிறகு தனிநாடு கோரிக்கை விட்ட பிறகும் அண்ணா குறிப்பிட்டதைப் போல மத்தியில் அக்கறை கொண்ட ஆட்சி அமைப்பதில் திமுகழகம் தன்னாலான மட்டும் பாடுபட்டு தமிழர் நலனுக்கு செயல் ஆற்றியதை யாரும் மறுக்கமுடியாது..
.
(ஆதாரம்: நம்நாடு - 8-9-1954)

அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது - "எங்கிருந்தாலும் வாழ்க"

அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
”சிவாஜி கணேசனின் நடிப்பு எனக்குப் புதிதல்ல. அவருடைய திறமையை நான் நன்கு அறிந்திருக்கிறேன். பெரிய அளவில் கணேசன் புகழ் பெறுவார் என்ற நம்பிக்கை பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே எனக்கு எற்பட்டு விட்டது . தம்பி கணேசா ! எங்கிருந்தாலும் வாழ்க !”
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை மேற்கண்டவாறு பேசியதை கேட்டவர்கள் அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டு அண்ணாவின் பெருந்தன்மையை உயர்பண்பை பாராட்டினார்கள்.
இன்றைய தலைமுறை இளைஞர்கள் அறிய வேண்டிய வரலாற்று நிகழ்வு இது.
திராவிட முன்னேற்ற கழகத்துடனும் அதன் முன்னனித் தலைவர்களுடனும் தொடர்பில் இருந்து கழகப் பணியும் கலைப்பணியும் செய்து வந்த (சிவாஜி) கணேசன் சந்தர்ப்ப வசத்தால் திமுகவிலிருந்து பிரிந்து காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருந்த சமயம். வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடித்து பெரும் புகழ் பெற்ற காலகட்டம். அந்த நாடகத்தை தமிழ் நாடெங்கும் நடத்தி எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டு பாராட்டு தெரிவித்து விட்டார்கள். அண்ணா அவர்களைத் தவிர.. சென்னையில் அண்ணாமலை மன்றத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் கடைசியாக நடக்க இருக்கிறது சிவாஜிக்கு அண்ணாவின் பாராட்டை பெற ஆசை. அரசியல் நிலைபாடு அதற்கு தடையாகுமோ என்று அச்ச உணர்வுடன் அண்ணா அவர்களிடம் எப்படியாவது சம்மதம் பெற தன்னுடைய சகோதரர் தங்கவேலுவையும் கரந்தை சண்முக வடிவேலுவையும் அனுப்பி வைக்கிறார்.
அண்ணா அப்போது திருவண்ணாமலையில் தங்கி இருந்து வடஆற்காடு மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அங்கு சென்று அண்ணாவிடம் அவர்கள் நாடகத்திற்கு தலைமை ஏற்க அழைப்பு விடுகிறார்கள். அன்றைய தேதியில் காஞ்சிபுரத்தில் பொதுக் கூட்டம் இருப்பதால் அண்ணா வர இயலாது என்று சொல்லி விடுகிறார். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கலைஞரிடம் சென்று எப்படியாவது அண்ணாவை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். கலைஞருக்கும் நடிகர்திலகத்திற்கும் அப்போதும் நல்ல இணக்கம் ஈடுபாடு இருந்து வந்தது. கலைஞர் திருவண்ணாமலைக்கு சென்று ப.உ.சண்முகம் இல்லத்தில் அண்ணாவை சந்தித்து சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்திற்கு அழைப்பு விடுக்கிறார்..
“அண்ணா, இதற்கு முன் பல தடவை சிவாஜி கணேசன் தங்களை நாடகம் பார்க்க விரும்பி அழைத்ததாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். நாளைதான் அந்த நாடகம் கடைசியாக நடக்குமாம். தாங்கள் தலைமை ஏற்று கவுரவிக்க வேண்டுமென மிகவும் தயவாகக் கேட்டுக்கொள்கிறார்கள். போய்வந்து விடுங்களேன் “ என்கிறார் கலைஞர்
அண்ணாவோ ”தம்பி காஞ்சிபுரத்தில் பொதுக் கூட்டம இருக்கிறதே. போகவில்லை என்றால உள்ளூர் காரர்கள் என்ன நினைப்பார்கள் “ என்கிறார்.
கலைஞர் ”தாங்கள் விரும்பினால் தங்களுக்கு பதிலாக நான் காஞ்சிபுரம் கூட்டத்திற்கு போகிறேன். நீங்கள் வரமுடியாத நிலையை அவர்களுக்கு விளக்குகிறேன்.. நீங்கள் கட்டபொம்மன் நாடகம் காண சென்னைக்கு செல்லுங்கள்” என்று சொல்கிறார்.
கலைஞரின் வேண்டுகோளை ஏற்று அண்ணா சம்மதம் தருகிறார். மறு நாள் மாலை ஐந்து மணிக்கு அறிவகத்தில் வந்து பாருங்கள் என்று வந்தவர்களிடம் சொல்லி அனுப்புகிறார். எல்லொருக்கும் மகிழ்ச்சி.
அண்ணா வேதாசலம் என்றழைக்கும் லிங்கம் அவர்களுடைய ஸ்டாண்டர்டு காரில்தான் பயணம் செய்வார். அன்று இரவு “ வேதாசலம் காஞ்சிபுரம் போகலாம்” என்கிறார். லிங்கம் அவர்கள் அண்ணா காஞ்சிபுரம் போனால் சென்னையில் நாடகம் பார்க்க போகமுடியாமல் போகலாம் என எண்ணி “அண்ணா, காஞ்சிபுரம் சாலை சரியில்லை நாம் நேராகவே சென்னை சென்றுவிடுவோம்” என்று சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார்.
அறிவகத்தில் அண்ணா அன்று மாலை இருக்கிறார். நாடகத்திற்கு அண்ணாவை அழைத்துபோக சிவாஜி தன்னுடைய கார்களை அனுப்பி வைக்கிறார். பிளைமத், டிஸோட்டா, பியட் என மூன்று கார்கள் அறிவகத்தில் அண்ணாவுக்காக. அண்ணாவோ லிங்கத்தின் சாதாரண ஸ்டாண்டர்டு காரில் ஏறிக் கொண்டு நண்பர்களை சிவாஜி அனுப்பிய கார்களில் ஏறிக் கொள்ளச் செய்கிறார். அண்ணாவின் எளிமை எல்லோரையும் வியக்கச் செய்தது.
அன்று அண்ணாமலை மன்றத்தில் அண்ணா வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் பார்த்துவிட்டு பேசும் போதுதான் ”தம்பி கணேசா ! எங்கிருந்தாலும் வாழ்க” என்று சிவாஜி கணேசனை வாழ்த்தினார்.
கட்டபொம்மனாக நடித்து வீர வசனம் பேசி முழக்கமிட்ட சிவாஜி கணேசன் கண்ணில் நீர் தளும்ப நின்று கொண்டிருந்தார். அன்று இரவு ராயப்பேட்டை சண்முக முதலித் தெருவில் இருந்த தன் வீட்டுக்கு அண்ணாவையும் அவர் நண்பர்களையும் வரவழைத்து விருந்து படைத்து மகிழ்ந்தார் சிவாஜி கணேசன். அந்த வீடு முன்பு கலைவாணருக்கு சொந்தமாக இருந்த போதும் அண்ணா அந்த வீட்டுக்கு கலைவாணரை பல முறை சந்திக்க வந்ததையும் அவருடன் உரையாடியதையும் நினைவு கூர்ந்து நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் இருந்தார் அண்ணா.
அண்ணாவின் சொல்லும் செயலும் பல்வேறு அர்த்தம் கொண்டவை என்றும் அவை காலகாலமும் பொருத்தமுள்ளவை என்பதனால் நான் அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது என்று அண்ணாவின் உரைகளை எழுத்துகளை தேர்ந்தெடுத்து பதிவிட்டு வருவது நண்பர்கள் அறிந்தது.
அவற்றில் இந்த பதிவு சிறப்பானதாக அமையும் என்று கருதுகிறேன். அண்ணா - கலைஞர் – நடிகர்திலகம் இம்மூவரின் உள்ளார்ந்த உறவை இந்த நிகழ்ச்சி மூலம் அறியலாம்.

நங்கவரம் போராட்டம்

இன்று கலைஞர் செய்திகளில் திமுகவினர் காவிரி மேலாண்மை அமைக்காத மைய அரசுக்கு எதிராக நடத்திய விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றிய செய்தித் தொகுப்பில் குளித்தலை இரயில் நிலையக் காட்சிகளைக்  கண்டதும் திமுகழக வரலாற்றில் குளித்தலையின் பங்கு எத்தகையதாக இருந்தது என்பதெல்லாம்  நெஞ்சில் நிழலாடியது.
திராவிட முன்னேறக் கழகம் விவசாயிகளின் மீதான அக்கறை இன்று நேற்று அல்ல துவக்க காலம்  தொட்டே இருந்து அதற்காக  போராடிய  வரலாற்றுக்கு சொந்தமானது. அதிலும் தலைவர் கலைஞர் தான் திமுகழகத்தின் முதல் விவசாயிகளுக்கான போராட்டத்தை நடத்தியவர் என்பதும் சிறப்புக்கு உரியது..
1957ல் நடந்த நங்கவரம் போராட்டம் குளித்தலை வரலாற்றில் முக்கியமானது.விவசாயத் தொழிலாளர்களைப் பண்ணை ஆண்டைகள் அடிமைகளாக வைத்திருந்த காலம் அது. இதைக் கேள்விப்பட்ட கலைஞர், விவசாயிகளுக்காகப் பண்ணையார்களிடம் கூலி உயர்வு கேட்டார். அவர்கள் தர முடியாது என மக்கள் மீது வன்முறையை ஏவ,  தி.மு.க. அந்த முதலாளிகள் மீது மிளகாய்ப் பொடியைத் தண்ணீரில் கலந்து ஊற்றும் போராட்டத்தைத் தொடங்கியது. இந்த கலகத்துக்குப் பிறகே விவசாயிகள் பிரச்னை தீர்ந்தது. அவர்களின் உழைப்புக்கேற்ற கூலி கிடைக்க ஆரம்பித்தது.
கலைஞர் நடத்திய அந்த விவசாயிகள் போராட்டம் குளித்தலையில் அவர் 1957-ல் முதல் முதல்  வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதும்.அந்த பகுதி  நங்கவரம் ஜமீன்தார் விவசாய தொழிலாளர்களை நியாயமாக நடத்தாததால் அவர் நடத்திய  போராட்டம் ஆகும். போராட்டத்தின் விளைவாக  ஜமீன்தார் பணிந்தார்.  
நங்கவரம்பண்ணை விவசாயிகளின் கையேரு வாரம்-மாட்டேரு வாரம்என்ற பிரச்சினைக்காகப் பேரவையில் பேசியதுதான் அவரது முதல் கன்னிப் பேச்சு. அந்த பிரச்சினை குறித்து அவர்  வேகமாகப் பேசி அமர்ந்தவுடன், ஒரு துண்டுத் தாளில் பேரவைத் தலைவராக அப்போதிருந்த மேதகு யு.கிருஷ்ணாராவ் அவர்கள், “Very Good Speech” என்று எழுதி செயலாளர் மூலமாக கலைஞரிடம்  கொடுத்தனுப்பினார். அதுதான்  சட்டமன்றத்தில் அவருக்குக்  கிடைத்த முதல் பாராட்டு என்று கலைஞர் அடிக்கடி குறிப்பிடுவார். .
அந்த போராட்ட காலத்தில் திரு காமராஜர் முதல்வராக இருந்த அமைச்சரவையில்  அங்கம் வகித்த திரு பக்தவத்சலம் அவர்கள் கல்லணையில் வந்து தங்கி இருந்த போது கலைஞர் அவரை அங்கே சென்று சந்திக்கிறார் . நிலைமைகளை எடுத்து சொல்லி போராட்டத்தின் நியாயங்களை விளக்கி பண்ணையார்களை பணியவைக்கும் பணியை செய்தார்.
இது குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் தன்னுடைய தம்பிக்கு மடலில்
"நாடு பாதி நங்கவரம் பாதி!'' என்றோர் பேச்சு, திருச்சி மாவட்டத்திலே உண்டு. நங்கவரம் பண்ணையின் அளவினையும் அந்தஸ்தினையும் விளக்கிட எழுந்தது அப் பழமொழி, அந்தப் பண்ணையும் பிறவும் உள்ள குளித்தலை வட்டத்திலே, இன்று உழவர்களிடையே ஒரு பெரும் கொந்தளிப்பு. பட்டது போதும் இனிப் பயமில்லை - நமக்குப் பாதுகாப்பு தரச் சட்டம் வந்துள்ளது என்று அந்தச் சூதுவாதறியாத உழைப்பாளி மக்கள் உளம் பூரித்து இருந்த வேளையில், "சட்டமா? வார்த்தைகளின் கோர்வைதானே? இதோ என் திறமையால், அதனைச் சல்லடைக் கண்ணாக்கி விடுகிறேன், பாருங்கள்'' - என்று சீறிக்கூறி, பண்ணையின் பணப்பெட்டிக்குப் பாதுகாவலராகிவிட்டனர் சிலர். அவர்களால் விளைந்துள்ள வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல், உழவர் பெருமக்கள் கிளர்ச்சியில் ஈடுபடவும் பக்குவமாகிவிட்டனர். வயலோரங்களிலே, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார்! உழவர் வாழ் பகுதிகளில், உருட்டல் மிரட்டல் ஏராளம்! இந்த நிலைமையை எடுத்துக் காட்டி, உழவர்களுக்கு நீதி வழங்கும்படி, அமைச்சரைக் கேட்டுக் கொள்ளும் பணியிலே கருணாநிதி ஈடுபட்டது, எனக்குப் பூரிப்பும் பெருமையும் தருவதாக இருக்கிறது; உனக்கும் உவகை கொஞ்சமாகவா இருக்கும்!” என்று குறிப்பிடுகிறார்.
அன்றைக்கு அண்ணா அவர்கள் பூரிப்பும் பெருமையும் உவகையும் கொண்ட அதே மனப்பக்குவத்தில் நம்மை தளபதி ஸ்டாலின்  அவர்களும் இன்றைக்கு நம்மை ஆழ்த்துகிறார். ஒருபக்கம் போராட்ட களம் காண்கிறார். மறுபக்கம் பொறுப்பு முதலமைச்சர் திரு ஒ.பி.எஸ் அவர்களை சந்திக்கிறார்.
கலைஞரின் வாரிசு கழகத்தின் அடுத்தத் தலைமுறை தமிழகத்தின் எதிர்காலம் தளபதி அவர்களும் இப்போது இந்த விவசாயிகளின் துயர் துடைக்க போராட்ட களத்தில் முதல் வரிசையில் அணிவகுத்து செல்வதைக் காணும் போது உள்ளமெல்லாம் உவகையில் மிதக்கிறது.


Saturday, June 11, 2016

கலைஞர் மேடை காவிய ஓடை

கலைஞர்  மேடை காவிய  ஓடை 

தமிழக அரசியல் வரலாற்றில் யார் எதைச் சொன்னாலும்,  கண்ணியமான பேச்சும் செயலும் தி.மு.கழகத்தால் கடைபிடிக்கப்பட்டு வந்தது என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உண்டு. கழகத்தின் மூத்தத் தலைவர்கள் யாரும் தரம் தாழ்ந்து பேசமாட்டார்கள். எதிர் கருத்து உடையவர்களையும் மதிக்கும் பக்குவம் அறிஞர் அண்ணா அவர்களால் போதிக்கப்பட்டது.

ஒருமுறை திரு என். வி.நடராசன் அவர்கள் திருக்கழுகுன்றத்தில் திரு காமராஜ் அவர்களை தவறாக ஏதோ பேசிவிட்டார் என்பதால் மேடையில் இருந்த அண்ணா அவர்கள் என்விஎன் அவர்களுடைய பேச்சை நிறுத்தச் சொல்லி கண்டித்த சம்பவம் உண்டு.

கலைஞரும் முன்னால் பேசியவர்களுடைய தவறான கருத்துகளுக்கு அல்லது யார்மீதான தனிப்பட்டத் தாக்குதல்களுக்கு தன்னுடையப் பேச்சில் கண்டணம் செய்த நிகழ்வுகள் ஏராளம்.

அறிஞர் அண்ணா அவர்கள் மருத்தவமனையில் இருந்த சமயம் அமெரிக்க மருத்துவர் மில்லர் வந்து வைத்தியம் பார்க்கிறார். அப்போது நெய்வேலியில் திருமிகு வாரியார் அவர்கள் உபன்யாசம் செய்யும் நிகழ்ச்சியில் ஒரு கருத்தை வெளி இடுகிறார். அந்த கருத்து திமுகவினர் மனம் வருத்தச் செய்கிறது. அதனால் ஆத்திரம்கொண்டு அடிக்கப் போனார்கள். அந்த தமிழ்தாத்தா அந்த பக்தி ஞானப்பழம் 64ஆம் நாயன்மாராக கொண்டாடப்படும் வாரியார் அவர்கள் 1975 ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாள் விழாவில்

”இறுதிவரை மூச்சிலும் பேச்சிலும் பிறருக்காகவே வாழ்ந்து அண்ணா தெய்வமானார்”

என்று உருக்கமான உரையை நிகழ்த்தினார்.

அந்த மேடையில் கலைஞரும் இருக்கிறார். கொள்கையால் கருத்தால் மாறுபட்டவர்களையும் அரவணைத்துப் போகும் பக்குவம் அவர்களாலேயே பாராட்டப்படவும் மெச்சப்படவும்  நல்லெடுத்துக்காட்டாக விளங்குவது திமுகழகம்.

அதுவும் கலைஞர் காலத்தில் பல நிகழ்வுகள். உண்டு. கலைஞர் அண்ணாவின் இதயத்தைப் பெற்றவர் என்றால் வெறும் பேச்சல்ல. அதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. அதற்கான முழு அருகதையும் அவருக்கே உண்டு.  சோதனைகளையும் சாதனைகளின் படிக்கட்டாக மாற்றும் வல்லமை மிக்கவர் கலைஞர்.

வாரியார் சொல்கிறார்

“ அண்ணா என்ற சொல்லுக்கு அணுகி அருள் புரிதல் என்று பொருள். அணுகுதல் என்றால் நெருங்குதல். கிணற்றில் விழுந்தவனை கிணற்றில் குதித்துதான் காப்பாற்ற வேண்டும்.அதைப் போல ஏழை எளியோரை நெருங்கி அவர்கள் குறை தீர்த்தவர் அண்ணா”

”திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சிவபெருமானை அண்ணா என்று அழைக்கிறார்”.

“ மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கு அண்ணா எடுத்துக் காட்டாக திகழ்கிறார். மனிதன் என்றால் சிந்திப்பவன் மனம் உடையவன் என்று பொருள். .மனிதன் தனது சிந்தனையினால் அறிவு ஆற்றலினால் அரிய குணங்களினால் தெய்வமாக முடியும்.  அப்படி ஆனவர்தான் அண்ணா”

என்று ஒரு நீண்ட அரிய உரை நிகழ்த்தினார். இறுதி உரை ஆற்றும் போது கலைஞர் தெரிவித்தக் கருத்துகள் அவருடைய சான்றான்மைக்கும் தலைமைப் பண்புக்கும் உண்மையான பெரியார் அண்ணா வழிவந்த தீரர் என்பதற்கும் சாட்சியாக அமைந்தது, 

கலைஞரும் கிருபானந்த வாரியாரும்

கலைஞரும் கிருபானந்த  வாரியாரும் 

7 July 2014 at 01:17

அறிஞர் அண்ணாவின்  பிறந்த நாள் விழாவில் 1975 ஆம் ஆண்டு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததும் அந்த விழாவில் வாரியார் அவர்கள் பேசிய பிறகு கலைஞர் ஆற்றிய உரை இன்றும் நாம் எல்லாம் படித்து உணர வேண்டிய பல கருத்துகள் நிறைந்தது. இந்த செய்தியே அதாவது கலைஞரும் வாரியாரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி அதுவும் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் என்பது இக்கால இளைஞர்களுக்குத்  தெரிந்திருக்காது. அதே வேளையில் புரட்சிநடிகர் எம்ஜிஆர் உடன் வாரியார் கலந்துகொண்டது தெரிந்து இருக்கும். இணையத்தில் கலைஞரும் வாரியாரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் கிடைக்கவில்லை. ஆனால் எம்ஜிஆருடன் இருப்பது கிடைக்கும். இப்படிப்பட்டச் செய்திகளை வரலாற்று நிகழ்வுகளை அரிய தகவல்களாக நாம் கருதுவதை இன்றைய இளைஞரிடம் கொண்டு சேர்ப்பது நம் கடமை.

கலைஞரின் உரை:

இந்த விழாவில் வாரியார் அவர்களுடைய உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தற்கு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய பேச்சு காலம் தழுவியது காலத்திற்கு ஏற்ற பேச்சு. காலத்திலே ஒரு கண் வைத்து இருந்த காரணத்தினால்தான் மிக எச்சரிக்கையாக பேசினார். இல்லாவிட்டல் மணி 12 ஆனது நமக்கெல்லாம் தெரியாத போது அவருக்கு எப்படி தெரிந்தது?.

அவர் பேசும்  போது காலம்காட்டி மணி 10 காட்டி இருந்தால் அதற்கு ஏற்ற உதாரணங்கள் ராவணன் தலை பத்து தசாவதாரம் பத்து இப்போது மணி பத்து என்று சொல்லி இருப்பார். ஒருவேளை கடிகாரம் மணி 6 காட்டி இருந்தால் முருகனுடைய 12 கைகளை விட்டு விட்டு முருகனுக்கு தலை ஆறு  இப்போது மணி ஆறு என்று சொல்லி இருக்கக் கூடும். மணி 3 ஆக இருந்தால் தமிழ் மூன்று தமிழர் கொடி மூன்று என்று அந்த மூன்றுடன் மணி மூன்றை இணைத்து இருப்பார்.

ஆகவே மிகுந்த கற்பனை வளமும் சொல்வளமும் நிறைந்த அவருடைய சொல் இனிமைக்காக நாம் என்றென்றும் பாராட்டக் கடமைபட்டு இருக்கிறோம். 

கம்பனுக்குச் சிலை வைத்து இருப்பதாகச் சொன்னார். கம்பன் எழுதியக் கதையை ஏற்றுக் கொண்டு அல்ல. கம்பனுடைய அழகுத்தமிழைப் பாராட்டுவதற்க்காகத்தான் அவருக்குச் சிலை வைத்தோம்.

அதைப் போலவே வாரியாருடைய சொற்பொழிவைப் பாராட்டுகிறோம் என்று சொன்னால் அவர் சொல்கின்ற கருத்துகள் அத்தனையும் ஏற்றுக் கொண்டல்ல. அவர் பேசுகிற சொல்லுகிற நேரத்தில் விளையாடுகின்ற தமிழைப்பாராட்டுவதற்காத்தான் அவரை நாம் பாரட்டுகின்றோம்.

அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள் ராமாயணம் பாரதம் இரண்டையும் ஒரு ஆசிரியர் பல முதியவர்களுக்குக் கற்றுத்தந்து, பிறகு ஓராண்டு காலம் கழித்து அவர்களை எல்லாம் அழைத்து அவர்களிடம் ராமாயணத்திற்கும் பாரதத்திற்கும் என்ன வேறுபாடு என்று கேட்டார். ஒருவன் ராமாயணம் அட்டை பச்சை;  பாரதத்திற்கு பக்கம் இத்தனை;  அச்சகம் இன்னார் என்று ஒவ்வொறு விதமாகச் சொன்னார்கள். ஆனால் ஒரு சிறுமி ஒரே வித்தியாசம் ராமாயணம் பெண்ணாசையால் வந்தது பாரதம் மண்ணாசையால் வந்தது என்று சொன்னதாக வாரியார் குறிப்பிட்டார்.

ஒரே ஒரு வித்தியாசம் உடனடியாக எண்ணிப் பார்த்தால் ராமாயணம் ஐந்து எழுத்து பாரதம் நான்கு எழுத்து ஆகவே ஒரு எழுத்து வித்தியாசம் என்று கூட நாம் சொல்லிக் கொள்ளலாம்.

இராவணணுக்குப் பெண்ணாசை ஏற்பட்டதாக வாரியார் அவர்கள் குறிப்பிட்டார்கள். வாரியார் அவர்கள் தமிழினத்திற்காக பாடுபடும் பெரும் புலவர்.என்கின்ற வகையிலே அறிஞர் அண்ணா அவர்கள் வாரியார் மீது பெரும் அன்பு கொண்டு இருந்தார் என்பதை நண்பர் வில்லாளன் அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.

அந்தப் பெண்ணுக்கு பதிலாக வெறு ஒரு பெண் அவர் அண்ணா அவர்களுடைய பள்ளிக்கூடத்திலே படித்தவராக இருந்து இராமயணத்தைப் பற்றி அந்தப் பெண்ணிடம் கேட்டு இருந்தால்; அதற்கு வேறு பதில் கிடைத்து இருக்கும்.

“இராமாயணம் என்பது ஆரியருக்கும் திராவிடருக்கும் நடந்தப் போர். பாரதம் என்பது ஆரியருக்குள்ளேயே நடந்தப் போர்” என்று பதில் கிடைத்து இருக்கும்.

ஆரியருக்கும் திராவிடருக்கும் நடந்த போர் என்று நான் சொல்லவில்லை. இன்றைய பிரதமரைப் பெற்றெடுத்த முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் இன்றைய பிரதமர் பிரியதர்சினியாக இருந்த காலத்தில் எழுதியிருக்கிற கடிதத்தில் பண்டிதர் நேரு அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் சிறுவர்களுக்கான பாடப்புத்தகத்தில் நேரு அவர்களுடைய வாசகங்கள் மின்னிக் கொண்டு இருக்கின்றன.

ஆனால் வால்மீகி எழுதிய ராமாய்ணம் வேறு கம்பர் எழுதிய ராமாயணம் வேறு. இதை நானே வீட்டில் எடுத்துச் சொன்னால் நம்புவதில்லை. இல்லை இல்லை எல்லாம் ஒரே ராமாயணமாகத்தான் இருக்கும் என்று வாதாடுவார்கள்.

வாரியார் அவர்களேகூட இப்படிப்பட்டவர்களுக்கு நல்ல பதில் அளிக்கும் விதமாக வால்மீகி ராமாயணம் வேறு கம்ப ராமாயணம் வேறு என்று எடுத்து சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

வால்மீகி ராமாயணத்தில் சீதையை ராவணன் கையால் தொட்டுத் தூக்கிக் கொண்டு போனான் என்று வால்மீகி எழுதி இருக்கிறார். ஆனால் கம்ப ராமாயணத்தில்,ராவணணுடைய தமிழ்ப்பண்பை உயர்த்திக் காட்டுவதற்காக ராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிக் கொண்டு போனான் என்று இல்லாமல் சீதை இருந்த இடத்தோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு போனான் என்று குறிப்பிடுகின்றார். அப்படி எடுக்க இயலுமா? முடியுமா முடியாதா என்பதல்ல கேள்வி. தமிழன் ஒரு கதையை அணுகுகின்ற நேரத்தில்,  தமிழ்ப் பண்பாட்டோடு அணுகினான் என்பதற்கு அடையாளமாகத்தான் பல இடங்களில் வால்மீகி ராமாயணத்தை மாற்றி அமைத்து இருக்கிறார்.

என்னதான் கம்பன் வால்மீகி ராமாயணத்தை மாற்றி அமைத்தாலும் கூட வாலி வதை படலத்தில் ராமனுக்கு நியாயம் கற்பிக்க கம்பரால் முடியவில்லை.

அந்தக் கம்ப ராமாயணத்தை எடுத்து இங்கே பேசிய நம்முடைய வாரியார் அவர்களும் வெற்றி பெற்றார் என்று சொல்வதற்கில்லை. நான் ஏதோ பட்டிமன்றம் நடத்துவதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். வாரியார் கருத்துகளுக்கு எதிர் கருத்து சொன்னதாக எண்ணாதீர்கள்.

ஏனெனில் வாலியினுடைய வர்க்கம் வானர வர்க்கம் என்று சுட்டிக் காட்டப் படுமேயானால் சுக்கிரீவனுடைய வர்க்கமும் அதே வர்க்கம்தான். அவனும் அவனுக்குத் தம்பிதான். வாலியின் மனைவி தாடகைக் கூட வாலி இறந்தபிறகு சுக்கிரீவனை மணம் செய்து கொண்டாள் என்பதில் அகமகிழ்ந்த ராமன், வாலியைக் கொன்றதற்கு அவன் முறையற்ற முறையில் திருமணம் செய்து கொண்டான் என்று வாதிடுவது எந்த வகையிலும் பொறுத்தமானது என்று நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

 ஆயினும் வாரியார் அவர்கள் இங்கே விளக்குவதற்கு மனிதன் என்ன தெய்வமாவது விலங்கு கூட தெய்வமாகலாம் என்பதற்காக எடுத்துச் சொன்னாரே அல்லாமல் ராமனைக் காப்பாற்றுவதற்காக ராமனின் செயலுக்கு நியாயம் கற்பிப்பதற்காக எடுத்துச் சொன்னார் என்று நான் கருதவில்லை. வாரியார் அவர்களும் ஒப்புக்கொள்வார் என்றே நான் கருதுகிறேன்.

விலங்குகள்கூட தெய்வமாகலாம் மனிதன் ஏன் தெய்வமாகக்கூடாது?  அண்ணா ஏன் ஆகக்கூடாது என்ற கேள்விகளை அழகுற அவருக்கே உரிய தெள்ளு தமிழில் பின்னிப்பின்னி இங்கே எடுத்துக்காட்டினார்கள்.

முதலில் தெய்வம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொண்டாக  வேண்டும். தெய்வம் என்று ஒன்று தனியாக இருக்கிறதா? தனியாக உட்கார்ந்து கொண்டு காரியம் ஆற்றுகிறதா?  இல்லை என்று வாரியாருடைய நீண்ட பேச்சில் நமக்கு விளக்கி இருக்கிறார் என்று நான் கருதுகிறேன்.

ஆசை - அடுத்த கட்டமாக பற்று -  அடுத்த கட்டமாக அன்பு - அதற்கு அடுத்த மேல் கட்டமாக அருள் -  என்று இப்படியே அடுக்குவதின் மூலம் தெய்வம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது. ஆசையாக இருக்கிறது. பின்பு பற்று பருவத்தை அடைகிறது. அதன் பிறகு அன்பு பருவத்தை அடைகிறது. இறுதியாக அருள் என்னும் முதுமை நிலைக்கு வந்து சேருகிறது. அந்த நிலைதான் தெய்வ நிலை என்று வாரியார் அவர்கள் எடுத்துக் காட்டி இருக்கிறார்கள்.

ஆகவே தெய்வம் என்பதற்கு சொல்லப்படுகின்ற வார்த்தைகள் வள்ளுவரே மிக அழகாகக் கூறுகிறார்; தெய்வத்தை தனது குறளில் கடவுள் அதிகாரத்தில் கூட வாலறிவன், தனக்குவமை இல்லாதவன், வேண்டுதல் வேண்டாமை இலான் என்று….   வெறுப்பு விருப்பற்றவனாக, மிகுந்த அறிவு படைத்தவனாக, தனக்கு உவமை இல்லாதவனாக இருப்பவன்தான் தெய்வம் என்று குறிப்பிடுகின்றார்.  

ஆக தெய்வத்திற்கு எந்த எந்த சிறப்புகள் சொல்லப்பட்டதோ உயர்வுகள் கூறப்பட்டதோ அந்த சிறப்புப் பண்புகளுக்கு உரியவராக இருந்தால் அவரை நாம் தெய்வம் என்று சொல்கின்றோம்.

ஒருவனைத் தலைவன் என்கிறோம். அந்தத் தலைவனுக்கு உரிய சிறப்புகள் என்ன? ஒரு இயக்கத்தையோ அல்லது நாட்டையோ வழிநடத்திச் செல்கின்றவன், அந்த இயக்கத்திலே இருப்பவர்களை எல்லாம் கட்டிக் காப்பவன்; அந்த இயக்கத்திலே உள்ளக் கொள்கைகளை உயிர் போல பாதுகாப்பவன்; இவ்வளவு இலக்கணங்களும் பொறுந்தியவனைத் தலைவன் என்கின்றோம். அதைப் போலத்தான் தலைவன் என்கின்ற தனிப்பொருள் கிடையாது. இவ்வளவு இலக்கணங்களையும் பொருந்திய ஒருவனைத் தலைவன் என்கின்றோம்.

அதைப் போல தனக்குவமை இல்லாதவனாக வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனாக, விருப்பு வெறுப்பற்றவனாக, மிகுந்த அறிவுடையவனாக ஒருவர் இருந்தால் அவரை தெய்வம் என்கிறோம்.

தெய்வத்தைவிட உயர்ந்தவனாக வள்ளுவர் மனிதனை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.
எந்த இடத்தில்
”தெய்வம் தொழாள் கொழுனன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”

தெய்வம் என்று சொல்லப்படுகின்ற ஒன்றினைத் தொழாமல் தனது கணவனைத் தொழுதெழுகிற பெண்ணிருக்கிறாளே அவள் பெய்யெனப் பெய்யும் மழை. வேண்டுகின்ற நேரத்தில் பெய்யும் மழைக்கு ஒப்பானவள் என்று பெண்ணைப் பற்றி பாடுகிறார்.


அங்கே தெய்வம் பின்னால் போய் விடுகிறது. மனிதன் முன்னால் வருகிறான். அந்தப் பெண், தெய்வத்தைவிட உயர்வாகத் தனது கணவனைக் கருதுவாளேயானால் அந்தப் பெண்தான் தனது கணவனுக்கு எப்படி ஒரு உழவனுக்கு தேவைப் படுகின்ற நேரத்தில் மழை கொட்டுகின்றதோ அந்த மழையை போன்றவள் என்று வள்ளுவர் எடுத்துக் காட்டுகின்றார்.


இதை வாரியார் விளக்குவாரேயானால் அந்த குறளுக்கு வேறு ஒரு பொருளைக் கூறி நம்மை எல்லாம் சிரிக்க வைத்து இருக்க முடியும். நேற்றுவரை இதற்கு உரை எழுதிய பெரும் புலவர்கள் எல்லாம் தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுத்தெழுகிற பெண்கள் பெய் என்று சொன்னால் மழை பொழியும்.  இப்படித்தான் உரை எழுதப்பட்டிருக்கிறது.


மன்னிக்க வேண்டும் நம்முடைய டாக்டர் மு.வ அவர்கள் எழுதி முடித்திருக்கிற உரை வரையில் கணவனைத் தொழுதெழுகின்றப் பெண் பெய்யென்று சொன்னால் மழை பெய்யும் அது பத்தினித் தன்மையைக் குறிப்பது என்று எழுதி வைத்து இருக்கிறார்கள்.


அப்படியானால் ஓராண்டு காலம் நூறாண்டு காலமாக இல்லாத வறட்சி ஏற்பட்டபோது இந்த காரியத்தை யாரும் செய்ய முன்வரவில்லையா? என்கிற சந்தேகம் நமக்கெல்லாம் எற்பட்டுவிடும்.

அப்படி பெண்களைக் காட்டிக் கொடுக்கின்ற விதத்திலே வள்ளுவர் எழுதி இருக்க மாட்டார் என்பதுதான் நமது நம்பிக்கை. ஆகவேதான் பெய் என்றால் பெய்யும் மழைக்கு ஒப்பானவள் அந்த பெண் என்கிற அருமையான கருத்தாழம் மிக்க பொருளில் உரை செய்திருக்கின்ற பாரதிதாசன் அவர்கள்  இதே குறளுக்கு விளக்கம் தருகின்றார்.

அப்படிப்பட்ட தெய்வம் என்ற சொல்லுக்கு தெய்வம் என்பதற்கு கூறப்பட்ட இலக்கணத்திற்கு ஏற்ப, வேண்டுதல் வேண்டாதவனாக, வாலறிவனாக, தனக்குவமை இல்லாதவனாக  நம்முடைய  தமிழகத்தில் திகழ்ந்தவர்தான் நம் பேரறிஞர் அண்ணா அவர்கள்.


அந்த வகையில் நாம் தெய்வம் என்று சொல்கிறோமே அல்லாமல் , இதுவரையில் கேட்டு அறிந்து இருக்கிற புராணங்களில் கூறப்படுகின்ற தெய்வங்களோடு இணைத்து அல்ல.


வாரியார் அவர்கள் எடுத்துக் காட்டிய தெய்வங்களுக்குரிய சிறப்புகளோடு இணைத்துத் தான் நம்முடைய அண்ணனை அவரும் நம்முடைய குலதெய்வம் நம்முடைய குடும்ப தெய்வம் என்று நாம் அவர் மீது வைத்து இருக்கின்ற அன்பின் காரணமாக   அவர் மீது  நாம் கொண்டிருக்கின்ற பாசத்தின் காரணமாக அதை எடுத்து சொல்கிறோமே அல்லாமல் வேறல்ல என்று நான் சுட்டிக் காட்ட கடமைப்பட்டு இருக்கின்றேன்.


அண்ணா அவர்கள் ஏழை எளிய மக்களுக்காக அடிதளத்து மக்களுக்காக ; சாதாரண சாமான்ய மக்களுக்காகப் பாடுபட்டவர். தெய்வத்திற்கு சொல்லப்பட்ட இலக்கணங்களும் அப்படிப்பட்டவைதான்.


ஆகவேதான் நம்முடைய அண்ணா தெய்வத்திற்கு சமமானவர் என்கிற கருத்தாழ மிக்க நல்ல சிந்தனைச் செல்வங்களை எல்லாம் வாரியார் இங்கே வழங்கி இருக்கிறாரே அல்லாமல், தெய்வம் என்றால் இரண்டுக்கு மேற்பட்ட தலைகளும் கைகளும் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல.

ஆகவே தெய்வமாகி ஆகி விட்டார் என்று நாம் குறிப்பிடுவதெல்லாம் நம்முடைய அன்பை நம்முடைய பாசத்தை காட்டுவதல்லாமல் பிறிதில்லை. என்பதையும் நாம் எடுத்துக் கூறி பேரறிஞர் அண்ணா அவர்களுடைய கொள்கைகளை அவர்களுடைய எண்ணங்களை செயல்படுத்துவதுதான் நமது கடமை என்பதை வாரியார் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள்.

(தன்னுடைய உரையின் இறுதியில் பலத்த ஆரவாரங்களுக்கு கைதட்டல்களுக்கும் இடையே கலைஞர் தன்னுடைய சொற்பொழிவை முடிக்கின்ற பாங்கு அவரது அறிவுத்திறனுக்கும் ஆற்றலுக்கும் சான்றாண்மைக்கும்  எடுத்துக்காட்டாகத் திகழும். அந்த இறுதி வாக்கியங்களைப் படித்துப் பாருங்கள் நண்பர்களே …! )


நான் தொடக்கத்திலே எடுத்துக் காட்டியவாறு சந்திப்பு முடிந்து விட்டது. வாரியார் ரயில் ஏறுகிறார் நெய்வேலிக்கு நான் ரயிலேறுகிறேன் நாளை ஈரோடு செல்வதற்காக.. ஆக இந்த சந்திப்பிற்குப் பிறகு நான் செல்கின்ற இடம் ஈரோடு அவர் செல்கின்ற இடம் நெய்வேலி என்பதை மாத்திரம் நினைவுப் படுத்தி;  இடையிலே சென்னை காஞ்சிபுரத்திலே சந்தித்தோம். ஈரோட்டுக்கு நான் போகிறேன்..  நீங்கள் நெய்வேலி போகிறீர்கள்… ஆனால் நம்முடைய நட்பும் உறவும் நம்மிடத்திலே ஏற்பட்டிருக்கின்ற அண்ணா அவர்கள் உருவாக்கிய பெருந்தன்மை, அரசியல் நாகரிகம், தமிழ்ப்பண்பாடு என்றென்றும் நிலைத்து நிற்கும்…  அது இந்த சந்திப்போடு விடுபட்டுப் போகின்ற தன்மையானது அல்ல என்பதை மாத்திரம் எடுத்துக்  கூறி வாரியார் நம்மிடத்தில் வந்தாரா அல்லது வாரியார் இடத்தில் நாம் சென்றோமா என்பது கேள்வி அல்ல.

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நாம் இருவரும் ஒரு இடத்தில் சந்தித்தோம். அண்ணா அவர்களுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டோம். அவர் சொன்னார் அண்ணா அவர்கள் தெய்வமாக ஆகிவிட்டார் என்று. அவரே சொல்லும் போது நாம் இல்லை இல்லை என்று சொல்லுவதற்கில்லை.

அண்ணா அவர்களை நாம் அண்ணாவாகப் பார்க்கிறோம்; தலைவனாகப் பார்க்கிறோம்; நமது வழிகாட்டியாகப் பார்க்கிறோம்; நம்மை ஆளாக்கியவராகப் பார்க்கிறோம்…

நம்முடைய ரத்தத்தோடு உணர்வுகளொடு கலந்திருக்கிற பேரறிஞர் அண்ணா வாழ்க வாழ்க

"பிள்ளையோ பிள்ளை”- பின்னனி

"பிள்ளையோ பிள்ளை”- பின்னனி

8 July 2014 at 18:12
கலைஞர் செல்வன் மு.க.முத்து சினிமாவில் நடிக்க வந்த கதை பலருக்கு இப்போது தெரியாது. எம்ஜிஆர் கலைஞர் இருவருக்குமான நட்பு முறியவும் எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகவும் மு.க.முத்துவின் திரைப்பட நுழைவுதான் காரணம் என்பார்கள். அவர் நடிக்க வந்ததால் எம்ஜிஆருக்கு தொழில் முறைப் போட்டி உருவானது என்பவர்கள் உண்டு.

 மு.க.முத்து சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று முதலில் அறிவித்ததே எம்ஜிஆர் தான். அந்தசமயத்தில் கழக நிகழ்ச்சிகளிலும் வெளியிலும் முக.முத்து நாடகங்கள் நடத்திவந்தார். அருமையாகப் பாடுவார். தாய்மாமன் தந்த வரம் அது.

ஒருமுறை திருவல்லிக்கேணியில் நாடகம். அந்த நாடகத்தை பார்க்கவந்த படத் தயாரிப்பாளர் ஒருவர் நாடக நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்கிய எம்ஜிஆரிடம் சொல்கிறார். நான் முத்துவை வைத்து படம் எடுக்கலாம் என்று இருக்கிறேன் இதை நீங்கள் இந்த நிகழ்ச்சியில் அறிவித்துவிடுங்கள் என்று.

அதை அறிவித்த எம்ஜிஆர் அதோடு நிறுத்தாமல் அந்த படத் தயாரிப்பாளருக்கு ஒரு எச்சரிக்கை என்று சொல்லி ஒரு கருத்தை வெளியிடுகிறார்.

”முத்துவை நல்லவனாக இன்று ஒப்படைக்கின்றோம். இன்றுபோல் அவரை நல்லவனாகவே திருப்பித் தரவேண்டும்” என்று அந்த மேடையிலேயே சொல்கிறார்.

அந்த பட முதலாளி அதிர்ச்சி அடைகிறார். அவர் ஏதோ அவரிடம் செல்பவர்களை கெடுத்துவிடுவதாக மறைமுகமாக எம்ஜிஆர் குற்றம் சாட்டியதை மனதில் கொண்டு படம் எடுக்கும் முயற்சியில் இறங்காமல் விட்டுவிடுகிறார்.

எதை எம்ஜிஆர் நடக்க வேண்டும் என்று நினைத்தாரோ அது அப்போதைக்கு நடந்தது.

வெளியே பொது மக்கள் என்ன நினைத்து இருப்பார்கள்?  முத்துவின் மீது எம்ஜிஆருக்கு எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா என்று கருதி இருப்பார்கள்..

அதே நேரத்தில் படத்தயாரிப்பாளர் எம்ஜிஆரின் பேச்சில் இருந்த உட்கிடக்கை அறிந்து நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிக் கொண்டு முத்துவுக்கு நடிக்கும் வாய்ப்பை மறுக்க நேர்ந்தது.அது எம்ஜிஆரின் சதிவேலை என்று புரியாது. எம்ஜிஆரிடம் பழகியவர்களுக்கு அவர் உண்மை குணம் அறிந்தவர்களுக்கு அவர் எப்படிப் பட்டவர் என்பது தெரியும். ஆனால் திரையுலகில் அவரைப்பற்றி வெளியில் சொல்ல மாட்டார்கள் . காரணம் பயம் அடுத்து பக்தி (அடிமை).

இந்த நிலையில் முத்துவின் எதிர்காலத்தை உத்தேசித்து அவருடைய திறமைக்கு ஏற்ப சினிமாவில் நடித்தால் நல்லது என்று கருதி எம்ஜிஆரால் யாரும் முன்வராத காரணத்தால் அஞ்சுகம் பிக்சர்ஸ் நிறுவனம் உருவானது.

15 ஆண்டுகால சினிமாத்துறை அனுபவம் கொண்டவரான ஒளிப்பதிவாளர் அமிர்தம்மும் முரசொலி செல்வமும் இணைந்து அந்த நிறுவனத்தை ஆரம்பித்தனர். கலைஞரின் கதையையே தேர்வு செய்தனர். படத்தின் பெயர் “பிள்ளையோ பிள்ளை”
ஈஸ்ட் இந்தியா பிலிம் கம்பனி பிரைவேட் லிமிடெட்  என்ற சினிமா தயாரிக்க நிதிஉதவி செய்யும் கமபனியில் ரூபாய் 75000/- கடன் உதவி பெற்று அஞ்சுகம் பிக்ச்சர்ஸ் அந்த படத்தை எடுத்தது.

கலைஞரின் கதை
கிருஷ்ணன் –பஞ்சு இயக்கம்
கலைஞர் மகனின் அறிமுகம்
விசுவநாதன் இசை

இந்த கூட்டணியில் படம் வெற்றிப் படமாகும் என்ற எதிர் பார்ப்பில் அவுட் ரைட் முறையில் அந்த படத்தை வினியோகஸ்தர்கள் வாங்கினார்கள். படமும் ஓரளவு வெற்றி அடைந்தது. இந்தப் படம் வெளிவந்த போது எம்ஜிஆர் திமுகவில் இருக்கிறார். படத்துவக்க விழாவில் கிளாப் அடித்துத் துவக்கியவர் எம்ஜிஆர். இந்தப் பட சம்மந்தப் பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். முத்துவிற்கு அறிவுரைகள் தந்து இருக்கிறார். தினமும் கர்லா கட்டை சுற்றச் சொன்னார். தனக்கென்று தனி பாணி அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அதே நேரத்தில் முத்துவை தவறான வழி நடத்த சில திரைத்துறை அல்லாத நபர்களையும் ஏற்பாடு செய்து அனுப்பி அவர்களுக்கு உதவி செய்து அந்த இளைஞன் வாழ்க்கையை சீரழித்தவர் எம்ஜிஆர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எம்ஜிஆரை பற்றிய பல நிரூபிக்க முடியாத உண்மைகளில் இதுவும் ஒன்று.

திமுகவை விட்டு எம்ஜிஆர் பிரிந்த பிறகு இந்தப் படத்தைப் பற்றி சில பிரச்சனைகளை தெரிவித்தபோது எம்ஜிஆரின் காழ்ப்புணர்வு - மு க முத்துவை அவர் தொழில் போட்டியாளராகக் கருதினார் என்பதும் சிலருக்குப் புரிந்தது.


அறிவுச்சுடர் மூவிஸ் பெயரில்” நம்பிக்கை நட்சத்திரம்” என்ற மு.க. முத்து நடித்த படத்தை தயாரித்தவர்கள்  திரு.மு.க. ஸ்டாலின் , திரு.சி.சிட்டிபாபு M.P திரு. ஆர்.கே சின்னதுரை என்பது கூடுதல் தகவல். 

கழகம் கண்ட முதல் இரணகளம் - குன்றத்தூர்

கழகம்  கண்ட  முதல்  இரணகளம் -  குன்றத்தூர் 

குன்றத்தூர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுஊர். ஆனாலும் சரித்திரப் புகழ்ப் பெற்ற ஊர். அனபாய சோழன் என்ற இரண்டாம் குலோத்துங்கனின் அரசவையில் அமைச்சராக இருந்த பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இந்த ஊரில் பிறந்தவர்.

இன்றைக்கு காஞ்சிபுரம் மாவட்டத் திமுகழகச் செயலாளராக இருக்கும் அண்ணன் திரு தா.மோ. அன்பரசன் அவர்கள் இந்த ஊரில் வசிக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.

திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றிலே முக்கிய இடம் பெற்ற ஊர் இது.  திமுகழகம் உருவான ஒரு வருட காலத்தில் இந்த ஊரில் நடந்த ஒரு நிகழ்ச்சி.. நெஞ்சை பிளக்கும் தன்மையுடையது. ஆம் தடையை மீறி பேச்சுரிமை காக்க ஒன்றுகூடிய கூட்டத்தில் குண்டு வீச்சு நடத்தியது அன்றைய அரசு. மூவர் மாண்டனர்.

1949 செப்டம்பர் 17 ஆம் தேதி திமுகழகம் உருவானது. அந்த காலகட்டத்தில் மைய அரசிலிருந்து வரும் அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவது என்ற ஒரு நடைமுறைப் போராட்டத்தை திமுகழகம் அறிவித்து இருந்தது.

திமுகழகத்தின் கருப்புக் கொடியை முதல் முதல் பார்த்தவர் திரு.ஆர்.ஆர்.திவாகர். அவர் அப்போது மைய அரசில் தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். 1950 செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அவருக்கு சென்னை ,காஞ்சிபுரம், மகாபலிபுரம் ,திருக்கழுகுன்றம் ஆகிய இடங்களில்  கருப்புக் கொடி காட்டப்பட்டது. அந்த போராட்டம் அமைதியாகவும் அறவழியிலும் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடந்தது.

அடுத்து 24-10-1950 அன்று சென்னையில் திரு இராஜாஜி அவர்களுக்கு கருப்புக் கொடி காட்ட திமுக அறிவித்தது. இராஜாஜி  அவர்கள் அப்போது மைய அரசில் உள்துறை அமைச்சர் ஆக அறிவிக்கப்பட்டார். 26-10-1950 ல் அவர் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.  ஆம் இந்தியாவின் இரண்டாவது உள்துறை அமைச்சர். முதல் உள்துறை அமைச்சர் திரு வல்லபாய் பட்டேல் உடல் நலம் குன்றி இருந்ததால் அவர் பொறுப்பில் இருந்த உள்துறை திரு ராஜாஜி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. துணைப்பிரதமராக நீடித்த திரு வல்லபாய் பாட்டீல்  15-12-1950 ல் மறைந்தார்.

திரு இராஜாஜி அவர்களுக்குக்  கருப்புக்கொடி காட்ட அரசாங்கம் தடை விதிக்கிறது. திவாகர் வந்தபோது அனுமதித்த அரசு ராஜாஜிக்கு கருப்புக்கொடி காட்ட அனுமதி மறுக்கிறது. அன்றைக்கு தமிழக முதல்வர் திரு குமாரசாமி ராஜா அவர்களும் காங்கிரசு தலைவராக  திரு காமராஜ் அவர்களும் இருந்தார்கள்.

26-10-1950 அன்று குன்றத்தூரில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு திமுகழகம் ஏற்பாடு செய்தது. அதில் சிறப்புரை ஆற்ற திரு என்.வி.நடராஜன் அவர்களை அந்த பகுதி கழகத்தினர் அழைத்து இருந்தனர். அந்த பொது கூட்டத்திற்கு அன்றைய அரசு தடை விதித்தது.

அதாவது 26-09-1950 அன்று ஒரு வார காலம் 144 தடை போடப்பட்டு அது ஒரு மாதமாக ஆகி இரண்டுமாதம் என நீட்டிப்பு செய்யபடுகிறது. அப்போது குன்றத்தூரில் 144 தடை மீறி பேச்சுரிமை காக்க அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திரு என்.வி.நடராசன் 26-10-1950 அன்று செல்கிறார்.

ஊருக்குள் நுழையும் முன்பே கைது செய்கிறது போலிஸ். ஊருக்குள் திரண்ட மக்களை தடி கொண்டு அடித்தது மட்டுமல்ல துப்பாக்கியால் எட்டு முறை சுட்டு இருக்கிறார்கள்.

நண்பர்களே கவனிக்கவும்,

குன்றத்தூர் இன்றும் சென்னையின் ஒதுக்கு புறமான ஒரு சிற்றூர். 1950 ல் சுமார் 64 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும். அந்த ஒரு சின்னஞ்சிறிய ஊரில் கூட பொதுக்கூட்டம் நடத்த கூடாது என்ற தடை விதித்த சுதந்திர இந்திய காலம் ஒன்று இருந்தது. அந்த அடக்கு முறையை சந்தித்த இயக்கம் திமுகழகம்.

அண்ணா திராவிடநாடு 05-11-1950 இதழில் குறிப்பிடுகிறார் யார் யார் அந்த அடக்கு முறைக்கு ஆளாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று.

”குன்றத்தூர் கொடுமைக்கு இலக்காகி, அகிம்சா ஆட்சியினரால், கைது செய்யப்பட்டு அடக்குமுறைக்கு ஆளானோர்:-

என்.வி.நடராசன்
முனுசாமி
பாலசுந்தரம்
பக்கிரி
மாங்காடு கண்ணப்பனார்
தாமோதரன்
தாந்தோனி
சுப்பராயலு
சி.திராவிடமணி
முத்து
வரதன்
ராஜவேலு
டி.கே.சிவகுமாரன்
காஞ்சி சபாபதி
என்.திருநாவுக்கரசு
காஞ்சி பாலகிருஷ்ணன்
வேலாயுதம்
காஞ்சி ஏழுமலை
சுப்பிரமணியம்

கைதான இருபது தோழர்களில், தோழர்கள் என்.வி.நடராசன், பாலசுந்தரம், ஆகியோர் பூந்தமல்லி சப் ஜெயிலில் கிடக்கின்றனர்.

ஏனைய தோழர்கள் சைதாப்பேட்டை சப் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

குண்டுக்கு இரையானோர் மூவர்.
குண்டடிபட்டு படுகாயமடைந்த மூவரில் கீழ்க்கண்ட இரு தோழர்களும் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் கிடக்கின்றனர்.

பச்சையப்பன்
சாமிநாதன்.


”குன்றத்தூர் கோரத்தாண்டவம்”

”குன்றத்தூர் ஜாலியன்வாலா பாக்”

என்று குன்றத்தூர் நிகழ்ச்சியை குறித்து எழுதிய இரு கட்டுரைகளுக்கு அண்ணா வைத்த தலைப்பு.

அந்த கட்டுரையில்

”மூவர் பிணமென வீழ்ந்தனர். எட்டுமுறை சுட்டத்தில் மூவர் உயிருக்கு ஆபத்து வருமளவு அடிபட்டது! அவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக்கிடந்தனர். அவர்கள் ஆவி, சாவு மண்டலம் போய்த்தான் திரும்பி வந்தது! சாக்காட்டில் விளையாடுந்தோள்கள் என்று பாடிய பரம்பரையினர். உயிர் வெல்லமல்ல என்று ஊருக்கு உரைத்திடும் உத்தமர்கள் வழிவந்தனர். சாவைக்கண்டு சிரித்தவர்கள், ஆறிலும் சாவு நூறிலும் சாவு அது ஒரு இலட்சிய வெற்றிக்காக இருப்பதானால் அஞ்சாமல் ஏற்போம் என்ற வீரர் வழிவந்தோர். ஆகவே அவர்கள் அஞ்சாது நெஞ்சைக்காட்டினர். சுட்டனர். குண்டுகள் பாய்ந்தன. புகை மண்டலத்திலே ‘அந்தோ சாகிறோம்’ என்று கூறத்துடிக்கும் உதடுகளைப் பிரிக்கவும் முடியாமல் வீழ்ந்தனர். அவர்கள் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள். ஆனாலும் உயிரைக் காப்பாற்ற உன்னத இலட்சியத்தைவிடத் தயாராக இல்லை! சாவைக்கண்டு அவர்கள் அஞ்சவில்லை. சாவு தான் அவர்களைக்கண்டு அஞ்சி ஓடிவிட்டது!

இந்த நிகழ்ச்சிக் குறிப்புகள் எங்கு நடந்தன என்று கேட்கிறீர்களா? கொரியா போராட்ட ஒருநாள் வருணைனையல்ல. திபேத் படையெடுப்பின் நிகழ்ச்சிச் சித்திரமல்ல. அகிம்சாமூர்த்தி காந்தி அண்ணலின் வழிவந்தவர்கள் ஆட்சியிலே உள்ள குன்றத்தூர் என்ற சிற்றூரிலே நடந்தது இது!

பேச்சுரிமையைக்காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தினர், 144  தடையுத்தரவை மீறிடத் திட்டமிட்டனர். அறவழியில், முறையும், கட்டுப்பாடும் கைகோர்த்து நிற்கும் வகையில்!

சென்ற 26.10.50 ல் தான் இந்தக்கோரப் போராட்டம்!

ஆண்டிடும் பொறுப்பிலே அமர்ந்துள்ளோர் அக்கிரம் வழி நடந்து ‘அப்பாவி’ மக்களை கொடுமைக்குள்ளாக்கினர் அன்று!

ஆம், குன்றத்தூரில்தான் இந்தக்கொடுமை!

குன்றத்தூர் எதிர்கால திராவிட சரித்திரத்திலே குருதியால் குறிப்பிடப் படும் இடமாகிவிட்டது! வரலாற்றிலே வரும் இரத்தத்தடாகம் கண்ணீர்ப் பெருவெள்ளம் அது! அங்கு பிணவாடை வீசும், நிச்சயம்!”
”குன்றத்தூரில் அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை நம் கண் முன்னால் கொண்டுவந்தால் நெஞ்சு கொதிக்கிறது!

பேச வந்தவர்கள், கொடியெடுத்துச் சென்றவர்கள், துண்டறிக்கைகள் வெளியிட்டவர்கள், சுவரொட்டிகள் ஓட்டியவர்கள், கூட்டங்கூட்டமுயற்சித்தவர்கள்-எல்லோரையும் அடித்து நொறுக்கினர்.

அன்று அங்கு, தலையிழந்த சார்லஸ் மன்னனின் குரலைக் கேட்டனர். பிரஞ்சு லூயியின் உருவத்தைப் பார்த்தனர். ரஷ்ய ஜாரின் ஆவி உலவிற்று. இட்லரின் சாயல் தெரிந்தது. இத்தாலிய முசோலினியின் சிரிப்புக் கேட்டது. குன்றத்தூரில் ஆணவ ஆர்ப்பாட்டம் உச்சநிலைக்குப் போய்விட்டது!

ஆளவந்தாரே, இதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! அறப்போரில் குதித்துள்ள அவர்கள் அத்தனை பேரும் பயணம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்ட பட்டாளம்.  மரண சாசனம் எழுதிவைத்துவிட்டுப் புறப்பட்டுள்ள உரிமைச் சேனை- உயிர் பெரிதல்ல. மானந்தான் பெரிது என்று கூறிடும் போரணிவகுப்பு. ஆகவே துப்பாக்கி முனையை நீட்டி, அவர்களின் தூய இலட்சியத்திலிருந்து பிரித்துவிட முடியாது! குண்டுகள் பாயப் பாய, இன்னும் அதிகமாக மக்கள் திரண்டு நிற்பர்.

‘குன்றத்தூர்’ அவர்களின் உணர்ச்சியைக் குன்றிடச் செய்யவில்லை. ஊக்கத்தைப் பொன்றிடச் செய்யவில்லை- ‘குன்றத்தூரால்’ அவர்கள் உள்ளத்திலே ஒளிவிடும் இலட்சியங்கள் அகன்று விடாது-மேலும் அதிக வலுவாக வளரும்! இதனை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!”
என்று அண்ணா எழுதினார்.

திராவிட முன்னேற்றக் கழகம் உருவான பிறகு கழகம் கண்ட முதல் இரணகளம் ‘குன்றத்தூர்’.

கழக வரலாற்றில் அக்டோபர் 26 ஆம் தேதி மறக்கமுடியாத நாள். மறக்க முடியாத ஊர் குன்றத்தூர். 

மனிதத்தை மறைக்கும் மதச்சின்னம்

மனிதத்தை  மறைக்கும்  மதச்சின்னம்  

4 September 2014 at 16:23
திமுகழக அன்பர்கள் இப்போது எப்போதும் இல்லாத அளவு நெற்றியில் மதக் குறியீடு அணிவதை பார்க்கமுடிகிறது. கழகக் கூட்டங்களில் செயல்வீரர் கூட்டங்களில் அண்ணா அறிவாலயத்தில் எல்லாம்கூட நெற்றியில் திருநீறு / குங்குமம்/ சந்தனம் பூசிக்கொண்டு வருபவர்களைக் காணமுடிகிறது.

திமுகழகத்தில்  கட்சியின் சட்டதிட்டங்கள் பிரகாரம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் உறுப்பினராக தடை இல்லைதான். ஆனாலும் இத்தகைய செயல்கள் ஏற்புடையதா என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவே இந்த பதிவு.

சமதர்ம சமுதாயம் காண மக்களிடையில் விழிப்புணர்ச்சி உருவாக்க பெரியார் தலைமையிலான திராவிடர் இயக்கம் கடவுள் மறுப்புக் கொள்கையையும் முன்னிறுத்தி பரப்புரை செய்தது.

சுதந்திர இந்தியாவில் திராவிட இயக்கத்தின் அரசியல் பிரிவான திமுகழகம் கண்ட அறிஞர் அண்ணா அவர்கள் தம்முடையை அழகுதமிழ் நடையில் பல கடவுள் மறுப்புக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்கள்.
-    பரந்தாமனுக்கு பகிரங்க கடிதம்
-    பரமசிவனுக்கு பகிரங்க கடிதம்
-    தேவலீலைகள்
-    புராண மதங்கள்
என்பவை அண்ணாவின் அருமையான இந்து மத கடவுள் எதிர்ப்பு கட்டுரைகள்.

“மாஜி கடவுள்கள்’ என்னும் இன்னொறு கட்டுரைத் தொடர் மேற்கத்திய புராண கடவுள்களைப் பற்றியது.

மேடைகளிலும் அண்ணாவும் அவருடன் அணி வகுத்து அவருடைய தம்பியரும் நானிலம் நலம்பெற நாத்திகம் பேசினர். நாத்தழும்பு ஏறியவர் என்று அவர்களை வைதீகர் வைதனர்.

அண்ணா அவர்களுடைய பரப்புரை மதங்களில் மண்டிக்கிடந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்தது. பகுத்தறிவுக் கருத்துகளை தன் பேச்சிலும் எழுத்திலும் காலத்திற்கு ஏற்றவாறு பல்வேறு வழிமுறைகளில் அவர் பரப்புரை செய்தார்.
நல்லதம்பி , சொர்கவாசல், ஓர் இரவு, இரங்கோன் ராதா போன்ற திரைப்படங்கள் மூலம் இயக்கக் கருத்துகளை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்க முயன்றார்.

அவர்வழியில் கலைஞரும் இன்னும் பல திராவிட எழுத்தாளர்களும் உருவானார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியாரும் அண்ணாவும் பெரும்பான்மை சமுதாயமாக விளங்கும் இந்திய அரசுரிமை சட்டத்தின்படி இந்துக்களாக இருப்பவர்களை நீங்கள் இந்துக்கள்  அல்ல தமிழர்கள் உங்களுக்கென்று தனி சமய கருத்துகள் இருந்தன.அவை ஆரிய புராண இதிகாச புளுகு கதைகளுடன் தொடர்பு இல்லாதவை என்பதை விளக்கினார்கள்.

”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றும் ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’   என்றும் சமத்துவ சிந்தனையும் எண்ணங்களையும் கொண்டவராக இருந்த தமிழர் ஆரியக் கலப்பால் அவர்தம் ஆதிக்கத்தால் ஆரியமாயைக்கு உட்பட்டு அழிந்து அமிழ்ந்து போன வரலாற்றை நமக்கு உணர்த்தியது திராவிடர் இயக்கம்.

சமுதாயத்திலே திராவிடர் ஆரியர் திணித்த வருண பாகுபாட்டால் அதன் அடியில் விளைந்த சாதிகளால் பிளவுபட்டு சிதைந்து போயினர். சாதிமுறைக்கு நான்மறைகள் ஆதாரமாக இருக்கின்றன. அந்த நான்மறைகளை  நம்தமிழர் ஏற்றனர்.

“நான்மறைஅறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி சிறக்க”
என்றும்
”தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்”
என்றும்
”அரியானை அந்தணர்தம் சிந்தையானை”
என்றும் ஆரியரின் சமயக் கோட்பாடாம் பிராமணீயத்தை தமிழர் ஏற்றனர்.

செந்தன்மை பூண்டு ஒழுகும் செவ்வியரே அந்தணர் என்னும் அறவோர் என்பதே வள்ளுவம் வகுத்த தமிழர் நெறி. இது தெரியாமல் ஆரியப்பார்ப்பனரையும் அந்தணர் என்று வழங்கினர்.

பிராமணீயத்திலிருந்து தமிழர் சமயம் எது என்று பிரிக்க முடியாதபடிக்கு ஆரியம் தமிழரின் வாழ்வியலை மாற்றிவிட்டது. அன்றிருந்த ஆட்சியர் அதற்கு துணை போயினர். ஆரியம் எது தமிழ்நெறி எது என்று எளிதில் பாமரமக்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆதலால் எல்லாவற்றையுமே ஆரியத்திற்கு நிகரானதாக கருதி எதிர்க்கவேண்டிய கட்டயாம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில்தான் பெரியார் கடவுள் மறுப்பு என்னும் ஆய்தத்தை கையில் எடுத்தார்.

ஆரிய ஆதிக்கத்தை முன்னிறுத்தும் பிராமணீயம், பிராமணர்களை முகத்தில் உருவாக்கிய கடவுள், அந்த கடவுளின் பாஷையான சமசுகிருதம், இவைகள் ஒருபுறமும் அதற்கு மறுபுறம் எளிய சூத்திர பஞசம தமிழனும் அவன் மொழியான தமிழும் பலநூறு ஆண்டுகளாக எதிரெதிராகப் போராடி வந்து இருக்கின்றன. சங்க இலக்கியங்கள் திருக்குறள் மற்றும் சித்தர் மரபிலான பாடல்கள் யாவும் இதனை மெய்பிக்கின்றன. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னார் திருமந்திரத்தில் திருமூலர்.

இதன் அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமணீயத்திற்கும் சமசுகிருததிற்கும் சமசுகிருதத்தை மூலமாகக் கொண்ட இந்தி ஆதிக்கத்திற்கும் எதிராக உருவான திராவிட சிந்தனை பெரும் மக்கள் இயக்கமாக மாறியது.
பெரியார் அண்ணா அவர்களுடைய பேச்சும் எழுத்தும் தமிழரிடை பிராமணீயத்திற்கு எதிராக அடி ஆழ்மனதில் அமிழ்ந்து கிடந்த எதிர்ப்பை உசுப்பிவிட்டது.

இன்று தமிழ்நாடு சமூகநீதியிலும் பொருளாதாரத்திலும் முன்னிலும் பல்மடங்கு முன்னேறி இருக்கிறோம். அதற்குக் காரணம் திராவிடச் சிந்தனையே. வெள்ளையர் வெளியேறிய பிறகு பெருந்தலைவர் காமராசர் ஆட்சிகாலம் தொடங்கி இன்றுவரை நாம் அடைந்த சாதனைகள் யாவும் திராவிட சிந்தனையின் பயன்கள் ஆகும். அண்ணா கலைஞர் தலைமையிலான திமுகழக ஆட்சி சரித்திர சாதனைகள் பலவற்றைப் படைத்து இருக்கிறது.

சாதாரண கூலிகளாகவும் தொழிலாளிகளாகவும் வேறு மாநிலங்களுக்கு சென்று அவதிபட்ட தமிழன் இன்று அவ்விதம் போவது இல்லை. வேற்று மாநிலத்தவர் இன்று தமிழகம் வந்து கூலித் தொழிலாளிகளாக வேலை பார்க்கும் நிலை வந்து இருக்கிறது.
திராவிட இயக்கத்திற்கு நேர் எதிர் கொள்கை கொண்ட இந்துத்துவ ஆதிக்கம் செலுத்தும் நோக்கம் உடைய கட்சி இன்று மைய அரசில் பெரும்பான்மை வலுவுடன் ஆட்சிக்கு வந்து இருக்கிறது. இந்த நிலையில் நாம் முன்னிலும் விழிப்புடன் இருக்க வேண்டி இருக்கிறது.

ஒருபுறம் உடன் இருந்தே கொல்லும் நோயாக தமிழரின் ஒற்றுமையின்மைக்கு உலை வைக்கும் சில தன்நல சக்திகள் இருகின்றன. அவைகள் திராவிடச் சிந்தனையை கருத்தை மறுத்து பேசுவதன் மூலம் பரம்பரை பகையான ஆரியத்திற்கு துணை போகின்றன. இந்த சூழலில் தமிழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது.

நாம் தன்மானமுள்ள தமிழனாக வாழவேண்டுமானால் இனமானம் கொண்ட திராவிடனாக நம்மை அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டியதாகிறது. திராவிடத்தின் உட்கூறு சமநீதி சமத்துவம். அதற்கு அடிப்படை மனிதநேயம். அது எந்த ஒரு மதம் அல்லது சாதியும் ஆதிக்கம் செல்லுத்துவதை அனுமதிக்காது.

தீவிர கடவுள் மறுப்பாளரானாலும் தந்தை பெரியார் கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு தக்க மரியாதை தருவதில் தவறியவர் அல்ல. அவர் வீட்டுக்குப் போனால் நெற்றியில் இட்டுக் கொள்ள அவர்களுக்கு அவரே திருநீறு கொடுப்பார். அதுதான் மனித நேயம் என்பது.

ஆதிக்கம் அற்ற சமுதாயம் அமைக்கப் பாடுபடும் அரசியல் இயக்கம் திமுகழகம்.

திமுகழகத்தில் இருக்கும் சாதாரண தொண்டன்கூட  குறிப்பிட்ட மதத்தை அல்லது சாதியை அடையாளப்படுத்தும் எந்த காரியமும் செய்ய துணியாதவனாக இருக்க வேண்டும். அப்படி பலபேர் இன்றும் இருக்கிறார்கள்.  பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு இந்த விசயத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட கொள்கை. பகுத்தறிவாளர்களின் கருத்துகளை ஏற்பதும் விடுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம்.  இதில் யாருடைய வற்புறுத்தலுக்கும் இடம் தரக்கூடாது. அதுதான் கட்சியின் சட்டதிட்டங்களின் உட்கருத்து.

ஆனாலும் பொதுநலத்தொண்டு புரிய திமுகழகம் போன்ற அரசியல் கட்சிகளில் பொறுப்புக்கு வந்தவர்கள்  மத அடையாள குறியீடுகளுடன் பொதுவெளியில் வராமல் இருப்பது நல்லது. அத்தகைய குறியீடுகள் அவர்களுக்கு அவர்கள் சார்ந்த மதங்களின் மீதான பிடிப்பை காட்டுகிறது. அது சரியல்ல.

மதத்தையும் சாதியையும் வைத்து அரசியல் செய்யும் மற்ற கட்சியினரை கொள்கை அளவில் எதிர்க்கும் தார்மீக உரிமையை ஒருசிலரின் இத்தகைய செயல்களால் திமுகழகம் இழக்க கூடாது.

ஆகவே எனதருமை திமுகழக நண்பர்களே கவனிக்கவும்.. பிள்ளையார் சதுர்த்திக்கு  வாழ்த்துச் செய்தி என்பது குறித்து தமிழர்களின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் தளபதி அவர்களின் அறிக்கை கட்சியின் நிலைபாட்டை சரியாக உணர்த்தி இருக்கிறது.

அதை புரிந்து நடப்பது நம் கடமை.  அவர் திராவிடச் சிந்தனையின் வார்ப்பு என்பதை நிரூபித்து இருக்கிறார்.  சரியான நேரத்தில் சரியான கொள்கை விளக்கம் தந்த தங்கதளபதிக்கு வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க தமிழகம்.! வெல்க திராவிடம்.!