Tuesday, October 18, 2016

அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது - "எங்கிருந்தாலும் வாழ்க"

அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
”சிவாஜி கணேசனின் நடிப்பு எனக்குப் புதிதல்ல. அவருடைய திறமையை நான் நன்கு அறிந்திருக்கிறேன். பெரிய அளவில் கணேசன் புகழ் பெறுவார் என்ற நம்பிக்கை பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே எனக்கு எற்பட்டு விட்டது . தம்பி கணேசா ! எங்கிருந்தாலும் வாழ்க !”
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை மேற்கண்டவாறு பேசியதை கேட்டவர்கள் அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டு அண்ணாவின் பெருந்தன்மையை உயர்பண்பை பாராட்டினார்கள்.
இன்றைய தலைமுறை இளைஞர்கள் அறிய வேண்டிய வரலாற்று நிகழ்வு இது.
திராவிட முன்னேற்ற கழகத்துடனும் அதன் முன்னனித் தலைவர்களுடனும் தொடர்பில் இருந்து கழகப் பணியும் கலைப்பணியும் செய்து வந்த (சிவாஜி) கணேசன் சந்தர்ப்ப வசத்தால் திமுகவிலிருந்து பிரிந்து காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருந்த சமயம். வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடித்து பெரும் புகழ் பெற்ற காலகட்டம். அந்த நாடகத்தை தமிழ் நாடெங்கும் நடத்தி எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டு பாராட்டு தெரிவித்து விட்டார்கள். அண்ணா அவர்களைத் தவிர.. சென்னையில் அண்ணாமலை மன்றத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் கடைசியாக நடக்க இருக்கிறது சிவாஜிக்கு அண்ணாவின் பாராட்டை பெற ஆசை. அரசியல் நிலைபாடு அதற்கு தடையாகுமோ என்று அச்ச உணர்வுடன் அண்ணா அவர்களிடம் எப்படியாவது சம்மதம் பெற தன்னுடைய சகோதரர் தங்கவேலுவையும் கரந்தை சண்முக வடிவேலுவையும் அனுப்பி வைக்கிறார்.
அண்ணா அப்போது திருவண்ணாமலையில் தங்கி இருந்து வடஆற்காடு மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அங்கு சென்று அண்ணாவிடம் அவர்கள் நாடகத்திற்கு தலைமை ஏற்க அழைப்பு விடுகிறார்கள். அன்றைய தேதியில் காஞ்சிபுரத்தில் பொதுக் கூட்டம் இருப்பதால் அண்ணா வர இயலாது என்று சொல்லி விடுகிறார். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கலைஞரிடம் சென்று எப்படியாவது அண்ணாவை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். கலைஞருக்கும் நடிகர்திலகத்திற்கும் அப்போதும் நல்ல இணக்கம் ஈடுபாடு இருந்து வந்தது. கலைஞர் திருவண்ணாமலைக்கு சென்று ப.உ.சண்முகம் இல்லத்தில் அண்ணாவை சந்தித்து சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்திற்கு அழைப்பு விடுக்கிறார்..
“அண்ணா, இதற்கு முன் பல தடவை சிவாஜி கணேசன் தங்களை நாடகம் பார்க்க விரும்பி அழைத்ததாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். நாளைதான் அந்த நாடகம் கடைசியாக நடக்குமாம். தாங்கள் தலைமை ஏற்று கவுரவிக்க வேண்டுமென மிகவும் தயவாகக் கேட்டுக்கொள்கிறார்கள். போய்வந்து விடுங்களேன் “ என்கிறார் கலைஞர்
அண்ணாவோ ”தம்பி காஞ்சிபுரத்தில் பொதுக் கூட்டம இருக்கிறதே. போகவில்லை என்றால உள்ளூர் காரர்கள் என்ன நினைப்பார்கள் “ என்கிறார்.
கலைஞர் ”தாங்கள் விரும்பினால் தங்களுக்கு பதிலாக நான் காஞ்சிபுரம் கூட்டத்திற்கு போகிறேன். நீங்கள் வரமுடியாத நிலையை அவர்களுக்கு விளக்குகிறேன்.. நீங்கள் கட்டபொம்மன் நாடகம் காண சென்னைக்கு செல்லுங்கள்” என்று சொல்கிறார்.
கலைஞரின் வேண்டுகோளை ஏற்று அண்ணா சம்மதம் தருகிறார். மறு நாள் மாலை ஐந்து மணிக்கு அறிவகத்தில் வந்து பாருங்கள் என்று வந்தவர்களிடம் சொல்லி அனுப்புகிறார். எல்லொருக்கும் மகிழ்ச்சி.
அண்ணா வேதாசலம் என்றழைக்கும் லிங்கம் அவர்களுடைய ஸ்டாண்டர்டு காரில்தான் பயணம் செய்வார். அன்று இரவு “ வேதாசலம் காஞ்சிபுரம் போகலாம்” என்கிறார். லிங்கம் அவர்கள் அண்ணா காஞ்சிபுரம் போனால் சென்னையில் நாடகம் பார்க்க போகமுடியாமல் போகலாம் என எண்ணி “அண்ணா, காஞ்சிபுரம் சாலை சரியில்லை நாம் நேராகவே சென்னை சென்றுவிடுவோம்” என்று சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார்.
அறிவகத்தில் அண்ணா அன்று மாலை இருக்கிறார். நாடகத்திற்கு அண்ணாவை அழைத்துபோக சிவாஜி தன்னுடைய கார்களை அனுப்பி வைக்கிறார். பிளைமத், டிஸோட்டா, பியட் என மூன்று கார்கள் அறிவகத்தில் அண்ணாவுக்காக. அண்ணாவோ லிங்கத்தின் சாதாரண ஸ்டாண்டர்டு காரில் ஏறிக் கொண்டு நண்பர்களை சிவாஜி அனுப்பிய கார்களில் ஏறிக் கொள்ளச் செய்கிறார். அண்ணாவின் எளிமை எல்லோரையும் வியக்கச் செய்தது.
அன்று அண்ணாமலை மன்றத்தில் அண்ணா வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் பார்த்துவிட்டு பேசும் போதுதான் ”தம்பி கணேசா ! எங்கிருந்தாலும் வாழ்க” என்று சிவாஜி கணேசனை வாழ்த்தினார்.
கட்டபொம்மனாக நடித்து வீர வசனம் பேசி முழக்கமிட்ட சிவாஜி கணேசன் கண்ணில் நீர் தளும்ப நின்று கொண்டிருந்தார். அன்று இரவு ராயப்பேட்டை சண்முக முதலித் தெருவில் இருந்த தன் வீட்டுக்கு அண்ணாவையும் அவர் நண்பர்களையும் வரவழைத்து விருந்து படைத்து மகிழ்ந்தார் சிவாஜி கணேசன். அந்த வீடு முன்பு கலைவாணருக்கு சொந்தமாக இருந்த போதும் அண்ணா அந்த வீட்டுக்கு கலைவாணரை பல முறை சந்திக்க வந்ததையும் அவருடன் உரையாடியதையும் நினைவு கூர்ந்து நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் இருந்தார் அண்ணா.
அண்ணாவின் சொல்லும் செயலும் பல்வேறு அர்த்தம் கொண்டவை என்றும் அவை காலகாலமும் பொருத்தமுள்ளவை என்பதனால் நான் அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது என்று அண்ணாவின் உரைகளை எழுத்துகளை தேர்ந்தெடுத்து பதிவிட்டு வருவது நண்பர்கள் அறிந்தது.
அவற்றில் இந்த பதிவு சிறப்பானதாக அமையும் என்று கருதுகிறேன். அண்ணா - கலைஞர் – நடிகர்திலகம் இம்மூவரின் உள்ளார்ந்த உறவை இந்த நிகழ்ச்சி மூலம் அறியலாம்.

No comments: