Saturday, June 11, 2016

கலைஞர் மேடை காவிய ஓடை

கலைஞர்  மேடை காவிய  ஓடை 

தமிழக அரசியல் வரலாற்றில் யார் எதைச் சொன்னாலும்,  கண்ணியமான பேச்சும் செயலும் தி.மு.கழகத்தால் கடைபிடிக்கப்பட்டு வந்தது என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உண்டு. கழகத்தின் மூத்தத் தலைவர்கள் யாரும் தரம் தாழ்ந்து பேசமாட்டார்கள். எதிர் கருத்து உடையவர்களையும் மதிக்கும் பக்குவம் அறிஞர் அண்ணா அவர்களால் போதிக்கப்பட்டது.

ஒருமுறை திரு என். வி.நடராசன் அவர்கள் திருக்கழுகுன்றத்தில் திரு காமராஜ் அவர்களை தவறாக ஏதோ பேசிவிட்டார் என்பதால் மேடையில் இருந்த அண்ணா அவர்கள் என்விஎன் அவர்களுடைய பேச்சை நிறுத்தச் சொல்லி கண்டித்த சம்பவம் உண்டு.

கலைஞரும் முன்னால் பேசியவர்களுடைய தவறான கருத்துகளுக்கு அல்லது யார்மீதான தனிப்பட்டத் தாக்குதல்களுக்கு தன்னுடையப் பேச்சில் கண்டணம் செய்த நிகழ்வுகள் ஏராளம்.

அறிஞர் அண்ணா அவர்கள் மருத்தவமனையில் இருந்த சமயம் அமெரிக்க மருத்துவர் மில்லர் வந்து வைத்தியம் பார்க்கிறார். அப்போது நெய்வேலியில் திருமிகு வாரியார் அவர்கள் உபன்யாசம் செய்யும் நிகழ்ச்சியில் ஒரு கருத்தை வெளி இடுகிறார். அந்த கருத்து திமுகவினர் மனம் வருத்தச் செய்கிறது. அதனால் ஆத்திரம்கொண்டு அடிக்கப் போனார்கள். அந்த தமிழ்தாத்தா அந்த பக்தி ஞானப்பழம் 64ஆம் நாயன்மாராக கொண்டாடப்படும் வாரியார் அவர்கள் 1975 ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாள் விழாவில்

”இறுதிவரை மூச்சிலும் பேச்சிலும் பிறருக்காகவே வாழ்ந்து அண்ணா தெய்வமானார்”

என்று உருக்கமான உரையை நிகழ்த்தினார்.

அந்த மேடையில் கலைஞரும் இருக்கிறார். கொள்கையால் கருத்தால் மாறுபட்டவர்களையும் அரவணைத்துப் போகும் பக்குவம் அவர்களாலேயே பாராட்டப்படவும் மெச்சப்படவும்  நல்லெடுத்துக்காட்டாக விளங்குவது திமுகழகம்.

அதுவும் கலைஞர் காலத்தில் பல நிகழ்வுகள். உண்டு. கலைஞர் அண்ணாவின் இதயத்தைப் பெற்றவர் என்றால் வெறும் பேச்சல்ல. அதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. அதற்கான முழு அருகதையும் அவருக்கே உண்டு.  சோதனைகளையும் சாதனைகளின் படிக்கட்டாக மாற்றும் வல்லமை மிக்கவர் கலைஞர்.

வாரியார் சொல்கிறார்

“ அண்ணா என்ற சொல்லுக்கு அணுகி அருள் புரிதல் என்று பொருள். அணுகுதல் என்றால் நெருங்குதல். கிணற்றில் விழுந்தவனை கிணற்றில் குதித்துதான் காப்பாற்ற வேண்டும்.அதைப் போல ஏழை எளியோரை நெருங்கி அவர்கள் குறை தீர்த்தவர் அண்ணா”

”திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சிவபெருமானை அண்ணா என்று அழைக்கிறார்”.

“ மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கு அண்ணா எடுத்துக் காட்டாக திகழ்கிறார். மனிதன் என்றால் சிந்திப்பவன் மனம் உடையவன் என்று பொருள். .மனிதன் தனது சிந்தனையினால் அறிவு ஆற்றலினால் அரிய குணங்களினால் தெய்வமாக முடியும்.  அப்படி ஆனவர்தான் அண்ணா”

என்று ஒரு நீண்ட அரிய உரை நிகழ்த்தினார். இறுதி உரை ஆற்றும் போது கலைஞர் தெரிவித்தக் கருத்துகள் அவருடைய சான்றான்மைக்கும் தலைமைப் பண்புக்கும் உண்மையான பெரியார் அண்ணா வழிவந்த தீரர் என்பதற்கும் சாட்சியாக அமைந்தது, 

கலைஞரும் கிருபானந்த வாரியாரும்

கலைஞரும் கிருபானந்த  வாரியாரும் 

7 July 2014 at 01:17

அறிஞர் அண்ணாவின்  பிறந்த நாள் விழாவில் 1975 ஆம் ஆண்டு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததும் அந்த விழாவில் வாரியார் அவர்கள் பேசிய பிறகு கலைஞர் ஆற்றிய உரை இன்றும் நாம் எல்லாம் படித்து உணர வேண்டிய பல கருத்துகள் நிறைந்தது. இந்த செய்தியே அதாவது கலைஞரும் வாரியாரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி அதுவும் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் என்பது இக்கால இளைஞர்களுக்குத்  தெரிந்திருக்காது. அதே வேளையில் புரட்சிநடிகர் எம்ஜிஆர் உடன் வாரியார் கலந்துகொண்டது தெரிந்து இருக்கும். இணையத்தில் கலைஞரும் வாரியாரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் கிடைக்கவில்லை. ஆனால் எம்ஜிஆருடன் இருப்பது கிடைக்கும். இப்படிப்பட்டச் செய்திகளை வரலாற்று நிகழ்வுகளை அரிய தகவல்களாக நாம் கருதுவதை இன்றைய இளைஞரிடம் கொண்டு சேர்ப்பது நம் கடமை.

கலைஞரின் உரை:

இந்த விழாவில் வாரியார் அவர்களுடைய உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தற்கு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய பேச்சு காலம் தழுவியது காலத்திற்கு ஏற்ற பேச்சு. காலத்திலே ஒரு கண் வைத்து இருந்த காரணத்தினால்தான் மிக எச்சரிக்கையாக பேசினார். இல்லாவிட்டல் மணி 12 ஆனது நமக்கெல்லாம் தெரியாத போது அவருக்கு எப்படி தெரிந்தது?.

அவர் பேசும்  போது காலம்காட்டி மணி 10 காட்டி இருந்தால் அதற்கு ஏற்ற உதாரணங்கள் ராவணன் தலை பத்து தசாவதாரம் பத்து இப்போது மணி பத்து என்று சொல்லி இருப்பார். ஒருவேளை கடிகாரம் மணி 6 காட்டி இருந்தால் முருகனுடைய 12 கைகளை விட்டு விட்டு முருகனுக்கு தலை ஆறு  இப்போது மணி ஆறு என்று சொல்லி இருக்கக் கூடும். மணி 3 ஆக இருந்தால் தமிழ் மூன்று தமிழர் கொடி மூன்று என்று அந்த மூன்றுடன் மணி மூன்றை இணைத்து இருப்பார்.

ஆகவே மிகுந்த கற்பனை வளமும் சொல்வளமும் நிறைந்த அவருடைய சொல் இனிமைக்காக நாம் என்றென்றும் பாராட்டக் கடமைபட்டு இருக்கிறோம். 

கம்பனுக்குச் சிலை வைத்து இருப்பதாகச் சொன்னார். கம்பன் எழுதியக் கதையை ஏற்றுக் கொண்டு அல்ல. கம்பனுடைய அழகுத்தமிழைப் பாராட்டுவதற்க்காகத்தான் அவருக்குச் சிலை வைத்தோம்.

அதைப் போலவே வாரியாருடைய சொற்பொழிவைப் பாராட்டுகிறோம் என்று சொன்னால் அவர் சொல்கின்ற கருத்துகள் அத்தனையும் ஏற்றுக் கொண்டல்ல. அவர் பேசுகிற சொல்லுகிற நேரத்தில் விளையாடுகின்ற தமிழைப்பாராட்டுவதற்காத்தான் அவரை நாம் பாரட்டுகின்றோம்.

அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள் ராமாயணம் பாரதம் இரண்டையும் ஒரு ஆசிரியர் பல முதியவர்களுக்குக் கற்றுத்தந்து, பிறகு ஓராண்டு காலம் கழித்து அவர்களை எல்லாம் அழைத்து அவர்களிடம் ராமாயணத்திற்கும் பாரதத்திற்கும் என்ன வேறுபாடு என்று கேட்டார். ஒருவன் ராமாயணம் அட்டை பச்சை;  பாரதத்திற்கு பக்கம் இத்தனை;  அச்சகம் இன்னார் என்று ஒவ்வொறு விதமாகச் சொன்னார்கள். ஆனால் ஒரு சிறுமி ஒரே வித்தியாசம் ராமாயணம் பெண்ணாசையால் வந்தது பாரதம் மண்ணாசையால் வந்தது என்று சொன்னதாக வாரியார் குறிப்பிட்டார்.

ஒரே ஒரு வித்தியாசம் உடனடியாக எண்ணிப் பார்த்தால் ராமாயணம் ஐந்து எழுத்து பாரதம் நான்கு எழுத்து ஆகவே ஒரு எழுத்து வித்தியாசம் என்று கூட நாம் சொல்லிக் கொள்ளலாம்.

இராவணணுக்குப் பெண்ணாசை ஏற்பட்டதாக வாரியார் அவர்கள் குறிப்பிட்டார்கள். வாரியார் அவர்கள் தமிழினத்திற்காக பாடுபடும் பெரும் புலவர்.என்கின்ற வகையிலே அறிஞர் அண்ணா அவர்கள் வாரியார் மீது பெரும் அன்பு கொண்டு இருந்தார் என்பதை நண்பர் வில்லாளன் அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.

அந்தப் பெண்ணுக்கு பதிலாக வெறு ஒரு பெண் அவர் அண்ணா அவர்களுடைய பள்ளிக்கூடத்திலே படித்தவராக இருந்து இராமயணத்தைப் பற்றி அந்தப் பெண்ணிடம் கேட்டு இருந்தால்; அதற்கு வேறு பதில் கிடைத்து இருக்கும்.

“இராமாயணம் என்பது ஆரியருக்கும் திராவிடருக்கும் நடந்தப் போர். பாரதம் என்பது ஆரியருக்குள்ளேயே நடந்தப் போர்” என்று பதில் கிடைத்து இருக்கும்.

ஆரியருக்கும் திராவிடருக்கும் நடந்த போர் என்று நான் சொல்லவில்லை. இன்றைய பிரதமரைப் பெற்றெடுத்த முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் இன்றைய பிரதமர் பிரியதர்சினியாக இருந்த காலத்தில் எழுதியிருக்கிற கடிதத்தில் பண்டிதர் நேரு அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் சிறுவர்களுக்கான பாடப்புத்தகத்தில் நேரு அவர்களுடைய வாசகங்கள் மின்னிக் கொண்டு இருக்கின்றன.

ஆனால் வால்மீகி எழுதிய ராமாய்ணம் வேறு கம்பர் எழுதிய ராமாயணம் வேறு. இதை நானே வீட்டில் எடுத்துச் சொன்னால் நம்புவதில்லை. இல்லை இல்லை எல்லாம் ஒரே ராமாயணமாகத்தான் இருக்கும் என்று வாதாடுவார்கள்.

வாரியார் அவர்களேகூட இப்படிப்பட்டவர்களுக்கு நல்ல பதில் அளிக்கும் விதமாக வால்மீகி ராமாயணம் வேறு கம்ப ராமாயணம் வேறு என்று எடுத்து சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

வால்மீகி ராமாயணத்தில் சீதையை ராவணன் கையால் தொட்டுத் தூக்கிக் கொண்டு போனான் என்று வால்மீகி எழுதி இருக்கிறார். ஆனால் கம்ப ராமாயணத்தில்,ராவணணுடைய தமிழ்ப்பண்பை உயர்த்திக் காட்டுவதற்காக ராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிக் கொண்டு போனான் என்று இல்லாமல் சீதை இருந்த இடத்தோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு போனான் என்று குறிப்பிடுகின்றார். அப்படி எடுக்க இயலுமா? முடியுமா முடியாதா என்பதல்ல கேள்வி. தமிழன் ஒரு கதையை அணுகுகின்ற நேரத்தில்,  தமிழ்ப் பண்பாட்டோடு அணுகினான் என்பதற்கு அடையாளமாகத்தான் பல இடங்களில் வால்மீகி ராமாயணத்தை மாற்றி அமைத்து இருக்கிறார்.

என்னதான் கம்பன் வால்மீகி ராமாயணத்தை மாற்றி அமைத்தாலும் கூட வாலி வதை படலத்தில் ராமனுக்கு நியாயம் கற்பிக்க கம்பரால் முடியவில்லை.

அந்தக் கம்ப ராமாயணத்தை எடுத்து இங்கே பேசிய நம்முடைய வாரியார் அவர்களும் வெற்றி பெற்றார் என்று சொல்வதற்கில்லை. நான் ஏதோ பட்டிமன்றம் நடத்துவதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். வாரியார் கருத்துகளுக்கு எதிர் கருத்து சொன்னதாக எண்ணாதீர்கள்.

ஏனெனில் வாலியினுடைய வர்க்கம் வானர வர்க்கம் என்று சுட்டிக் காட்டப் படுமேயானால் சுக்கிரீவனுடைய வர்க்கமும் அதே வர்க்கம்தான். அவனும் அவனுக்குத் தம்பிதான். வாலியின் மனைவி தாடகைக் கூட வாலி இறந்தபிறகு சுக்கிரீவனை மணம் செய்து கொண்டாள் என்பதில் அகமகிழ்ந்த ராமன், வாலியைக் கொன்றதற்கு அவன் முறையற்ற முறையில் திருமணம் செய்து கொண்டான் என்று வாதிடுவது எந்த வகையிலும் பொறுத்தமானது என்று நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

 ஆயினும் வாரியார் அவர்கள் இங்கே விளக்குவதற்கு மனிதன் என்ன தெய்வமாவது விலங்கு கூட தெய்வமாகலாம் என்பதற்காக எடுத்துச் சொன்னாரே அல்லாமல் ராமனைக் காப்பாற்றுவதற்காக ராமனின் செயலுக்கு நியாயம் கற்பிப்பதற்காக எடுத்துச் சொன்னார் என்று நான் கருதவில்லை. வாரியார் அவர்களும் ஒப்புக்கொள்வார் என்றே நான் கருதுகிறேன்.

விலங்குகள்கூட தெய்வமாகலாம் மனிதன் ஏன் தெய்வமாகக்கூடாது?  அண்ணா ஏன் ஆகக்கூடாது என்ற கேள்விகளை அழகுற அவருக்கே உரிய தெள்ளு தமிழில் பின்னிப்பின்னி இங்கே எடுத்துக்காட்டினார்கள்.

முதலில் தெய்வம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொண்டாக  வேண்டும். தெய்வம் என்று ஒன்று தனியாக இருக்கிறதா? தனியாக உட்கார்ந்து கொண்டு காரியம் ஆற்றுகிறதா?  இல்லை என்று வாரியாருடைய நீண்ட பேச்சில் நமக்கு விளக்கி இருக்கிறார் என்று நான் கருதுகிறேன்.

ஆசை - அடுத்த கட்டமாக பற்று -  அடுத்த கட்டமாக அன்பு - அதற்கு அடுத்த மேல் கட்டமாக அருள் -  என்று இப்படியே அடுக்குவதின் மூலம் தெய்வம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது. ஆசையாக இருக்கிறது. பின்பு பற்று பருவத்தை அடைகிறது. அதன் பிறகு அன்பு பருவத்தை அடைகிறது. இறுதியாக அருள் என்னும் முதுமை நிலைக்கு வந்து சேருகிறது. அந்த நிலைதான் தெய்வ நிலை என்று வாரியார் அவர்கள் எடுத்துக் காட்டி இருக்கிறார்கள்.

ஆகவே தெய்வம் என்பதற்கு சொல்லப்படுகின்ற வார்த்தைகள் வள்ளுவரே மிக அழகாகக் கூறுகிறார்; தெய்வத்தை தனது குறளில் கடவுள் அதிகாரத்தில் கூட வாலறிவன், தனக்குவமை இல்லாதவன், வேண்டுதல் வேண்டாமை இலான் என்று….   வெறுப்பு விருப்பற்றவனாக, மிகுந்த அறிவு படைத்தவனாக, தனக்கு உவமை இல்லாதவனாக இருப்பவன்தான் தெய்வம் என்று குறிப்பிடுகின்றார்.  

ஆக தெய்வத்திற்கு எந்த எந்த சிறப்புகள் சொல்லப்பட்டதோ உயர்வுகள் கூறப்பட்டதோ அந்த சிறப்புப் பண்புகளுக்கு உரியவராக இருந்தால் அவரை நாம் தெய்வம் என்று சொல்கின்றோம்.

ஒருவனைத் தலைவன் என்கிறோம். அந்தத் தலைவனுக்கு உரிய சிறப்புகள் என்ன? ஒரு இயக்கத்தையோ அல்லது நாட்டையோ வழிநடத்திச் செல்கின்றவன், அந்த இயக்கத்திலே இருப்பவர்களை எல்லாம் கட்டிக் காப்பவன்; அந்த இயக்கத்திலே உள்ளக் கொள்கைகளை உயிர் போல பாதுகாப்பவன்; இவ்வளவு இலக்கணங்களும் பொறுந்தியவனைத் தலைவன் என்கின்றோம். அதைப் போலத்தான் தலைவன் என்கின்ற தனிப்பொருள் கிடையாது. இவ்வளவு இலக்கணங்களையும் பொருந்திய ஒருவனைத் தலைவன் என்கின்றோம்.

அதைப் போல தனக்குவமை இல்லாதவனாக வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனாக, விருப்பு வெறுப்பற்றவனாக, மிகுந்த அறிவுடையவனாக ஒருவர் இருந்தால் அவரை தெய்வம் என்கிறோம்.

தெய்வத்தைவிட உயர்ந்தவனாக வள்ளுவர் மனிதனை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.
எந்த இடத்தில்
”தெய்வம் தொழாள் கொழுனன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”

தெய்வம் என்று சொல்லப்படுகின்ற ஒன்றினைத் தொழாமல் தனது கணவனைத் தொழுதெழுகிற பெண்ணிருக்கிறாளே அவள் பெய்யெனப் பெய்யும் மழை. வேண்டுகின்ற நேரத்தில் பெய்யும் மழைக்கு ஒப்பானவள் என்று பெண்ணைப் பற்றி பாடுகிறார்.


அங்கே தெய்வம் பின்னால் போய் விடுகிறது. மனிதன் முன்னால் வருகிறான். அந்தப் பெண், தெய்வத்தைவிட உயர்வாகத் தனது கணவனைக் கருதுவாளேயானால் அந்தப் பெண்தான் தனது கணவனுக்கு எப்படி ஒரு உழவனுக்கு தேவைப் படுகின்ற நேரத்தில் மழை கொட்டுகின்றதோ அந்த மழையை போன்றவள் என்று வள்ளுவர் எடுத்துக் காட்டுகின்றார்.


இதை வாரியார் விளக்குவாரேயானால் அந்த குறளுக்கு வேறு ஒரு பொருளைக் கூறி நம்மை எல்லாம் சிரிக்க வைத்து இருக்க முடியும். நேற்றுவரை இதற்கு உரை எழுதிய பெரும் புலவர்கள் எல்லாம் தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுத்தெழுகிற பெண்கள் பெய் என்று சொன்னால் மழை பொழியும்.  இப்படித்தான் உரை எழுதப்பட்டிருக்கிறது.


மன்னிக்க வேண்டும் நம்முடைய டாக்டர் மு.வ அவர்கள் எழுதி முடித்திருக்கிற உரை வரையில் கணவனைத் தொழுதெழுகின்றப் பெண் பெய்யென்று சொன்னால் மழை பெய்யும் அது பத்தினித் தன்மையைக் குறிப்பது என்று எழுதி வைத்து இருக்கிறார்கள்.


அப்படியானால் ஓராண்டு காலம் நூறாண்டு காலமாக இல்லாத வறட்சி ஏற்பட்டபோது இந்த காரியத்தை யாரும் செய்ய முன்வரவில்லையா? என்கிற சந்தேகம் நமக்கெல்லாம் எற்பட்டுவிடும்.

அப்படி பெண்களைக் காட்டிக் கொடுக்கின்ற விதத்திலே வள்ளுவர் எழுதி இருக்க மாட்டார் என்பதுதான் நமது நம்பிக்கை. ஆகவேதான் பெய் என்றால் பெய்யும் மழைக்கு ஒப்பானவள் அந்த பெண் என்கிற அருமையான கருத்தாழம் மிக்க பொருளில் உரை செய்திருக்கின்ற பாரதிதாசன் அவர்கள்  இதே குறளுக்கு விளக்கம் தருகின்றார்.

அப்படிப்பட்ட தெய்வம் என்ற சொல்லுக்கு தெய்வம் என்பதற்கு கூறப்பட்ட இலக்கணத்திற்கு ஏற்ப, வேண்டுதல் வேண்டாதவனாக, வாலறிவனாக, தனக்குவமை இல்லாதவனாக  நம்முடைய  தமிழகத்தில் திகழ்ந்தவர்தான் நம் பேரறிஞர் அண்ணா அவர்கள்.


அந்த வகையில் நாம் தெய்வம் என்று சொல்கிறோமே அல்லாமல் , இதுவரையில் கேட்டு அறிந்து இருக்கிற புராணங்களில் கூறப்படுகின்ற தெய்வங்களோடு இணைத்து அல்ல.


வாரியார் அவர்கள் எடுத்துக் காட்டிய தெய்வங்களுக்குரிய சிறப்புகளோடு இணைத்துத் தான் நம்முடைய அண்ணனை அவரும் நம்முடைய குலதெய்வம் நம்முடைய குடும்ப தெய்வம் என்று நாம் அவர் மீது வைத்து இருக்கின்ற அன்பின் காரணமாக   அவர் மீது  நாம் கொண்டிருக்கின்ற பாசத்தின் காரணமாக அதை எடுத்து சொல்கிறோமே அல்லாமல் வேறல்ல என்று நான் சுட்டிக் காட்ட கடமைப்பட்டு இருக்கின்றேன்.


அண்ணா அவர்கள் ஏழை எளிய மக்களுக்காக அடிதளத்து மக்களுக்காக ; சாதாரண சாமான்ய மக்களுக்காகப் பாடுபட்டவர். தெய்வத்திற்கு சொல்லப்பட்ட இலக்கணங்களும் அப்படிப்பட்டவைதான்.


ஆகவேதான் நம்முடைய அண்ணா தெய்வத்திற்கு சமமானவர் என்கிற கருத்தாழ மிக்க நல்ல சிந்தனைச் செல்வங்களை எல்லாம் வாரியார் இங்கே வழங்கி இருக்கிறாரே அல்லாமல், தெய்வம் என்றால் இரண்டுக்கு மேற்பட்ட தலைகளும் கைகளும் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல.

ஆகவே தெய்வமாகி ஆகி விட்டார் என்று நாம் குறிப்பிடுவதெல்லாம் நம்முடைய அன்பை நம்முடைய பாசத்தை காட்டுவதல்லாமல் பிறிதில்லை. என்பதையும் நாம் எடுத்துக் கூறி பேரறிஞர் அண்ணா அவர்களுடைய கொள்கைகளை அவர்களுடைய எண்ணங்களை செயல்படுத்துவதுதான் நமது கடமை என்பதை வாரியார் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள்.

(தன்னுடைய உரையின் இறுதியில் பலத்த ஆரவாரங்களுக்கு கைதட்டல்களுக்கும் இடையே கலைஞர் தன்னுடைய சொற்பொழிவை முடிக்கின்ற பாங்கு அவரது அறிவுத்திறனுக்கும் ஆற்றலுக்கும் சான்றாண்மைக்கும்  எடுத்துக்காட்டாகத் திகழும். அந்த இறுதி வாக்கியங்களைப் படித்துப் பாருங்கள் நண்பர்களே …! )


நான் தொடக்கத்திலே எடுத்துக் காட்டியவாறு சந்திப்பு முடிந்து விட்டது. வாரியார் ரயில் ஏறுகிறார் நெய்வேலிக்கு நான் ரயிலேறுகிறேன் நாளை ஈரோடு செல்வதற்காக.. ஆக இந்த சந்திப்பிற்குப் பிறகு நான் செல்கின்ற இடம் ஈரோடு அவர் செல்கின்ற இடம் நெய்வேலி என்பதை மாத்திரம் நினைவுப் படுத்தி;  இடையிலே சென்னை காஞ்சிபுரத்திலே சந்தித்தோம். ஈரோட்டுக்கு நான் போகிறேன்..  நீங்கள் நெய்வேலி போகிறீர்கள்… ஆனால் நம்முடைய நட்பும் உறவும் நம்மிடத்திலே ஏற்பட்டிருக்கின்ற அண்ணா அவர்கள் உருவாக்கிய பெருந்தன்மை, அரசியல் நாகரிகம், தமிழ்ப்பண்பாடு என்றென்றும் நிலைத்து நிற்கும்…  அது இந்த சந்திப்போடு விடுபட்டுப் போகின்ற தன்மையானது அல்ல என்பதை மாத்திரம் எடுத்துக்  கூறி வாரியார் நம்மிடத்தில் வந்தாரா அல்லது வாரியார் இடத்தில் நாம் சென்றோமா என்பது கேள்வி அல்ல.

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நாம் இருவரும் ஒரு இடத்தில் சந்தித்தோம். அண்ணா அவர்களுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டோம். அவர் சொன்னார் அண்ணா அவர்கள் தெய்வமாக ஆகிவிட்டார் என்று. அவரே சொல்லும் போது நாம் இல்லை இல்லை என்று சொல்லுவதற்கில்லை.

அண்ணா அவர்களை நாம் அண்ணாவாகப் பார்க்கிறோம்; தலைவனாகப் பார்க்கிறோம்; நமது வழிகாட்டியாகப் பார்க்கிறோம்; நம்மை ஆளாக்கியவராகப் பார்க்கிறோம்…

நம்முடைய ரத்தத்தோடு உணர்வுகளொடு கலந்திருக்கிற பேரறிஞர் அண்ணா வாழ்க வாழ்க

"பிள்ளையோ பிள்ளை”- பின்னனி

"பிள்ளையோ பிள்ளை”- பின்னனி

8 July 2014 at 18:12
கலைஞர் செல்வன் மு.க.முத்து சினிமாவில் நடிக்க வந்த கதை பலருக்கு இப்போது தெரியாது. எம்ஜிஆர் கலைஞர் இருவருக்குமான நட்பு முறியவும் எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகவும் மு.க.முத்துவின் திரைப்பட நுழைவுதான் காரணம் என்பார்கள். அவர் நடிக்க வந்ததால் எம்ஜிஆருக்கு தொழில் முறைப் போட்டி உருவானது என்பவர்கள் உண்டு.

 மு.க.முத்து சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று முதலில் அறிவித்ததே எம்ஜிஆர் தான். அந்தசமயத்தில் கழக நிகழ்ச்சிகளிலும் வெளியிலும் முக.முத்து நாடகங்கள் நடத்திவந்தார். அருமையாகப் பாடுவார். தாய்மாமன் தந்த வரம் அது.

ஒருமுறை திருவல்லிக்கேணியில் நாடகம். அந்த நாடகத்தை பார்க்கவந்த படத் தயாரிப்பாளர் ஒருவர் நாடக நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்கிய எம்ஜிஆரிடம் சொல்கிறார். நான் முத்துவை வைத்து படம் எடுக்கலாம் என்று இருக்கிறேன் இதை நீங்கள் இந்த நிகழ்ச்சியில் அறிவித்துவிடுங்கள் என்று.

அதை அறிவித்த எம்ஜிஆர் அதோடு நிறுத்தாமல் அந்த படத் தயாரிப்பாளருக்கு ஒரு எச்சரிக்கை என்று சொல்லி ஒரு கருத்தை வெளியிடுகிறார்.

”முத்துவை நல்லவனாக இன்று ஒப்படைக்கின்றோம். இன்றுபோல் அவரை நல்லவனாகவே திருப்பித் தரவேண்டும்” என்று அந்த மேடையிலேயே சொல்கிறார்.

அந்த பட முதலாளி அதிர்ச்சி அடைகிறார். அவர் ஏதோ அவரிடம் செல்பவர்களை கெடுத்துவிடுவதாக மறைமுகமாக எம்ஜிஆர் குற்றம் சாட்டியதை மனதில் கொண்டு படம் எடுக்கும் முயற்சியில் இறங்காமல் விட்டுவிடுகிறார்.

எதை எம்ஜிஆர் நடக்க வேண்டும் என்று நினைத்தாரோ அது அப்போதைக்கு நடந்தது.

வெளியே பொது மக்கள் என்ன நினைத்து இருப்பார்கள்?  முத்துவின் மீது எம்ஜிஆருக்கு எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா என்று கருதி இருப்பார்கள்..

அதே நேரத்தில் படத்தயாரிப்பாளர் எம்ஜிஆரின் பேச்சில் இருந்த உட்கிடக்கை அறிந்து நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிக் கொண்டு முத்துவுக்கு நடிக்கும் வாய்ப்பை மறுக்க நேர்ந்தது.அது எம்ஜிஆரின் சதிவேலை என்று புரியாது. எம்ஜிஆரிடம் பழகியவர்களுக்கு அவர் உண்மை குணம் அறிந்தவர்களுக்கு அவர் எப்படிப் பட்டவர் என்பது தெரியும். ஆனால் திரையுலகில் அவரைப்பற்றி வெளியில் சொல்ல மாட்டார்கள் . காரணம் பயம் அடுத்து பக்தி (அடிமை).

இந்த நிலையில் முத்துவின் எதிர்காலத்தை உத்தேசித்து அவருடைய திறமைக்கு ஏற்ப சினிமாவில் நடித்தால் நல்லது என்று கருதி எம்ஜிஆரால் யாரும் முன்வராத காரணத்தால் அஞ்சுகம் பிக்சர்ஸ் நிறுவனம் உருவானது.

15 ஆண்டுகால சினிமாத்துறை அனுபவம் கொண்டவரான ஒளிப்பதிவாளர் அமிர்தம்மும் முரசொலி செல்வமும் இணைந்து அந்த நிறுவனத்தை ஆரம்பித்தனர். கலைஞரின் கதையையே தேர்வு செய்தனர். படத்தின் பெயர் “பிள்ளையோ பிள்ளை”
ஈஸ்ட் இந்தியா பிலிம் கம்பனி பிரைவேட் லிமிடெட்  என்ற சினிமா தயாரிக்க நிதிஉதவி செய்யும் கமபனியில் ரூபாய் 75000/- கடன் உதவி பெற்று அஞ்சுகம் பிக்ச்சர்ஸ் அந்த படத்தை எடுத்தது.

கலைஞரின் கதை
கிருஷ்ணன் –பஞ்சு இயக்கம்
கலைஞர் மகனின் அறிமுகம்
விசுவநாதன் இசை

இந்த கூட்டணியில் படம் வெற்றிப் படமாகும் என்ற எதிர் பார்ப்பில் அவுட் ரைட் முறையில் அந்த படத்தை வினியோகஸ்தர்கள் வாங்கினார்கள். படமும் ஓரளவு வெற்றி அடைந்தது. இந்தப் படம் வெளிவந்த போது எம்ஜிஆர் திமுகவில் இருக்கிறார். படத்துவக்க விழாவில் கிளாப் அடித்துத் துவக்கியவர் எம்ஜிஆர். இந்தப் பட சம்மந்தப் பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். முத்துவிற்கு அறிவுரைகள் தந்து இருக்கிறார். தினமும் கர்லா கட்டை சுற்றச் சொன்னார். தனக்கென்று தனி பாணி அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அதே நேரத்தில் முத்துவை தவறான வழி நடத்த சில திரைத்துறை அல்லாத நபர்களையும் ஏற்பாடு செய்து அனுப்பி அவர்களுக்கு உதவி செய்து அந்த இளைஞன் வாழ்க்கையை சீரழித்தவர் எம்ஜிஆர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எம்ஜிஆரை பற்றிய பல நிரூபிக்க முடியாத உண்மைகளில் இதுவும் ஒன்று.

திமுகவை விட்டு எம்ஜிஆர் பிரிந்த பிறகு இந்தப் படத்தைப் பற்றி சில பிரச்சனைகளை தெரிவித்தபோது எம்ஜிஆரின் காழ்ப்புணர்வு - மு க முத்துவை அவர் தொழில் போட்டியாளராகக் கருதினார் என்பதும் சிலருக்குப் புரிந்தது.


அறிவுச்சுடர் மூவிஸ் பெயரில்” நம்பிக்கை நட்சத்திரம்” என்ற மு.க. முத்து நடித்த படத்தை தயாரித்தவர்கள்  திரு.மு.க. ஸ்டாலின் , திரு.சி.சிட்டிபாபு M.P திரு. ஆர்.கே சின்னதுரை என்பது கூடுதல் தகவல். 

கழகம் கண்ட முதல் இரணகளம் - குன்றத்தூர்

கழகம்  கண்ட  முதல்  இரணகளம் -  குன்றத்தூர் 

குன்றத்தூர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுஊர். ஆனாலும் சரித்திரப் புகழ்ப் பெற்ற ஊர். அனபாய சோழன் என்ற இரண்டாம் குலோத்துங்கனின் அரசவையில் அமைச்சராக இருந்த பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இந்த ஊரில் பிறந்தவர்.

இன்றைக்கு காஞ்சிபுரம் மாவட்டத் திமுகழகச் செயலாளராக இருக்கும் அண்ணன் திரு தா.மோ. அன்பரசன் அவர்கள் இந்த ஊரில் வசிக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.

திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றிலே முக்கிய இடம் பெற்ற ஊர் இது.  திமுகழகம் உருவான ஒரு வருட காலத்தில் இந்த ஊரில் நடந்த ஒரு நிகழ்ச்சி.. நெஞ்சை பிளக்கும் தன்மையுடையது. ஆம் தடையை மீறி பேச்சுரிமை காக்க ஒன்றுகூடிய கூட்டத்தில் குண்டு வீச்சு நடத்தியது அன்றைய அரசு. மூவர் மாண்டனர்.

1949 செப்டம்பர் 17 ஆம் தேதி திமுகழகம் உருவானது. அந்த காலகட்டத்தில் மைய அரசிலிருந்து வரும் அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவது என்ற ஒரு நடைமுறைப் போராட்டத்தை திமுகழகம் அறிவித்து இருந்தது.

திமுகழகத்தின் கருப்புக் கொடியை முதல் முதல் பார்த்தவர் திரு.ஆர்.ஆர்.திவாகர். அவர் அப்போது மைய அரசில் தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். 1950 செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அவருக்கு சென்னை ,காஞ்சிபுரம், மகாபலிபுரம் ,திருக்கழுகுன்றம் ஆகிய இடங்களில்  கருப்புக் கொடி காட்டப்பட்டது. அந்த போராட்டம் அமைதியாகவும் அறவழியிலும் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடந்தது.

அடுத்து 24-10-1950 அன்று சென்னையில் திரு இராஜாஜி அவர்களுக்கு கருப்புக் கொடி காட்ட திமுக அறிவித்தது. இராஜாஜி  அவர்கள் அப்போது மைய அரசில் உள்துறை அமைச்சர் ஆக அறிவிக்கப்பட்டார். 26-10-1950 ல் அவர் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.  ஆம் இந்தியாவின் இரண்டாவது உள்துறை அமைச்சர். முதல் உள்துறை அமைச்சர் திரு வல்லபாய் பட்டேல் உடல் நலம் குன்றி இருந்ததால் அவர் பொறுப்பில் இருந்த உள்துறை திரு ராஜாஜி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. துணைப்பிரதமராக நீடித்த திரு வல்லபாய் பாட்டீல்  15-12-1950 ல் மறைந்தார்.

திரு இராஜாஜி அவர்களுக்குக்  கருப்புக்கொடி காட்ட அரசாங்கம் தடை விதிக்கிறது. திவாகர் வந்தபோது அனுமதித்த அரசு ராஜாஜிக்கு கருப்புக்கொடி காட்ட அனுமதி மறுக்கிறது. அன்றைக்கு தமிழக முதல்வர் திரு குமாரசாமி ராஜா அவர்களும் காங்கிரசு தலைவராக  திரு காமராஜ் அவர்களும் இருந்தார்கள்.

26-10-1950 அன்று குன்றத்தூரில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு திமுகழகம் ஏற்பாடு செய்தது. அதில் சிறப்புரை ஆற்ற திரு என்.வி.நடராஜன் அவர்களை அந்த பகுதி கழகத்தினர் அழைத்து இருந்தனர். அந்த பொது கூட்டத்திற்கு அன்றைய அரசு தடை விதித்தது.

அதாவது 26-09-1950 அன்று ஒரு வார காலம் 144 தடை போடப்பட்டு அது ஒரு மாதமாக ஆகி இரண்டுமாதம் என நீட்டிப்பு செய்யபடுகிறது. அப்போது குன்றத்தூரில் 144 தடை மீறி பேச்சுரிமை காக்க அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திரு என்.வி.நடராசன் 26-10-1950 அன்று செல்கிறார்.

ஊருக்குள் நுழையும் முன்பே கைது செய்கிறது போலிஸ். ஊருக்குள் திரண்ட மக்களை தடி கொண்டு அடித்தது மட்டுமல்ல துப்பாக்கியால் எட்டு முறை சுட்டு இருக்கிறார்கள்.

நண்பர்களே கவனிக்கவும்,

குன்றத்தூர் இன்றும் சென்னையின் ஒதுக்கு புறமான ஒரு சிற்றூர். 1950 ல் சுமார் 64 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும். அந்த ஒரு சின்னஞ்சிறிய ஊரில் கூட பொதுக்கூட்டம் நடத்த கூடாது என்ற தடை விதித்த சுதந்திர இந்திய காலம் ஒன்று இருந்தது. அந்த அடக்கு முறையை சந்தித்த இயக்கம் திமுகழகம்.

அண்ணா திராவிடநாடு 05-11-1950 இதழில் குறிப்பிடுகிறார் யார் யார் அந்த அடக்கு முறைக்கு ஆளாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று.

”குன்றத்தூர் கொடுமைக்கு இலக்காகி, அகிம்சா ஆட்சியினரால், கைது செய்யப்பட்டு அடக்குமுறைக்கு ஆளானோர்:-

என்.வி.நடராசன்
முனுசாமி
பாலசுந்தரம்
பக்கிரி
மாங்காடு கண்ணப்பனார்
தாமோதரன்
தாந்தோனி
சுப்பராயலு
சி.திராவிடமணி
முத்து
வரதன்
ராஜவேலு
டி.கே.சிவகுமாரன்
காஞ்சி சபாபதி
என்.திருநாவுக்கரசு
காஞ்சி பாலகிருஷ்ணன்
வேலாயுதம்
காஞ்சி ஏழுமலை
சுப்பிரமணியம்

கைதான இருபது தோழர்களில், தோழர்கள் என்.வி.நடராசன், பாலசுந்தரம், ஆகியோர் பூந்தமல்லி சப் ஜெயிலில் கிடக்கின்றனர்.

ஏனைய தோழர்கள் சைதாப்பேட்டை சப் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

குண்டுக்கு இரையானோர் மூவர்.
குண்டடிபட்டு படுகாயமடைந்த மூவரில் கீழ்க்கண்ட இரு தோழர்களும் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் கிடக்கின்றனர்.

பச்சையப்பன்
சாமிநாதன்.


”குன்றத்தூர் கோரத்தாண்டவம்”

”குன்றத்தூர் ஜாலியன்வாலா பாக்”

என்று குன்றத்தூர் நிகழ்ச்சியை குறித்து எழுதிய இரு கட்டுரைகளுக்கு அண்ணா வைத்த தலைப்பு.

அந்த கட்டுரையில்

”மூவர் பிணமென வீழ்ந்தனர். எட்டுமுறை சுட்டத்தில் மூவர் உயிருக்கு ஆபத்து வருமளவு அடிபட்டது! அவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக்கிடந்தனர். அவர்கள் ஆவி, சாவு மண்டலம் போய்த்தான் திரும்பி வந்தது! சாக்காட்டில் விளையாடுந்தோள்கள் என்று பாடிய பரம்பரையினர். உயிர் வெல்லமல்ல என்று ஊருக்கு உரைத்திடும் உத்தமர்கள் வழிவந்தனர். சாவைக்கண்டு சிரித்தவர்கள், ஆறிலும் சாவு நூறிலும் சாவு அது ஒரு இலட்சிய வெற்றிக்காக இருப்பதானால் அஞ்சாமல் ஏற்போம் என்ற வீரர் வழிவந்தோர். ஆகவே அவர்கள் அஞ்சாது நெஞ்சைக்காட்டினர். சுட்டனர். குண்டுகள் பாய்ந்தன. புகை மண்டலத்திலே ‘அந்தோ சாகிறோம்’ என்று கூறத்துடிக்கும் உதடுகளைப் பிரிக்கவும் முடியாமல் வீழ்ந்தனர். அவர்கள் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள். ஆனாலும் உயிரைக் காப்பாற்ற உன்னத இலட்சியத்தைவிடத் தயாராக இல்லை! சாவைக்கண்டு அவர்கள் அஞ்சவில்லை. சாவு தான் அவர்களைக்கண்டு அஞ்சி ஓடிவிட்டது!

இந்த நிகழ்ச்சிக் குறிப்புகள் எங்கு நடந்தன என்று கேட்கிறீர்களா? கொரியா போராட்ட ஒருநாள் வருணைனையல்ல. திபேத் படையெடுப்பின் நிகழ்ச்சிச் சித்திரமல்ல. அகிம்சாமூர்த்தி காந்தி அண்ணலின் வழிவந்தவர்கள் ஆட்சியிலே உள்ள குன்றத்தூர் என்ற சிற்றூரிலே நடந்தது இது!

பேச்சுரிமையைக்காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தினர், 144  தடையுத்தரவை மீறிடத் திட்டமிட்டனர். அறவழியில், முறையும், கட்டுப்பாடும் கைகோர்த்து நிற்கும் வகையில்!

சென்ற 26.10.50 ல் தான் இந்தக்கோரப் போராட்டம்!

ஆண்டிடும் பொறுப்பிலே அமர்ந்துள்ளோர் அக்கிரம் வழி நடந்து ‘அப்பாவி’ மக்களை கொடுமைக்குள்ளாக்கினர் அன்று!

ஆம், குன்றத்தூரில்தான் இந்தக்கொடுமை!

குன்றத்தூர் எதிர்கால திராவிட சரித்திரத்திலே குருதியால் குறிப்பிடப் படும் இடமாகிவிட்டது! வரலாற்றிலே வரும் இரத்தத்தடாகம் கண்ணீர்ப் பெருவெள்ளம் அது! அங்கு பிணவாடை வீசும், நிச்சயம்!”
”குன்றத்தூரில் அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை நம் கண் முன்னால் கொண்டுவந்தால் நெஞ்சு கொதிக்கிறது!

பேச வந்தவர்கள், கொடியெடுத்துச் சென்றவர்கள், துண்டறிக்கைகள் வெளியிட்டவர்கள், சுவரொட்டிகள் ஓட்டியவர்கள், கூட்டங்கூட்டமுயற்சித்தவர்கள்-எல்லோரையும் அடித்து நொறுக்கினர்.

அன்று அங்கு, தலையிழந்த சார்லஸ் மன்னனின் குரலைக் கேட்டனர். பிரஞ்சு லூயியின் உருவத்தைப் பார்த்தனர். ரஷ்ய ஜாரின் ஆவி உலவிற்று. இட்லரின் சாயல் தெரிந்தது. இத்தாலிய முசோலினியின் சிரிப்புக் கேட்டது. குன்றத்தூரில் ஆணவ ஆர்ப்பாட்டம் உச்சநிலைக்குப் போய்விட்டது!

ஆளவந்தாரே, இதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! அறப்போரில் குதித்துள்ள அவர்கள் அத்தனை பேரும் பயணம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்ட பட்டாளம்.  மரண சாசனம் எழுதிவைத்துவிட்டுப் புறப்பட்டுள்ள உரிமைச் சேனை- உயிர் பெரிதல்ல. மானந்தான் பெரிது என்று கூறிடும் போரணிவகுப்பு. ஆகவே துப்பாக்கி முனையை நீட்டி, அவர்களின் தூய இலட்சியத்திலிருந்து பிரித்துவிட முடியாது! குண்டுகள் பாயப் பாய, இன்னும் அதிகமாக மக்கள் திரண்டு நிற்பர்.

‘குன்றத்தூர்’ அவர்களின் உணர்ச்சியைக் குன்றிடச் செய்யவில்லை. ஊக்கத்தைப் பொன்றிடச் செய்யவில்லை- ‘குன்றத்தூரால்’ அவர்கள் உள்ளத்திலே ஒளிவிடும் இலட்சியங்கள் அகன்று விடாது-மேலும் அதிக வலுவாக வளரும்! இதனை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!”
என்று அண்ணா எழுதினார்.

திராவிட முன்னேற்றக் கழகம் உருவான பிறகு கழகம் கண்ட முதல் இரணகளம் ‘குன்றத்தூர்’.

கழக வரலாற்றில் அக்டோபர் 26 ஆம் தேதி மறக்கமுடியாத நாள். மறக்க முடியாத ஊர் குன்றத்தூர். 

மனிதத்தை மறைக்கும் மதச்சின்னம்

மனிதத்தை  மறைக்கும்  மதச்சின்னம்  

4 September 2014 at 16:23
திமுகழக அன்பர்கள் இப்போது எப்போதும் இல்லாத அளவு நெற்றியில் மதக் குறியீடு அணிவதை பார்க்கமுடிகிறது. கழகக் கூட்டங்களில் செயல்வீரர் கூட்டங்களில் அண்ணா அறிவாலயத்தில் எல்லாம்கூட நெற்றியில் திருநீறு / குங்குமம்/ சந்தனம் பூசிக்கொண்டு வருபவர்களைக் காணமுடிகிறது.

திமுகழகத்தில்  கட்சியின் சட்டதிட்டங்கள் பிரகாரம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் உறுப்பினராக தடை இல்லைதான். ஆனாலும் இத்தகைய செயல்கள் ஏற்புடையதா என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவே இந்த பதிவு.

சமதர்ம சமுதாயம் காண மக்களிடையில் விழிப்புணர்ச்சி உருவாக்க பெரியார் தலைமையிலான திராவிடர் இயக்கம் கடவுள் மறுப்புக் கொள்கையையும் முன்னிறுத்தி பரப்புரை செய்தது.

சுதந்திர இந்தியாவில் திராவிட இயக்கத்தின் அரசியல் பிரிவான திமுகழகம் கண்ட அறிஞர் அண்ணா அவர்கள் தம்முடையை அழகுதமிழ் நடையில் பல கடவுள் மறுப்புக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்கள்.
-    பரந்தாமனுக்கு பகிரங்க கடிதம்
-    பரமசிவனுக்கு பகிரங்க கடிதம்
-    தேவலீலைகள்
-    புராண மதங்கள்
என்பவை அண்ணாவின் அருமையான இந்து மத கடவுள் எதிர்ப்பு கட்டுரைகள்.

“மாஜி கடவுள்கள்’ என்னும் இன்னொறு கட்டுரைத் தொடர் மேற்கத்திய புராண கடவுள்களைப் பற்றியது.

மேடைகளிலும் அண்ணாவும் அவருடன் அணி வகுத்து அவருடைய தம்பியரும் நானிலம் நலம்பெற நாத்திகம் பேசினர். நாத்தழும்பு ஏறியவர் என்று அவர்களை வைதீகர் வைதனர்.

அண்ணா அவர்களுடைய பரப்புரை மதங்களில் மண்டிக்கிடந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்தது. பகுத்தறிவுக் கருத்துகளை தன் பேச்சிலும் எழுத்திலும் காலத்திற்கு ஏற்றவாறு பல்வேறு வழிமுறைகளில் அவர் பரப்புரை செய்தார்.
நல்லதம்பி , சொர்கவாசல், ஓர் இரவு, இரங்கோன் ராதா போன்ற திரைப்படங்கள் மூலம் இயக்கக் கருத்துகளை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்க முயன்றார்.

அவர்வழியில் கலைஞரும் இன்னும் பல திராவிட எழுத்தாளர்களும் உருவானார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியாரும் அண்ணாவும் பெரும்பான்மை சமுதாயமாக விளங்கும் இந்திய அரசுரிமை சட்டத்தின்படி இந்துக்களாக இருப்பவர்களை நீங்கள் இந்துக்கள்  அல்ல தமிழர்கள் உங்களுக்கென்று தனி சமய கருத்துகள் இருந்தன.அவை ஆரிய புராண இதிகாச புளுகு கதைகளுடன் தொடர்பு இல்லாதவை என்பதை விளக்கினார்கள்.

”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றும் ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’   என்றும் சமத்துவ சிந்தனையும் எண்ணங்களையும் கொண்டவராக இருந்த தமிழர் ஆரியக் கலப்பால் அவர்தம் ஆதிக்கத்தால் ஆரியமாயைக்கு உட்பட்டு அழிந்து அமிழ்ந்து போன வரலாற்றை நமக்கு உணர்த்தியது திராவிடர் இயக்கம்.

சமுதாயத்திலே திராவிடர் ஆரியர் திணித்த வருண பாகுபாட்டால் அதன் அடியில் விளைந்த சாதிகளால் பிளவுபட்டு சிதைந்து போயினர். சாதிமுறைக்கு நான்மறைகள் ஆதாரமாக இருக்கின்றன. அந்த நான்மறைகளை  நம்தமிழர் ஏற்றனர்.

“நான்மறைஅறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி சிறக்க”
என்றும்
”தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்”
என்றும்
”அரியானை அந்தணர்தம் சிந்தையானை”
என்றும் ஆரியரின் சமயக் கோட்பாடாம் பிராமணீயத்தை தமிழர் ஏற்றனர்.

செந்தன்மை பூண்டு ஒழுகும் செவ்வியரே அந்தணர் என்னும் அறவோர் என்பதே வள்ளுவம் வகுத்த தமிழர் நெறி. இது தெரியாமல் ஆரியப்பார்ப்பனரையும் அந்தணர் என்று வழங்கினர்.

பிராமணீயத்திலிருந்து தமிழர் சமயம் எது என்று பிரிக்க முடியாதபடிக்கு ஆரியம் தமிழரின் வாழ்வியலை மாற்றிவிட்டது. அன்றிருந்த ஆட்சியர் அதற்கு துணை போயினர். ஆரியம் எது தமிழ்நெறி எது என்று எளிதில் பாமரமக்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆதலால் எல்லாவற்றையுமே ஆரியத்திற்கு நிகரானதாக கருதி எதிர்க்கவேண்டிய கட்டயாம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில்தான் பெரியார் கடவுள் மறுப்பு என்னும் ஆய்தத்தை கையில் எடுத்தார்.

ஆரிய ஆதிக்கத்தை முன்னிறுத்தும் பிராமணீயம், பிராமணர்களை முகத்தில் உருவாக்கிய கடவுள், அந்த கடவுளின் பாஷையான சமசுகிருதம், இவைகள் ஒருபுறமும் அதற்கு மறுபுறம் எளிய சூத்திர பஞசம தமிழனும் அவன் மொழியான தமிழும் பலநூறு ஆண்டுகளாக எதிரெதிராகப் போராடி வந்து இருக்கின்றன. சங்க இலக்கியங்கள் திருக்குறள் மற்றும் சித்தர் மரபிலான பாடல்கள் யாவும் இதனை மெய்பிக்கின்றன. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னார் திருமந்திரத்தில் திருமூலர்.

இதன் அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமணீயத்திற்கும் சமசுகிருததிற்கும் சமசுகிருதத்தை மூலமாகக் கொண்ட இந்தி ஆதிக்கத்திற்கும் எதிராக உருவான திராவிட சிந்தனை பெரும் மக்கள் இயக்கமாக மாறியது.
பெரியார் அண்ணா அவர்களுடைய பேச்சும் எழுத்தும் தமிழரிடை பிராமணீயத்திற்கு எதிராக அடி ஆழ்மனதில் அமிழ்ந்து கிடந்த எதிர்ப்பை உசுப்பிவிட்டது.

இன்று தமிழ்நாடு சமூகநீதியிலும் பொருளாதாரத்திலும் முன்னிலும் பல்மடங்கு முன்னேறி இருக்கிறோம். அதற்குக் காரணம் திராவிடச் சிந்தனையே. வெள்ளையர் வெளியேறிய பிறகு பெருந்தலைவர் காமராசர் ஆட்சிகாலம் தொடங்கி இன்றுவரை நாம் அடைந்த சாதனைகள் யாவும் திராவிட சிந்தனையின் பயன்கள் ஆகும். அண்ணா கலைஞர் தலைமையிலான திமுகழக ஆட்சி சரித்திர சாதனைகள் பலவற்றைப் படைத்து இருக்கிறது.

சாதாரண கூலிகளாகவும் தொழிலாளிகளாகவும் வேறு மாநிலங்களுக்கு சென்று அவதிபட்ட தமிழன் இன்று அவ்விதம் போவது இல்லை. வேற்று மாநிலத்தவர் இன்று தமிழகம் வந்து கூலித் தொழிலாளிகளாக வேலை பார்க்கும் நிலை வந்து இருக்கிறது.
திராவிட இயக்கத்திற்கு நேர் எதிர் கொள்கை கொண்ட இந்துத்துவ ஆதிக்கம் செலுத்தும் நோக்கம் உடைய கட்சி இன்று மைய அரசில் பெரும்பான்மை வலுவுடன் ஆட்சிக்கு வந்து இருக்கிறது. இந்த நிலையில் நாம் முன்னிலும் விழிப்புடன் இருக்க வேண்டி இருக்கிறது.

ஒருபுறம் உடன் இருந்தே கொல்லும் நோயாக தமிழரின் ஒற்றுமையின்மைக்கு உலை வைக்கும் சில தன்நல சக்திகள் இருகின்றன. அவைகள் திராவிடச் சிந்தனையை கருத்தை மறுத்து பேசுவதன் மூலம் பரம்பரை பகையான ஆரியத்திற்கு துணை போகின்றன. இந்த சூழலில் தமிழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது.

நாம் தன்மானமுள்ள தமிழனாக வாழவேண்டுமானால் இனமானம் கொண்ட திராவிடனாக நம்மை அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டியதாகிறது. திராவிடத்தின் உட்கூறு சமநீதி சமத்துவம். அதற்கு அடிப்படை மனிதநேயம். அது எந்த ஒரு மதம் அல்லது சாதியும் ஆதிக்கம் செல்லுத்துவதை அனுமதிக்காது.

தீவிர கடவுள் மறுப்பாளரானாலும் தந்தை பெரியார் கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு தக்க மரியாதை தருவதில் தவறியவர் அல்ல. அவர் வீட்டுக்குப் போனால் நெற்றியில் இட்டுக் கொள்ள அவர்களுக்கு அவரே திருநீறு கொடுப்பார். அதுதான் மனித நேயம் என்பது.

ஆதிக்கம் அற்ற சமுதாயம் அமைக்கப் பாடுபடும் அரசியல் இயக்கம் திமுகழகம்.

திமுகழகத்தில் இருக்கும் சாதாரண தொண்டன்கூட  குறிப்பிட்ட மதத்தை அல்லது சாதியை அடையாளப்படுத்தும் எந்த காரியமும் செய்ய துணியாதவனாக இருக்க வேண்டும். அப்படி பலபேர் இன்றும் இருக்கிறார்கள்.  பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு இந்த விசயத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட கொள்கை. பகுத்தறிவாளர்களின் கருத்துகளை ஏற்பதும் விடுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம்.  இதில் யாருடைய வற்புறுத்தலுக்கும் இடம் தரக்கூடாது. அதுதான் கட்சியின் சட்டதிட்டங்களின் உட்கருத்து.

ஆனாலும் பொதுநலத்தொண்டு புரிய திமுகழகம் போன்ற அரசியல் கட்சிகளில் பொறுப்புக்கு வந்தவர்கள்  மத அடையாள குறியீடுகளுடன் பொதுவெளியில் வராமல் இருப்பது நல்லது. அத்தகைய குறியீடுகள் அவர்களுக்கு அவர்கள் சார்ந்த மதங்களின் மீதான பிடிப்பை காட்டுகிறது. அது சரியல்ல.

மதத்தையும் சாதியையும் வைத்து அரசியல் செய்யும் மற்ற கட்சியினரை கொள்கை அளவில் எதிர்க்கும் தார்மீக உரிமையை ஒருசிலரின் இத்தகைய செயல்களால் திமுகழகம் இழக்க கூடாது.

ஆகவே எனதருமை திமுகழக நண்பர்களே கவனிக்கவும்.. பிள்ளையார் சதுர்த்திக்கு  வாழ்த்துச் செய்தி என்பது குறித்து தமிழர்களின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் தளபதி அவர்களின் அறிக்கை கட்சியின் நிலைபாட்டை சரியாக உணர்த்தி இருக்கிறது.

அதை புரிந்து நடப்பது நம் கடமை.  அவர் திராவிடச் சிந்தனையின் வார்ப்பு என்பதை நிரூபித்து இருக்கிறார்.  சரியான நேரத்தில் சரியான கொள்கை விளக்கம் தந்த தங்கதளபதிக்கு வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க தமிழகம்.! வெல்க திராவிடம்.!

கழகமும் கறுப்புச் சட்டையும்

கழகமும் கறுப்புச் சட்டையும்

26 September 2014 at 00:14
திராவிட இயக்கத்தின் நிறம் கறுப்பும் சிவப்பும்..

ஆம் இந்த நாடும் நாட்டு மக்களும் இழிந்த நிலையில் இருப்பதை நினைவுகொள்ள இருட்டறையில் உள்ளதடா இச்சமுதாயம் என்பதை என்றும் நெஞ்சில் நிறுத்திட துக்கத்தின் சின்னமான கறுப்பும் அதை மாற்றும் எண்ணத்திற்கு வித்திட்டு புரட்சிப் பயிரை வளர்க்க செந்நீர் சிந்தி செயல்படவும் தயாராக இருக்க வேண்டும் என்பதை சொல்வதற்கு சிவப்பு வண்ணத்தையும் கொடியில் கண்ட இயக்கம் திராவிடர் இயக்கம்.

1945-ல் திருச்சியில் பெரியார் தலைமையில் திராவிடக் கழக மாநாடு நடைபெற்றது. அப்போழுது அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடக் கழகத்தின் மாநிலச் செயலாளர் அந்த மாநாட்டில்தான், திராவிடக் கழகத்திற்கு என்று கருஞ்சட்டைப் படை அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1946-ல் மதுரையில் பெரியார் அவர்கள் தலைமையில் கருஞ்சட்டைப் படையினர் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் அறிஞர் அண்ணா சிறப்புரை நிகழ்த்தினார். இரண்டாம் நாளில், எதிர்க்கட்சியினரால், வைகையாற்று மணலில் நடைபெற்ற கருஞ்சட்டைப்படை மாநாடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

மதுரை எஸ்.முத்துவும், தொண்டர்கள் பலரும் காலையிலேயே கைது செய்யப்பட்டுவிட்டார்கள்.  தடிகளை ஏந்திக்கொண்டு, பகல் 2 மணி வரையில் தொண்டர்கள் பந்தலைக் காத்து நின்றனர். எதிரிகளின் வலிவான தாக்குதல்களைச் சமாளிக்க முடியவில்லை.

காவல்துறையினரின் பாதுகாப்பு அறவே இல்லை. எதிரிகள் பந்தலை இறுதியில் பகல் 2 மணிக்குக் கொளுத்திவிட்டார்கள். திராவிடக்கழகத் தொண்டர்கள் பலர் பெரும் தொல்லைகளுக்கும், துயரங்களுக்கும் ஆளானார்கள். பின்னர் ஆறு மாதம் எந்தவிதப் பொது நிகழ்ச்சியும் திராவிடக் கழகத்தின் சார்பாக மதுரையில் நடைபெறவில்லை. எதிர்ப்புக்கிடையே எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்பட முடியவில்லை.

பின்னர் மிக்கத் துணிவோடு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில்  பட்டுக்கோட்டை கே.வி.அழகர்சாமியும், மதுரை எஸ்.முத்துவும் கலந்து கொண்டு, கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

1948-ஆம் ஆண்டில், கறுப்புச் சட்டைப் படையைத் தடைசெய்து, அப்பொழுது சென்னை மாநில உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சுப்பராயன் அவர்களால் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது.

1945-க்குப் பிறகு கறுப்புச் சட்டை அணிவதைப் பொறுத்துப் பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் சிறிது கருத்து வேறுபாடு இருந்தது. பெரியார், திராவிடக்கழகத்திலுள்ள எல்லோரும் கறுப்புச் சட்டை அணியவேண்டும், எப்பொழுதும் அணியவேண்டும என்றார்.

அறிஞர் அண்ணா அவர்கள கறுப்புச் சட்டைப்படை வீரர்களாகத் தம்மைப் பதிவு செய்து வைத்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுந்தான், கறுப்புச்சட்டை அணியவேண்டும்; அதுவும் படையின் சார்பாகப் பணியாற்றும்போதுதான் அணிந்துகொள்ளவேண்டும என்று கூறினார்கள். 

இந்த நிலையில் கறுப்புச் சட்டைப் படைமீது விதிக்கப்பட்ட தடை ஆணையை மீறி, அதனை உடைத்திடும் நோக்கத்தோடு, பெரியார் அவர்கள், சென்னை மெமோரியல் மண்டபத்தில், கறுப்புச்சட்டை மாநாட்டைத் திடீரென்று கூட்டினார்கள்.
மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் கைது செய்யப்படலாம் என்ற செய்தி செய்தித்தாள்களில் வெளிவந்தது.

அப்பொழுது, அறிஞர் அண்ணா அவர்கள் பெரியார் தன்னை  அழைக்காவிட்டாலும்,  தடையெதிர்த்துக் கூட்டப்படுகின்ற கறுப்புச்சட்டைப் படை மாநாட்டில் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்று அவசரமாக அவர் மகன் திரு பரிமளம் அவர்களுடைய கறுப்புச் சட்டையை (ஜிப்பா) வாங்கி போட்டுக் கொண்டு போனார்.  

அது அவருக்கு நீளமாகவும் தொளதொளவென்று இருந்ததால் அங்கி அணிந்த பாதிரியாரைப் போல  காட்சி அளித்தார். மாநாட்டு மண்டபத்தில், அறிஞர் அண்ணாவைக் கண்டதும் அனைவரும் ஆரவாரித்து, ஒலி முழக்கம் எழுப்பி, வரவேற்று, மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் உணர்ச்சிமிக்க, வீரஞ்செறிந்த பேருரை ஒன்றை நிகழ்த்தினார்கள்.

யாரும் கைது செய்யப்படவில்லை. சில நாட்களக்குப் பிறகு தடை ஆணை திரும்பப் பெறப்பட்டது.
கழகத்தின் கருப்புசட்டை வரலாறு இப்படிதான் தொடங்கியது..


காரிருளைக் கிழித்து செங்கதிரைப் பரப்பும்  உதயசூரியனை சின்னமாகக் கொண்டது திராவிடர் இயக்க அரசியல் பிரிவு திமுகழகம்.

மதுவென்னும் மயக்கம்

கள்ளுண்ணாமை – மதுவிலக்கு 
3 November 2014 at 15:37
மதுவிலக்குக் கொள்கையைப் பற்றியும் மதுவிலக்கு நடைமுறைப் படுத்துவதில் உள்ள சாத்தியம் பற்றி இப்போது ஊடகங்களில் சர்ச்சிக்கப் படுகின்றன. மதுவிலக்கு வேண்டுமா வேண்டாமா என்பது அலசப்படுகிரது.

மதுவிலக்கு இல்லாத சூழலில் அரசாங்கமே சில்லறை வணிகம் மூலம் மதுவை விற்பனை செய்யும் நிலமையில் இத்தகைய கேள்விகள் பலராலும் எடுத்து வைக்கப்படுவதும் கருத்துப் பரிமாற்றம் செய்வதும் நல்ல போக்கு என்றுதான் சொல்ல வேண்டும்.

குடிப்பவர்கள் எண்ணிக்கை குறிப்பாக தமிழகத்தில் கூடுதலாகி வருவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. குடிப்பது என்பது நற்செயல் அல்ல என்பதான கருத்து ஒரு காலத்தில் நிலவியது. குடிப்பவர்களே கூட அந்த கருத்துக்கு மதிப்பு கொடுத்தனர். பெரியவர் பெண்கள் சிறுவர் குழந்தைகள் முன்பு குடிப்பதோ குடித்துவிட்டு வருவதோ சரியல்ல என்ற கருத்து நிலவியது.

ஆனால் இன்றைக்கு குடிப்பது என்பது மிகச் சாதாரணமாகக் கருதப்படுகிறது. தவறு அல்ல என்றும் வாதிடப்படுகிறது. நாளுக்கு நாள் குடிப்பவர்கள் எண்ணிக்கை கூடுதல் ஆகிறது. மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வருமானம் வருவதாகச் சொல்கிறார்கள். அரசு வருமானத்தில் பெரும்பகுதி மது விற்பனை மூலம்தான் வருவதாகச் சொல்கிறார்கள். இப்படியான நிலமை சரியானதுதானா?

2000 ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் கள்ளுண்ணாமை என்னும் தலைப்பில் 10 குறட்பாக்களில் மதுக்குடிப் பழகாமையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறார். அப்பொழுதிருந்தே தமிழகத்தில் கள் என்னும் மதுவை குடிக்கும் பழக்கம் இருந்தது என்பது தெரியவருகிறது. அதன் தீமைகளும் தெரிந்து இருக்கின்றன. ஆனாலும் அப்பழக்கம் விலக்கப்படவில்லை. தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.

பழந்தமிழ் இலக்கியத்தில் வரலாற்று செய்திகள் அகழ்வாராய்ச்சி குறிப்புகள் மூலம் இதைப் பற்றிய பல செய்திகள் கிடைக்கின்றன. ஆண்களும் பெண்களும் சேர்ந்தே குடித்ததாகத் தெரிகிறது. அரசர்கள் தனியாகவும் புலவர்களோடு சேர்ந்தும் குடித்து இருக்கிறார்கள். படை வீரர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

"நாள் கள் உண்டு நாள் மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த விழை அணி நெடுந்தேர்
பயன் கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே"

புறநானூறு 123-ஆவது பாடல் இது. கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது.
இதன் பொருளைச் சரியாக சொல்ல வேண்டுமானால்

 “காலையில கள்ளக் குடிச்சிட்டு கண்ணுமண்ணு தெரியாம கேட்கறவனுக்கு தேரினை  அதான்பா அந்த காலத்து காரை எடுத்துகிணுபோ என்று சொல்றது ரொம்ப சுளுவு. ஆனா எங்க ராசா மலையமான் அப்படில்லாம் கிடையாது. கள்ள குடிச்சி மயங்காமலயே அவன் குடுத்த தேர்கள் முள்ளூர் மலையுச்சியில் விழும் மழைத்துளிகளை விட கூடுதலானது. மயக்கதில குடுப்பது செயற்கை. மயங்காமல் குடுப்பது இயற்கை”

மட்டு வாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டான்றானாக் கொழும் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே இனியே
பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர் வார் கண்ணேன் தொழுது நிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிரும் கூந்தற் கிழவரைப் படர்ந்தே"

புறநானூறு 113ம் பாடல் இது. இதுவும் கபிலர் பாடியது பறம்பு நோக்கிப் பாடியது.

பறம்பு மலையை ஆண்ட பாரி இறந்த பிறகு பாரிமகளிர் இருவருக்கும் திருமணம் செய்ய பாரியின் நண்பர் கவிஞர் கபிலர் முயல்கிறார். அப்போது பாரி ஆண்ட பறம்பு மலையை நோக்கிப் பாடுவதாக இந்த பாடல் அமைகிறது.

அதில் முதல் நான்கு வரிகளுக்கான பொழிப்புரை ”மது இருந்த பானை வாயை திறக்கவும் இன்னொரு பக்கம் கருப்பு ஆட்டுக்கிடாயை வீழ்த்தவும் அவை  சேர்த்து சமைக்கப்பட்டு தீரவே தீராத அளவிற்கு சுவையான துவையலும் ஊனும் கலந்த சோற்றை தொடர்ந்து தரும் செல்வம் நிறைந்த எங்களுடன் நட்புடன் இருந்தாய் முன்னர்.”

அதன் பொருள் ”மதுவோடு ஆட்டுக்கறி சேர்த்து சமைத்து கலந்த சோறுடன் தொட்டுக்க துவையலும் தொடர்ந்து வழங்கிய வளம் பொருந்திய எங்களுடன் நட்புடன் இருந்தாயே முன்பு” என்பதுதான்.

இதிலிருந்து நமக்குத் தெரிவது அந்த காலத்தில் தமிழர் ”தண்ணி” அடித்தார்கள் என்பது மட்டும் அல்ல அதைக் கலந்து சமையல் செய்த ‘கிச்சன் கில்லாடி’களாகவும் இருந்து இருக்கிறார்கள். Food&Wine கலாச்சாரம் நாம் நினைப்பது போல் மேற்கத்தியர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல என்பது தெரிகிறது.

மகாபாரதம் இராமாயணம் மற்றும் பல வடமொழி வேதநூல்களிலும் அக்காலத்தில் இந்திய மக்கள் மதுஉண்டனர் என்பதற்கான குறிப்புகள் உள்ளன.

செளத்ரமணி என்று ஒரு வேள்வி அதில் ரிஷிகள் குடித்துவிட்டு ஆடுவதே  தலைமையான நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. நீலகேசி என்னும் தமிழ் காப்பியத்தில் பூதிகன் என்னும் ஆரியப் பார்ப்பனரிடம் நீலகேசி நீங்கள் எல்லாம் யோக்கியமா என்பது போல் வாதிடும் போது இந்த குறிப்பு வருகிறது.

தமிழகத்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவைகளில் அதிகமானது மதுச்சாடிகள். அவைகள் சீனம் கிரேக்கம் பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டவை என்பதால் அக்காலத்தில் அரசர்களும் செல்வந்தர்களும் இறக்குமதி செய்யப்பட்ட மதுவை குடித்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது. 

கள் – தேரல் என்பவை பனை தென்னை ஈச்சை போன்ற மரங்களில் இருந்து பெறப்படும் சாறு அல்லது வடிநீர்.

போதை இன்பம் காண விரும்புவர் இதனை அருந்தி களித்து இருக்கின்றனர். போதைத் தலைக்கேறி சிலர் செய்யும் சேட்டைகளால் , போதையில் தாம் என்ன செய்கிறோம் என்பதறியாமல் சிலர் குற்றம் செய்யவும் நேர்வதால் போதை தவிர்க்கப்பட கள்ளுண்ணாமை வலியுறுத்தப்படுகிறது.

திருக்குறளில் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் வள்ளுவர் உளவியல் அடிப்படையில் கள்ளுண்ணாமையை பெரிதும் வலியுறுத்துகிறார்.

மது குடிப்பதால் மதிப்பை இழந்துவிடுவார்கள், பகைவர் பயப்படமாட்டார், சான்றோர் விரும்ப மாட்டார், பெற்ற தாய்க்கு துன்பம் தரும், நாணம் என்னும் நற்பண்பு இல்லாமல் போகும், தன்னிலை மறக்கும் போதை வரும், உயிர் போக்கும் நஞ்சு போன்றது, நிதானம் தவறி  (உண்மை) உளறுவர் மனமயக்கமும் உடல் சோர்வும் தரும் என்றெல்லாம் வள்ளுவர் சொல்கிறார்.
உடல்நல அடிப்படையில் வலியுறுத்தப் படுவதைவிட உளவியல் அடிப்படையில் அவர் அதிகமாக வலியுறுத்தவதைக் காண முடிகிறது.

இவைகளை எல்லாம் சீர்தூக்கின் நாம் அறிவது அக்காலத்தில் உடல் நலனுக்கு தீங்கு தருவதாக மக்கள் கருதினர் இல்லை. மேலும் உடல் நலனுக்கு ஏற்றது என்ற கருத்தும் நிலவி இருக்கிறது.

இது பற்றிய கருத்துகளையும் சிந்தனைகளையும் மேலும் தொடர்வோம்…

இன உணர்ச்சியை அணையாது காப்போம்

 1975 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 தேதி சென்னையில் அண்ணா சாலையில் கலைஞர் சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையை திறந்து வைத்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அந்த சிலையை வைக்க ஆசைப்பட்டவர் தந்தை பெரியார். அந்த சிலையை வைத்து பெரியரின ஆசையை நிறைவேற்றியவர் அன்னை மணியம்மையார்.

அந்த நிகழ்ச்சியில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பேசும்போது:

”ஆயிரம் சிறப்புகள் தமிழனுக்கு உண்டு. அதற்குள்ளே ஒரே இழிகுணம் உண்டு. ஒரு தமிழன் வாழ இன்னொரு தமிழன் பொறுத்துக் கொள்ளமாட்டான். ஆகவே இனவழிபட்ட பகைமை இருக்கிறதே அது தமிழனுக்கு அதிகம். எனவேதான் தமிழ் இலக்கிய சுவடிகளைப் புரட்டினால், அய்யா (பெரியார்) அவர்களுக்குக் கூட கோபம் வரும் சேரனை பாண்டியன் அடித்தான் பாண்டியனை சோழன் அடித்தான் இதுதானே என்று பேசுவார்.”

”தமிழினத்தின் ஒருமைப்பாட்டை நாம் கட்டிக் காக்கத் தவறியதால்தான் நாடாண்ட தமிழினம் கிழக்காசிய நாடுகள் முழுவதும் பரவி வாழ்ந்த தமிழினம் அந்த நாடுகளில் எல்லாம் தனது கலையை – கொற்றத்தை- வாழ்க்கை நெறிகளைப் பரப்பிய தமிழினம் வீழ்ந்துபட்டது என்று சொன்னால் அறிவினுடைய ஆற்றல் குறைவினால் அல்ல ஆளுமைத் திறன் இல்லாதாதினலும் அல்ல, அவர்களுக்குள்ளே ஏற்பட்ட பகை இருக்கிறதே அதுதான் காரணம். அதனால்தான் உலகப் பொதுமை பெசிய திருவள்ளுவர் கூட குடிசெயல் என்ற அதிகாரம் வைத்தார்.”

”நீ பிறந்த குடியை ஆளாக்கு; நீ பிறந்த குடியை வளர்த்துவிடு; நீ பிறந்த குடிக்கு இடையூராக நிற்காதே என்றார்.”
அப்படி சொல்கிறபோது சொன்னார்; மூன்று கடமைகளைப் பின்பற்றினால் தமிழினம் வளரும் என்று சொன்னார்.

முதல் கடமையாகச் சொன்னார்- எந்த கடமையை செய்யவும் நாள் பார்க்காதே, பருவம் பார்க்காதே என்றார். பஞ்சாங்கங்களுக்கு நாம் அடிமையாக இருக்கும் வரை நிச்சயமாக நமது முயற்சிகள் தடைபடும். நம்முடைய நாட்டில் இருக்கிற வேடிக்கை – முற்போக்குப் பத்திரிகை என்று தலையிலே போடுவார்கள்- கீழே ராசிபலனையும் போடுவார்கள் .இதிலே எது முற்போக்கு என்று தெரியவில்லை.

அடுத்து மடி செய்யாதே – சொம்பலை செய்யாதே- நாளை செய்யலாம் என்று ஒத்தி போடாதே – இன்றே செய் என்றார்.


மூன்றாவது முக்கியமானது மானம் பார்க்காதே – நீ தமிழனொடு தமிழனாக வாழும் போது உன்னுடைய தமிழனிடம் நீ மானம் பார்க்காதே- அவனிடத்தில் தோல்வி அடையாதே – பெருமையாக இரு என்றார்.

இந்த குறளைக் கூட எனக்கு எடுத்துச் சொன்ன ஆசிரியர் யார் என்று சொன்னால் – ஒரு தடவை நானும் அய்யாவும் திருநெல்வெலிக்குச் செல்ல திருப்பரங்குன்றத்தில் இருந்து ஒரே காரில் பயணம் செய்கிறோம்.

கொஞ்ச நேரம் போனதும் தன்னுடைய பையில் இருந்து திருக்குறள் புத்தகத்தை எடுத்து இந்தத் திருக்குறளைக் காட்டி படித்தீர்களா என்று கேட்டார். நான் படித்துப்பார்த்தேன். – அய்யா சொன்னார் – மானம் பார்க்காதே- என்று போட்டு இருக்கிறார்களே ஏன் தெரியுமா? – நான் தமிழர்கள் என்று சொன்னால் தமிழன் வசை செய்தாலும் பரவாயில்லை- அவன் தமிழனாக இருந்து வசை செய்து கொண்டு போகட்டும்என்று சொல்வது எனக்கு வழக்கம் என்றார்.

தமிழன் தமிழனிடத்திலே பெருமை சிறுமை பாராட்டாதீர்கள் என்று திருவள்ளுவர் சொன்னார்.
இந்த அடிப்படை பண்பைத் தமிழினம் என்றைக்குப் பெருகிறதோ அன்றைக்குதான் நம்முடைய இனம் மீண்டும் வளர்ச்சி அடைய முடியம்.

பெருகின்ற எழுச்சி அப்படியே பாதுகாக்கப்படும் என்று எண்ணாதீர்கள். ஏற்றிய அடுப்பை அணையாமல் ஊதி வளர்த்துகொண்டே இருப்பது போல , எழுச்சி கொண்ட இன உணர்ச்சி தொடர்ந்து பாதுகாத்தால்தான் அது நம்மிடத்திலே  ஒழுங்காக இருக்கும். இல்லையானால் நாலிரண்டு எலும்பு துண்டுகள் வந்து விழுந்தால் நம்மவர்களில் கூட சிலபேர் நிலைகலங்குவார்கள். அதற்குப் பிறகு இலட்சியக் கோட்டைகள் தளர்ந்து விழும் நிலை வந்துவிடும்.

எனவே அண்ணா அவர்கள் ஒரு கற்பனை சொன்னார்கள்.
அண்ணா அய்யா அவர்களைப் பிரிந்திருந்த காலம். மற்றவர்களுக்கு அது எவ்வளவு சவுகரியமாக இருக்கும் என்று கருதுகிறீர்கள். ?

இரண்டு பேர்களுக்கு இடையே இலேசான மனமாறுதல் ஏற்பட்டு இருக்கிறது என்றால் அதை அகலமாக்குகின்ற நிபுணர்கள் நம்முடைய நாட்டிலே உண்டு.

அண்ணா அவர்கள் எழுதினார் “கொய்யாப்பழம் பறிக்கப் போகும் போது கருநாகம் காலைக் கடிக்க வருகிறது.”  நம்முடைய நோக்கம் கொய்யாப் பழத்தைப் பறிப்பது. அதற்காக நாம் ஏறுகிறோம். காலிலெ கருநாகம் சுற்றிக் கொள்கிறது..கடிக்க வருகிறது. நாம் கொய்யாப்பழத்தைப்  பறிப்பதற்கு நாகம் கடித்து சாவதா? என்று கேட்டுவிட்டு கொய்யாப்பழம் திராவிடர் கழகம் அதைப்பறிக்க புசிக்க ருசிக்க ஆசைதான் ஆனால் காலைச் சுற்றி கடிக்க வருகிறது இந்த நாட்டு மேட்டுக்குடி சாதி ஆதிக்கம் என்ற் கருநாகம் ஆகவே கொய்யாபழத்தை இழந்தாலும் இழப்பேன் இந்தப் பாம்பு கடித்து சாகமாட்டேன். முதலில் அதைக் கொல்லத்தான் முயல்வேன் என்று எழுதினார்.

அதனால்தான் நாடே வியக்கின்ற அளவுக்கு எவ்வளவு இழிவாகப் பேசினாலும் அதைத்தாங்கிக் கொள்கிறவர்கள் இருக்கிறார்களே அவர்கள் துறவிகளைவிடப் பெரியவர்கள் என்று வள்ளுவர் சொன்னார்.

நம்முடைய நாட்டுத் துறவிகளின் கதைகளைப் படித்தால் பெரிய சாபங்கள் இட்ட வரலாறுகள் அதிகம். அவர்களுக்கு கோபம் வந்தால் சபித்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் மகரிஷிகள் என்று புராணங்கள் சொல்லுகின்றன. அண்ணா அவர்கள் மற்றவர்கள் இழித்தும் பழித்தும் பேசிய போதும் கூட அதைத் தாங்கிக் கொண்டு மறு வார்த்தை பேசாமல் இருந்தார் என்றால் ஒரே ஒரு காரணம் – இனமானம்..

காரைக்குடி விழாவில் கலந்துகொள்ள அண்ணா அவர்கள் வந்தார்கள் . அதற்கு முன்பு நான் அவர்களை எழுத்தில் பேச்சில்தான் சந்தித்து இருக்கிறேன். சில சமயம் தொலைப்பேசியில் பேசியிருக்கிறேன்.

அவர் விழாவிற்கு வந்தார் என்றதும் மடத்துக்கு வருமாறு அழைத்தேன். இரவு உணவுக்கு வருவதாக ஒப்புக் கொண்டார். அப்போது நானும் அய்யாவும் வீரமணியும் வேறு ஒரு பேராயக்கட்சியை ஆதரித்துப் பேசிக்கொண்டு இருந்தோம்.
அண்ணா அவர்கள் வந்ததும் மிக அமைதியாக நான் கேட்டேன் : நீங்கள் யாருடனோ கூட்டு வைத்து இருக்கிறீர்கள் அது எந்த அளவு பயன் அளிக்கும்; அவர்களோடு கூட்டுச் சேர்ந்து எவரும் வெற்றிப் பெற்றதாக வரலாறு இல்லை; அவர்கள் வழியில் தான் அழைத்துச் செல்வார்களே தவிர நம்முடைய வழியில் வரமாட்டார்களே என்று சொன்னேன்.

உடனே அண்ணா அவர்கள் எப்போதும் போல் இரண்டே வரிகளில் சொன்னார்கள் “அவர்கள் நம்மைஉபயோகப்படுத்திக் கொள்வதைப் போல் நம்மால் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ள முடியாது என்றுநம்புகிறீர்களா? என்று கேட்டார். அவ்வளவு பெரிய தலைவர் முன்னால் அதற்கு மேல் என்ன பேசுவது?

1967ல் அவர் அவர்களைப் உபயோகப்படுத்திக் கொண்டு அதற்குப் பிறகு யாரிடம் சேர வேண்டுமோ சேர்ந்தார்கள்.  காரணம் தமிழன் என்ற ஒரே காரனத்திற்காக. இன ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அந்த வழியில் நாம் இன்றைக்கு இந்த எழுச்சியைப் பெற்று இருக்கிறோம். பல்வேறு சாதனைகளைப் பெற்று இருக்கிறோம்.
நம்முடைய நாட்டில் ஒவ்வொரு அடியையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று சொன்னால் இன்னும் வலிமையான பிரச்சார சாதனங்கள் நமக்கு இல்லை.

இந்த உணவு நல்ல உணவா என்று தேடி உண்ணுகின்ற தமிழன் இருக்கிறான். ஆனால் இந்தக் கருத்து இந்தப் பத்திரிகை  இந்த செய்தி நல்லனவா என்று தேடிப் பார்க்கும் உணர்வு நமக்கு வரவில்லை. அதனால்தான் பெரியார் பத்திரிகைகளையும் சேர்த்து சாபம் கொடுத்தார்.

நமது குறிக்கோள் – சாதிகளை ஒழிப்பது.
நமது குறிக்கோள் தமிழர்களை உயர்த்துவது.
நமது குறிக்கோள் தமிழனின் பண்பாட்டை உலக அளவில் உயர்த்துவது
தமிழனுடையச் செய்திகளை உலகுக்குக் கொண்டு சென்று கொடுப்பது
உலகத்தில் வேறு எந்த இனத்தையும்விட தமிழன் பெருமைக்கு உரியவன் என்பதனை உலகுக்கு அறிவித்தல்

இதற்கு எந்த வகையிலும் மதம் தடையாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய  கடப்பாடு அய்யாவுடன் பழகியதால் எனக்கு இருக்கிறது.

பின் குறிப்பு: கலைஞரின்  சிலை எம்ஜிஆர் மறைந்த போது அதிமுகவினரால் இடிக்கப்பட்டது .


https://web.facebook.com/notes/738439439546796/
முகநூல்  பதிவு  3 July 2014 at 22:48