Friday, January 15, 2016

தீர்கதரிசி - வேலையைப் பற்றி


ஒரு உழவன் அவரிடம் வேலையைப் பற்றி கூறுங்கள் என்றதும்
அவர் பதில் சொன்னார்:

உலகத்தின் உயிர்ப்பாகவும்
உலக ஓட்டத்திற்கு ஈடாகவும்
நீங்கள் வேலை செய்ய வேண்டும்.
மாட்சிமையும் பெருமையும் நாடி
முடிவில்லா எல்லை நோக்கி
பயணிக்கும் பேரணிதான் வாழ்க்கை.

“சும்மா இருப்பவர் காலமாற்றத்தில்
வழிப்போக்கனாக மாறி
அந்தப் பேரணியில் இருந்து விலகிவிடுகிறார்”  

வேலை செய்யும் பொழுது
நீங்கள் புல்லாங்குழலாகி விடுவீர்.
இதயத்தின் வழியாக மூச்சுவிடும் நேரங்கள் இன்னிசையாக மாறும்.
அப்படி எல்லோரும் ஒன்று சேர்ந்து இசைக்கும் போது
உங்களில் நாணல் யார் ஊமை யார் அமைதியானவர் யார்”

“வேலை ஒரு சாபம் என்றும் உழைப்பு ஒரு கெடுவாய்ப்பு என்றும்
உங்களுக்கு எப்போதும் சொல்லப்பட்டிருந்தது”.

ஆனால் நான் உங்களுக்குச் சொல்வது என்ன என்றால்
நீங்கள் வேலை செய்யும் பொழுது
உலகின் நீண்டநாளைய கனவின் ஒருபகுதி முழுமை அடைகிறது.
அந்த கனவு பிறந்த போது அது உங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்படி நீங்கள் உழைப்பாளியாக இருப்பது
உண்மையில் விரும்பி வாழவே”.

உழைப்பின் மூலமாக வாழ்க்கையை நேசிக்க வேண்டும்.
அதற்கு நீங்கள் வாழ்க்கையின் ஆழ்மன இரகசியத்தோடு
மிக நெருக்கமாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு வலி ஏற்படும் போது
வாழ்க்கை துன்பகரமானது என்பீர். - மேலும்
இந்தச் சதைப்பிண்டத்தை தாங்குவதே
எழுதப்பட்ட சாபம் என்பீர் - ஆனால்
நான் அப்படி சொல்ல மாட்டேன்.
நெற்றியில் எழுதியதை அழிப்பதே
நெற்றி வியர்வைதான் என்பேன்

“வாழ்க்கை இருளானது என்றும்
உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
களைத்து போனவர்கள் கதைத்தது
நீங்கள் களைப்பில் இருக்கையில் எதிரொலிக்கிறது.

“நான் சொல்கிறேன் வாழ்க்கை இருளானதுதான்
விருப்பம் இருக்கும் போது விளக்கேற்றுவீர்.
எல்லா விருப்பங்களும் குருடானவைதான்
அறிவிருக்கும் போதே விளங்கிக்கொள்வீர்.
எல்லா அறிவும் வீணானவைதான்
பணியில் இருக்கையிலே சம்பதித்துவிடுவீர்.
எல்லா பணியும் காலியானவைதான் - அதன்மீது
அன்புவந்த போதே அதை ஏற்றுடுவீர்.

அன்புடன் அந்தப் பணி செய்கையில்
நீங்கள் உங்களோடும் மற்றவரோடும் இறைவனோடும்
கட்டுண்டு போகிறீர்.

அன்பான வேலை என்னவென்றால்,
உன் அன்பிற்குரியவர் அணிவதற்கு - நீங்கள்
இதயத்தால் நூற்ற நூலில் துணி நெய்வது ஆகும்.
அவர் வாழ்வதற்கு வாஞ்சையுடன் வீடு கட்டுவது ஆகும்.

உங்கள் அன்பிற்குரியவர் பழங்கள் உண்பதற்கு
அவர்கள் மகிழ்வுடன் மகசூலை அறுவடை செய்ய
நீங்கள் இரக்கத்தோடு விதை ஊன்றுவீர்.

தெய்வம் ஆனவர்கள் உங்களைச்
சுற்றி நின்று கவனிக்கிறார்கள் - என்பதறிந்து
உங்கள் உயிர் மூச்சின் அணுகுமுறைகள்
முழுவதற்கும் பொறுப்பேற்பீர்

மண்ணை நோண்டும் உழவனைவிட
தன் உயிருருவை கல்லில் காணும்
பளிங்குக்கல் தச்சன் மேன்மை மிக்கவன்.
கால்களுக்கு செறுப்பு தைக்கும் சக்கிலியைவிட
மனிதனின் எண்ணங்களுக்கு ஏற்ப வானவில்லைப் பிடித்து
துணியில் கிடத்தும் நெசவாளன் மேலானவன்”. என்று
உறக்கத்தில் உளருபவர் போல் அடிக்கடி
நீங்கள் சொல்வதை நான் கேட்டு இருக்கிறேன்.

ஆனல் தூக்கக் கலக்கத்தில் இல்லாமல்
நண்பகல் நேரத்து விழிப்புடன் சொல்கிறேன்,
காற்று கருவாலி மரத்துடன் அல்ல புல்லிதழோடுதான்
மிகவும் இனிமையாக பேசுகின்றது.

காற்றின் ஒலியை தன் அன்பால் இன்னிசையாக மாற்றும்
ஆற்றல் கொண்டவனே பெருமைக்கு உரியவன்.

உழைப்பில் அன்பைக் காணலாம்.
ஒரு வேலையை அன்பில்லாமல்
விருப்பம் இல்லாமல் செய்வீர்களானால் - அதைச்
செய்யாமல் விடுவது நல்லது. - அதற்கு பதில்
கோயில் வாயிலில் உட்கார்ந்து -  அங்கு
உவப்புடன் வரும் உழைப்பவர்களிடம்
பிச்சைக்  கேட்கலாம்

துக்கத்துடன் சுடப்படும் ரொட்டி
கசப்பாவதுடன் அரைவயிற்றுப் பசிக்கும் ஆகாது
எரிச்சலுடன் பிழியப்படும் திராட்சைப் பழச்சாறு
நஞ்சு கலந்த மதுவாக மாறும்.

நீங்கள் தேவதைகள் போல் பாடினாலும்
அன்பில்லாமல் பாடினால்  
இரவும் பகலும் எவர் குரலையும் கேட்கவிடாமல்

மனிதரின் காதுகளை பொத்துவதற்கு ஒப்பாகும் 

No comments: