Monday, December 21, 2015

அமைப்போம் மீண்டும் அண்ணாவின் சீரணி

அறிஞர் அண்ணா முதல் அமைச்சாராக இருந்த போது ஒருமுறை திரு ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் வந்திருந்தார். அப்போது அண்ணா அவர்களைப் பார்த்து, ”இன்று மகாத்மா காந்தியடிகள் மட்டும் உயிருடன் இருந்தால் நீங்கள் கொண்டுவந்த இந்த திட்டத்திற்காக உங்களை மார்புறக் கட்டித் தழுவி பாரட்டியிருப்பார்” என்று சொன்னார்.
நண்பர்களே அந்த திட்டம் என்ன தெரியுமா?
அந்த திட்டம் துவக்கப் பட்டபோது அண்ணா சொன்னார்:
”வீட்டுக்காக நாம் இத்தனை மணி நேரம் உழைக்கிறோம் நாட்டுக்காக எத்தனை மணி நேரம் வேலை செய்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். அப்படி சிந்தித்ததில் நாட்டுக்கு தொண்டாற்ற வேண்டுமென்ற அடிப்படையில் உருவானது தான் இந்த திட்டம்”
”வீடு என்று சொன்னால் ஏற்படாத உணர்வு நாடு என்று சொன்னால் ஏற்படுகிறது. இந்த தனித்துவமான உணர்வைக் கொண்டவர்கள் பல்லாயிரவர் நமது நாட்டில் உண்டு. அவர்களது உழைப்பே இந்த நாட்டின் செல்வம். அப்படிபட்ட செல்வத்தைத் திரட்டிடவேண்டும் என்றெண்ணியே இந்த திட்டம் துவக்கப்பட்டது”
புரிந்திருக்கும் நண்பர்களே இப்போது உங்களுக்கு. ஆம் 16-08-1967 அன்று இந்தியாவிலேயே எங்கும் இல்லாத யாரலும் அந்நாள் வரையில் கொண்டுவரப்படாத திட்டம். அது தான் ‘சீரணி’
சீரணியின் நோக்கம் – குறிக்கோள் என்ன தெரியுமா? கலைஞர் அந்த விழாவில் ’சீரணிப் பத்து’ என்று அதைப் பட்டியல் இட்டு சொன்னார்:
1. ஊதியம் பெறா ஓய்வு நேரப் பணியாற்றல்
2. தன்னலம் கருதா பொதுப்பணிப் பேணுதல்
3. தன்மதிப்பையும் தன்னம்பிகையும் வளர்த்தல்
4. உழவும் தொழிலும் வளர உறுதுணை நிற்றல்
5. கல்வி அறிவும் பொது அறிவும் வளர வகை செய்தல்
6. பொதுநலம் காண துப்புரவு பணியேற்றுக் கொள்ளல்
7. தீண்டமைகளை அகற்றல்
8. அன்புவழியாக சமூகக் கேடுகளைதல்
9. திக்கற்றவர்களுக்குத் துணை புரிதல்
10. அறவழி நின்று அனைவருக்கும் உதவுதல்
இந்த சீரணியில் சேர்ந்தவர்கள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய உறுதி மொழி:
”பைந்தமிழ் நாடு பல்வளம் பெறவும், சமூகம் நல் ஏற்றம் எய்தவும், எல்லாத் துறைகளிலும் மறுமலர்ச்சி காணவும், நல்ல ஆக்கப் பணிகள் ஆற்ற நம் தமிழகத்தில் நிறுவப்பெற்றுள்ள சீரணியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான், அதன் நோக்கத்தில் நம்பிக்கையும் கொள்கையில் பற்றும் செயலில் ஈடுபாடும் கொண்டு உள்ளத் தூய்மையோடு காய்தல் உவத்தலகற்றிக் கைமாறு கருதாது கட்டுப்பட்டோடும் கண்ணியத்தோடும் கடமையாற்றுவேன் என்று மனநிறைவோடு உறுதி கூறுகின்றேன்”
இந்த திட்டம் முதலில் சென்னையிலும் பிறகு திருச்சியிலும் பின்னர் படிபடியாக தமிழகம் முழுதும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
சென்னை மாவட்ட சீரணித் தலைவராக திரு நீல.நாராயணன் அவர்களும் சீரணியின் பெண்கள் அமைப்புச் செயலாலராக திருமதி அலமேலு அப்பாதுரை அவர்களும் இருந்து திறம்பட செயல்பட்டனர். சீரணிக்கு என்று ஒரு ஐஏஎஸ் அதிகாரி தனி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார்.
சென்னையில் அடையாறு பகுதியில் முதன்முதல் சீரணியினர் ஒரு பள்ளிக் கட்டிடத்தை கட்டினார்கள்.. அதை முதல்வர் அண்ணவிடம் பிறந்தநாள் பரிசு என்று சொல்லி அண்ணாவை வரவழைத்து திறப்புவிழா செய்தார்கள்.
சென்னைக் கடற்கரையில் சீரணி அரங்கம் கட்டப்பட்டது. (இன்றைக்கு அதுவும் இல்லாமல் போய்விட்டது).
அதே போல் அப்போது கலைஞரை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த சைதாப்பேட்டை தொகுதியில் மேற்கு மாம்பலத்தில் உள்ள மகாதேவ ஐயர் தெருவில் மேற்கு மாம்பலத்தையும் புதூர் என்னும் பகுதியையும் இணைக்கும் புதிய சாலை ஒன்று 900 அடி நீளத்தில் 30 அடி அகலத்தில் போடப்பட்டது..
இப்படி சென்னையில் பல இடங்களில் பள்ளிகளுக்கு சுண்ணாம்பு அடிப்பது, தெருக்களை துப்புரவு செய்வது, கோயில் குளங்கள் தூர் வாருவது என்று பல வேலைகள் சீரணியினரால் செய்யப்பட்டது. ,
இது போல் பல வேலைகள் சீரணி படையினரால் செய்யப்பட்டன. தேர்தல் வெற்றியைவிட சீரணி வெற்றிதான் எனக்குப் பெருமைதரும் என்று அண்ணா அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட திட்டம் சீரணி.
அறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகு முதல்வராக இருந்த கலைஞர் ஆட்சிகாலத்தில் சீரணி திட்டம் திறம்பட நடத்தப்பட்டது.
அரசு பணியில் சீரணியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று 01-10-1975 தமிழக அரசு செய்திக் குறிப்பில் வெளியிட்டு அந்த திட்டத்திற்கு ஊக்கம் கொடுத்தது.
சீரணியை வலுப்படுத்த சீரணியினர் அரிமா சங்கம் ரோட்டரி போன்ற குழுக்களுடன் ஒன்றினைந்து செயல்படவும் ஒத்துழைக்கவும் அரசு தீர்மானத்து அறிவுரைத்தது.
சீரணியின் செயல்பாடுகளில் சிறப்பானது வாரம் ஒருமுறை தெருக்களைச் சுத்தம் செய்யும் துப்புரவு பணி மேற்கொள்வதாகும்.
இதைதான் இப்போது ஏதோ புதிய திட்டம் அவர் தலையில் உதித்தது போல் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ‘சுவச்சி பாரத்’ என்ற பெயரில் துப்புரவு பாரதம் என்று ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தார்.
’குடி மராமத்து’ என்ற சொல்லுக்குப் பொருள் இக்காலத்தில் பலருக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. தமிழில் பல்வேறு கலைச் சொற்கள் இன்றைக்கு வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. ஊரில் உள்ள வாய்க்கால் கரை உடைந்தாலோ ஏரி மதகு பழுதுற்றாலோ குளக்கரை சரிவடைந்தாலோ ஊர்மக்கள் ஒன்றுகூடி அதனை செப்பனிடுவார்கள் சரிசெய்வார்கள். அதற்கு பெயர் குடி மராமத்து என்பதாகும். இத்தகைய ஒரு பொதுநலத் தொண்டுதான் சீரணி.
இத்தகைய பொதுத் தொண்டாற்றும் எண்ணமும் செயலும் தமிழர் மரபில் வாழ்வில் ஓர் அங்கமாக இருந்தவைதான்.
அவற்றை அறிஞர் அண்ணா அவர்கள் தூண்டுகோலாக இருந்து மக்களை நல்வழிப்படுத்தும் திட்டமாக சீரணியை உருவாக்கினார்.
அண்ணா படிக்காத பாமர மக்களுக்காக சீரணி கண்டது போல் கலைஞர் வேலை இல்லா திண்டாட்டத்தைப் போக்க படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு இளைஞர் அணி ஒன்று உருவாக்கினார்,
அவர்களுக்கு மாதம் 150 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. அவர்கள் கிராமபுரங்களுக்கு வேலை செய்ய அனுப்பப்பட்டனர்.
அருமையான திட்டம் - அற்புதமான திட்டம் - அண்ணாவால் துவக்கப்பட்ட திட்டம் - கலைஞரால் தொடர்ந்து செயல் படுத்தப்பட்ட திட்டம் – திரு ஜெயப் பிரகாஷ் நாரயணன் அவர்களால் பாராட்டப்பட்ட திட்டம் விலக்கப்பட்டது. சீரணி கலைக்கப்பட்டது. இளைஞர் அணியும் கலைக்கப்பட்டது
எப்போது தெரியுமா? 1976 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை காலத்தில் கலைஞர் அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நடந்த போது 31-03-1976 ல் சீரணியும் இளைஞர் அணியும் கலைக்கப் படுவதாக கவர்னர் அறிவித்தார்..
அப்போது தமிழகம் முழுதும் சீரணியில் 25000 பேர் இளைஞர் அணியில் 2500 பேர் இருந்தனர். அவர்களுக்கென்று பெரிய அளவில் அரசு செலவு செய்யவில்லை. அவர்கள்தான் இந்த சமுதாயத்திற்காக சொற்ப பலன் பெற்று உழைத்தார்கள்.
இருந்தாலும் திமுகவின் திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக சீரணியும் இளைஞர் அணியும் கலைக்கப்பட்டன.
1977 ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் முதல் அமைச்சராக இருந்த அதிமுக ஆட்சியிலும் இந்த திட்டம் மீண்டும் கொண்டு வரப்படவில்லை.
அப்போது அவர் இலவசங்கள் கொடுத்து மக்களைப் பழக்கி விட்டார். பல்பொடி கூட இலவசமாக கொடுத்த மகராசன் அவர். அவருக்கு சீரணி இளைஞர் அணி போன்ற திட்டங்கள் மட்டமானதாக தெரிந்ததோ என்னவோ. அவர் அவற்றை நடைமுறைப் படுத்தவில்லை.
மீண்டும் கலைஞர் ஆட்சியின் போதுதான் எமர்ஜென்சி கால கவர்னர் ஆட்சியில் கலைக்கப்பட்ட சீரணி இளைஞர் அணிகளுக்கு மாற்றாக மக்கள் நலப்பணியாளர்கள் ,சாலைப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
இவைகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மட்டும் அதிமுக அரசு காலத்தில் கலைக்கப்படாமல் ஓரளவு செயல்படுத்தப்படுகிறது. அதன் வெற்றியால் ஈர்க்கப்பட்டு அந்த திட்டம் தமதென்றும் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டதாகவும் சொல்லிக்கொள்கின்றனர்.
ஆனால் மக்கள் நலப்பணியாளர்கள் சாலைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணியிழந்து வருமானம் இன்றி உயிரையும் இழந்தவர்கள் இவர்களில் பலர். நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் இவர்கள் எல்லோரையும் ஜெயாவின் அதிமுக அரசு ஒவ்வொரு முறையும் துன்பப்படுத்துகிறது.
இந்த நிலையில் 2016 தேர்தல் அறிக்கையில் திமுகழகம் மீண்டும் சீரணியை “அண்ணாவின் சீரணி” என்ற பெயரில் உருவாக்குவோம் என்று தெரிவிக்க வேண்டும்.
அந்த சீரணியில் தற்கால சூழலுக்கு ஏற்ப பழைய முறைகளில் இருந்து சில மாற்றங்கள் செய்து பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கும் பட்டம் பயின்றவர்களுக்கும் தொகுதிக்கு சுமார் 400லிருந்து 500வரை மொத்தம் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று உறுதி அளிக்க வேண்டும்.
இந்த வாக்குறுதி இளைஞர்களை ஈர்க்கும்.

No comments: