Friday, December 16, 2022

திராவிடத்தின் தியாகத் திருமகன்

தியாகம்.எனப்படும் ஈகம் தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக பாவித்து வாழ்ந்த வரலாறு தமிழ்நாட்டுக்கு உரியது. தியாகத்தையும், தியாகிகளையும் மறவாமல் மதித்துப் போற்றும்.அன்பின் அடையாளமாக நடுகல் வழிபாடு உருவானது. இக்காலத்தில் நினைவுச் சின்னங்கள் வைக்கப்படுகின்றன தங்கள் .உறவின் முறையில்.மதிக்கப்படும் பெரியாரைப் போற்றும் விதமாக அவர்கள் புதைக்கப்பட்ட அல்லது எரியூட்டப்பட்ட மயான வளாகத்தில் அவர்களுடைய குடும்பத்தினர் இக்காலத்திலும் நடுகல் போன்று நினைவுச்சின்னங்கள் வைக்கின்றார்கள்.

 

திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையில் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு முதல் முதலாக இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றபோது தமிழறிஞர்கள் 10 பேருக்கு.சென்னை கடற்கரை சாலையில் நினைவுச் சின்னங்களாக சிலைகள் வைக்கப்பட்டன. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டில் பல்வேறு தலைவர்களுக்கு தமிழ் அறிஞர்களுக்கு சான்றோர்களுக்கு நினைவுச் சின்னங்கள், மணிமண்டபங்கள், சிலைகள் என்று நிறுவியதை  யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஆனாலும், சிலர்        தி மு கழகத்தின் மீது சேற்றை வாரி வீசும் விதமாக பேசும் தன்மை இருக்கிறது. 

 

மறைந்த தியாகிகளைக் குறிப்பாக இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களை மதிப்பதில்லை என்று உண்மைக்கு மாறான கருத்தை பரப்புவதில் இன்பம் காணும் ஈனப்பிறவிகள் இருக்கிறார்கள். 09-01-1972.அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் நான்காவது மாநில மாநாட்டில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அந்த மாநாட்டில்.கலந்து கொண்டவர்கள்     .தி மு கழகத்தை, அறிஞர் அண்ணாவை, கலைஞரை வெகுவாக பாராட்டி பேசினார்கள். அந்த மாநாட்டில்.கலந்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர்கள் திரு நா.சோமையாஜுலு, திரு.கிருஷ்ணசாமி பாரதி, காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.டி,ஜி. கிருஷ்ணமூர்த்தி. திரு சுத்தானந்த பாரதி போன்றவர்கள் ஆவர். 

 

மாற்றுக் கட்சியாக இருந்தாலும் சுதந்திர போராட்ட வீரர்களைப்  பற்றி அக்கறையோடு கவனப்படுத்தி தம்முடைய ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு உதவிகளைச் செய்தவர் அறிஞர் அண்ணா. எதிர்க் கட்சியாக இருந்த போதே சீனப் போரின் போது நிபந்தனையின்றி ஒன்றிய அரசுக்கு ஒத்துழைத்து நிதி சேர்த்துக் கொடுத்தவர் அண்ணா. அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் வாஞ்சிநாதய்யரின்  மனைவியாருடைய கோரிக்கையை ஏற்று விடுதலை போராட்ட வீரர் என்று அங்கீகரிக்கப்பட்டு அந்த அம்மையாருக்கு தியாகிகள் பென்ஷன் எனப்படும் உதவித்தொகை வழங்கப்பட்டது.. அதுவரை காமராசர் தலைமையிலான காங்கிரசார் ஆட்சி காலத்திலேயும் வாஞ்சிநாத அய்யருடைய  மனைவியின் கோரிக்கை ஏற்கப்படாமல் கிடந்தது. வாஞ்சிநாதன் அவருடைய செயல்பாடுகள் சுதந்திர போராட்ட.த்தின் பங்கு அல்ல என்று காரணம் காட்டி உதவித்தொகை மறுக்கப்பட்டது என்றாலும் கருணையின் அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சியில் செய்யாததை ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா செய்தார்.

 

கலைஞருடைய ஆட்சிக்காலத்தில்.அப்போது 1972 ஆம் ஆண்டிலேயே 7200 க்கு மேற்பட்டவர்களுக்கு  உதவிப் பணம் வழங்கப்பட்டது என்பதை இந்த மாநாட்டில் பேசியவர்கள் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். திமுகழக ஆட்சியில்தான் ஆகஸ்ட் 15 விடுதலை நாள் கோட்டை கொத்தளத்தில்.கொடி மரத்தின் கீழே அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் பொது விழா ஆனது.  காந்தியடிகளின் பிறந்தநாளும்  பண்டிதர் நேருவின் பிறந்த நாளும் பொது விழாவாக கொண்டாட உத்தரவிட்ட அரசு கலைஞர் அரசு. காமராஜர் பிறந்தநாளை கல்விநாள் என்று அறிவித்து எல்லோரும் கொண்டாடும்படி செய்தவர் கலைஞர். ஆனால் சில நன்றி கெட்ட  நயவஞ்சகக் கூட்டம் இன்னும் கலைஞரை ஏதோ காமராசருக்கு எதிரி போன்று சித்தரிக்க முயல்கிறது. காமராஜருக்கு முதல் முதலாக சிலை வைத்தது திமுகழக நிர்வாகத்தில் இருந்த சென்னை மாநகராட்சிதான். பிரதமராக இருந்த நேருவை அழைத்து சிலைத் திறப்பு விழாவை மிகச் சிறப்பாகச் செய்தது திமுக.

 

வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட.உதவித்தொகை 1952 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு கிடந்தது. ஆனால் அது கலைஞர் முதலமைச்சர் ஆன  பிறகு அறிவிக்கப்பட்டு 18-2-1969 முதல் உதவித்தொகை கொடுக்கப்பட்டது. 

 

‘முன்பு நடந்த சுதந்திர போராட்டத்தில் நீ கலந்து கொண்டாயா?’  என்று கேட்பவர்களுக்கு கலைஞர் சுதந்திர போராட்ட.வீரர்களின் மாநாட்டில் அப்போது பதில் சொன்னார். 

 

சமுதாய ஆதிக்கக்காரர்களை, பொருளாதார ஆதிக்க சக்திகளை, வறுமையை கல்லாமையை  இல்லாமையை எதிர்த்துப்  போராடும் விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் பங்குப் பெற்று வருகிறோம்என்று பதில் சொல்லி மேலும்கூறுகிறார்எங்கள் பாரம்பரியம் கூட விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட.பாரம்பரியம்தான்.  சுதந்திர போராட்டத்தின் அங்கமான வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர் எங்கள் பெரியார். அந்த பெரியார் கூட ஆகஸ்ட் 15 ல் வெள்ளையன் வெளியேறியபோது அது துக்க நாள் என்று அறிவித்தார். அது தூக்க நாள் அல்ல இன்ப நாள் என்று எழுதி பெரியாருடன் கருத்து மாறுபாடு கொண்டு.வெளியே வந்த பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள் நாங்கள். ஆகவே எங்கள் பரம்பரையில் பழுது இல்லை பாவம் இல்லைஎன்று முத்தாய்ப்பாக அந்த மாநாட்டில் முழங்கியவர் கலைஞர். 

 

தியாகத்தை மறவாத திராவிடத் திருமகன் கலைஞர் என்பது வரலாறு காட்டும் உண்மை என்பதை உள்ளத்தில் நல்ல உள்ளங்கள் உணர்ந்தே இருக்கும். 

 


No comments: